தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 67 - பிந்து வினோத்
67. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
வீட்டில் இருந்து கிளம்பி பவித்ரா வீட்டிற்கு வந்து சேர்ந்து நிறைய நேரம் ஆனப் பிறகும், விவேக்கின் அந்த ஒரு விதமான ஏக்கம் கலந்த பார்வை பாரதியின் மனதை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது...
ரமேஷ் அலுவலகத்தில் இருந்து வந்த பிறகு, எப்போதும் போல் அவன் கலகலத்துக் கொண்டிருந்தான்... பாரதி தான் அதில் கலந்துக் கொள்ள முடியாமல் ஒதுங்கியே இருந்தாள்.
அவளுக்குள் இருந்த கேள்விகள், குழப்பங்கள் இன்னும் அதிகமாகி இருந்தது... கடந்த சில நாட்களாக நடந்தவற்றை வரிசைப் படுத்தி மீண்டும் நினைவில் கொண்டு வர முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்... ஆனால், என்ன தான் அவர்களுக்குள் பிரச்சனை என்றாலும், முதல் முறையாக திருமணத்திற்கு பிறகு விவேக்கை விட்டு பிரிந்து இருப்பதால், அவளின் மனதை ஒருமுகப் படுத்தி எதையும் அவளால் ஈஸியாக யோசிக்க முடியவில்லை... விவேக்கின் மீது இருந்த அன்பும், அவன் அவ்வப்போது சொன்ன சொற்களின் கடுமையும் பாரதியை மாறி மாறி வருத்திக் கொண்டிருந்தது...!
நேரம் இரவு ஒன்பதை தாண்டவும், அத்தோடு அந்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்துவது என்று முடிவு செய்தாள்... ஆனால், அவள் விரும்பினாலும் படுத்தால் தூக்கம் வர வேண்டுமே? மற்ற நாட்களில் விவேக் இரவு உணவு உண்ண வேண்டும் என்பதற்காக தூங்குவது போல் நடித்து பழக்கமாகி இருந்தது... இன்னும் எத்தனை நாட்கள் அவள் இப்படியே தூக்கம் இல்லாமல் கழிப்பது?
எதனாலோ பாரதிக்கு திரும்பவும் இறந்துப் போன அவளின் அம்மாவின் ஞாபகம் வந்தது... அம்மாவிடம் மனதில் இருக்கும் கவலைகளை, குழப்பங்களை சொல்லி அழுது முடித்து, மடியில் தலை வைத்து தூங்கும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு நலமாக இருக்கும்...
“பாரு... என்ன செஞ்சுட்டு இருக்க?”
பவித்ராவின் குரலில் சிந்தனை கலைந்து நிமிர்ந்து அமர்ந்தாள் பாரதி...
“ஒன்னும் செய்யலை பவி...”