“ஏதாவது தப்பா? நீ பேசினதை கேட்டு நானே பயந்து போயிட்டேன்...” என்றாள் உமா கேலியாக!
உணவை முடித்து விட்டு எழுந்த விவேக், தங்கையின் அருகில் சென்று, இடது கரத்தால் அவளின் தலையை வருடினான்.
“நீ வளர்ந்துட்ட மது... ரொம்ப புத்திசாலியா இருக்க! குட்.... உன் அண்ணி மேல உனக்கு இருக்க பாசத்தை பார்த்து எனக்கு கொஞ்சம் பொறமையா இருக்கு... பட் எப்போதும் இதே போல இரு... சரியா?”
விவேக்கின் அமைதியான பேச்சில் பேச்சிழந்திருந்த மது பதில் சொல்லும் முன் அங்கே இருந்து வேகமான நடையுடன் நகர்ந்து சென்றான் விவேக்.
🌼🌸❀✿🌷
கோவிலில் இருந்து ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் பவித்ரா. அவளின் மனதில் பாரதியை வீட்டிற்கு அழைக்க என்ன பொய் சொல்வது என்ற யோசனையே ஓடிக் கொண்டிருந்தது!
பவித்ராவை பார்த்ததும் நித்திலா முகத்தில் சிரிப்பு வந்தது... அத்தோடு கைகளையும் நீட்டி அவள் அழைக்கவும், பவித்ரா மற்றதை எல்லாம் மறந்து தன் மகளை கையில் தூக்கி கொண்டு செல்லம் கொஞ்சினாள்!
“நித்திலா தொல்லை செய்தாளா அத்தை?” என கமலாவிடம் விசாரித்தாள்!
“அதெல்லாம் இல்லை பவித்ரா! ஆமாம், நீ காலையிலேயே எங்கே போன?”
“கோவிலுக்கு போயிருந்தேன் அத்தை...”
“ஓ!” மருமகளை யோசனையோடு பார்த்த கமலா அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.