மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 41 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சத்யா சக்தி தங்கி இருக்கும் வீட்டை சென்று அடைந்தப் போது, பர்வதம் பாட்டி மும்முரமாக வீடை அழகுப் படுத்தும் வேலையில் ஆழ்ந்திருந்தார்.
பாழடைந்த பேய் பங்களா போல இருந்த அந்த வீடு, சட்டென்று மேக்-ஓவர் பெற்று, அழகு மங்கையாக மாறி இருப்பதைப் பார்த்து வாயைப் பிளந்தாள் சத்யா!
“என்ன மேஜிக் செஞ்சீங்க பாட்டி? அமர்க்களமா இருக்கு!” சத்யா பாட்டியை பாராட்டினாள்.
முகத்தில் சுருக்கங்கள் விழ சிரித்தார் பாட்டி.
“ராஜா இங்கே இருக்கும் போது வீடு அப்படி இருந்தா எப்படி சத்யா? சக்தி தோட்டத்தை அழகாகிட்டா, நான் வீடை சரி செய்ய பார்க்குறேன்!”
“சரி செய்றீங்களா? சின்னதா கூட தூசைக் காணோம். ஃப்ளவர் வேஸ், லைட்டுன்னு அமர்க்களமா இருக்கு. அதிகமா வேலை செஞ்சு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க பாட்டி!”
“இதெல்லாம் செய்யாம இருந்து தான் வயசான மாதிரி இருந்தேன். இனிமேல் பாரு எனக்கு வயசு குறைஞ்சுட்டே போகும்! ஆமாம், சக்திக்கு என்ன ஆச்சு சத்யா? ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. நேத்து நைட் அவ சாப்பிடக் கூட இல்லை!”
அப்போது தான் சத்யாவிற்கு அவள் ஏன் அங்கே வந்தாள் என்பது நினைவுக்கு வந்தது. அவளைப் போலவே சக்தியும் இயல்பாக இல்லை என்பதுப் புரிந்தது.
“எனக்குத் தெரியலையே பாட்டி. வெளியில ஏதாவது வாங்கி சாப்பிட்டு இருப்பாங்க. நான் என்னன்னு கேட்குறேன்!” உண்மையை சொல்லாமல் பாட்டியிடம் இருந்து எஸ்கேப் ஆகி சக்தி தங்கி இருந்த அறைக்கு வந்தாள் சத்யா.
சக்தி வெள்ளை போர்டில் எதுவோ எழுதிக் கொண்டிருந்தாள்.
“சத்யா, எப்படி இருக்க?” திரும்பிப் பார்க்காமலே கேட்டாள் சக்தி.