தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
47. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இந்துவின் கண்களில் தயக்கத்தின் சாயல் வந்துப் போனது!
அது புரிந்தாலும், கீதா அவளை அப்படியே விட்டு விடும் மன நிலையில் இல்லை! ஆனாலும் கோபத்தை கட்டுப்படுத்தி,
"சொல்லு இந்து! ஏன் சஞ்சீவ் கிட்ட அப்படி சொன்ன?" என மீண்டும் கேட்டாள்!
கீதாவிடம் இருந்து பார்வையை திருப்பி எழுந்து நின்ற இந்து... மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை கையில் எடுத்து, அதை மேஜை மேலே வைத்து உருட்டிக் கொண்டே,
"ப்ச்... என்ன கீதா அக்கா நீங்க... நான் தான் சஞ்சீவ் கிட்டேயே தெளிவா சொன்னேனே... எங்க இரண்டு பேருக்கும் நடுவுல எந்த விதத்திலும் ஒற்றுமை இல்லை... இதெல்லாம் சரிப் பட்டு வராது..." என்றாள்!
"என்னைப் பார்த்து பதில் சொல்லு இந்து... உன்னை பத்தி எனக்கு தெரியும்... உனக்கு சஞ்சீவ் மேல காதல் இல்லைன்னு என் கிட்டேயே பொய் சொல்லாதே..."
முகத்தை நிமிர்த்திய இந்து, "நான் தான் சொல்றேனே அக்கா..." என்றாள் மெல்லியக் குரலில்!
"அது உண்மை இல்லை...! எனக்கு வீணாக்கு, ஏன் கண்மணிக்கு கூட உனக்கு சஞ்சீவை பிடிக்கும்னு தெரியும்... அவனை பிடிக்காதுன்னு பொய் சொல்லாம, உண்மையை சொல்லு!"
மீண்டும் இந்துவின் கவனம் பேப்பர் வெயிட்டிடம் சென்றது!
"கீதா அக்கா, ப்ளீஸ்... சில விஷயம் எல்லாம் சரிப் பட்டு வராது... இன்னைக்கு முக்கியமா தெரியாத விஷயம் எல்லாம் நாளைக்கு பெரிசா தோணும்... அப்புறம் இரண்டுப் பேருக்கும் கஷ்டம்..."
"அது என்ன அப்படிப்பட்ட விஷயம்? எனக்கும் கொஞ்சம் சொல்லேன்..."