வாட்ச்மேனை அழைத்து ட்ரைவரை கார் எடுத்து வர சொல்ல சொன்னாள்! ட்ரைவர் காருடன் வந்ததும் போக வேண்டிய இடத்தை சொல்லி ஏறி அமர்ந்தாள்... வழியில், நினைவு வந்தவளாக, உமாவிற்கும், மதுவிற்கும் கோவிலுக்கு போவதாக மெசேஜ் அனுப்பி வைத்தாள்!
🌼🌸❀✿🌷
ஏழு மணி ஆவதற்கு முன்பே பாரதி பவித்ராவிடம் சொல்லி இருந்த பிள்ளையார் கோவிலை சென்றடைந்தாள். ட்ரைவரிடம் காரை பக்கத்தில் எங்கேயாவது பார்க் செய்து காத்திருக்க சொல்லி விட்டு, அவள் மட்டும் காரில் இருந்து இறங்கினாள். பவித்ரா வரும் வரைக்கும் எங்கே காத்திருப்பது என்று யோசித்துக் கொண்டே விழிகளை சுழற்றியவளின் கண்ணில் பவித்ராவும், ரமேஷும் பட்டார்கள்! ஆச்சர்யம் மின்ன அவர்களின் அருகே சென்றாள் பாரதி.
“ஹேய் பவி, நீ எனக்கு முன்னாடியே வந்துட்டீயா? நீ வர லேட் ஆகும்னு நினைச்சேன்...”
பவித்ரா பேசும் முன் அவளை முந்திக் கொண்டு பதில் சொன்னான் ரமேஷ்!
“நல்ல கேள்வி கேட்ட போ பாரதி! உன் கிட்ட நான் எதையோ சொல்லிட்டேன்னு, நேத்தைக்கு நைட்ல இருந்து என்னை திட்டோ திட்டுன்னு திட்டு மழைக் கொட்டிட்டா... சரி இங்கே இவளை ட்ராப் செய்த பிறகாவது கொஞ்ச நேரம் தூங்கலாம்னு தான் சீக்கிரமே அழைச்சிட்டு வந்தேன்...”
பவித்ரா கணவனை பார்த்து முறைக்க, பாரதி புன்னகைத்தாள். ரமேஷ் விளையாட்டாக சொல்வது பாரதிக்கே தெரியும்! ஏன் வீட்டிற்கு வராமல் இங்கே சந்தித்து பேசுகிறீர்கள், என கேள்வி கேட்டுக் கொண்டிருக்காமல், ரமேஷ் அவர்களின் சந்திப்பிற்கு உதவியது பாரதியின் மனதை நெகிழ்த்தியது... ஆனால் அதைப் பற்றி அவனிடம் விளக்கம் கொடுக்க முடியும் என்று தோன்றாததால், அதைப் பற்றி பேச்சை எடுக்காமல் அமைதியாகவே இருந்தாள்!
ரமேஷும் அதைப் பற்றி அதிகம் கேட்டுக் கொண்டிருக்காமல், “சரி, இரண்டு பேரும் சீக்கிரம் பேசிட்டு வீட்டுக்கு வந்து சேருங்க,” என சொல்லி விட்டு கிளம்பி சென்றான்.