மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 07 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
வாத்தி கமிங் ஒத்து ஒத்து...
சமையல் செய்துக் கொண்டிருந்த சத்யா காதை பொத்திக் கொண்டாள்.
“ஷாலினி சவுண்டை குறைச்சு வை!” சத்யா தொண்டைக் கிழிய கத்தியதற்கு ஒரு எஃபக்ட்டும் தெரியவில்லை.
சில வினாடிகள் பொறுமையாக இருந்த சத்யா அதே வால்யூம் தொடரவும், ஸ்டவ்வை சிம்மிற்கு மாற்றி விட்டு ஹாலுக்கு வந்தாள். அங்கே அவள் மகள் ஷாலினி, பக்கத்து போர்ஷனில் வசிக்கும் சிறுவன் அருண், அவன் அம்மா அஹல்யா மூன்றுப் பேரும் யூ ட்யூபில் பாட்டை அலற விட்டு, கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள். சக்தி ஒரு ஓரமாக உட்கார்ந்து ஃபோனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
தென்றல்வாணன் பணிப்புரியும் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவன் அபினவ். அவனின் மனைவி அஹல்யா. அஹல்யா ஷாலினி படிக்கும் ஸ்கூலில் டீச்சராக வேலை செய்கிறாள்.
“அஹல்யா? என்ன செய்ற? உன் வயித்துல இருக்க குழந்தைக்குப் பிடிச்ச மாதிரி மெலோடி கேட்பீயா? அதை விட்டுட்டு என்ன இது???”
சத்யா ஸ்ட்ரிக்ட் ஆஃபீசராக கேட்டதை கேட்டு அஹல்யா அசடு வழிய சிரித்தாள். ஆனால், வால்யூமை ஒருவரும் குறைத்ததாக தெரியவில்லை.
“ஷாலினி???” சத்யா மீண்டும் மகளை அதட்டினாள்.
“போங்கம்மா, சும்மா மெலோடின்னு நீங்க போடுற கீங் கீங்ன்னு பாட்டு கேட்டு என் காதுல எப்போ பாரு அதே கீங்னு சத்தம் கேட்குது!” அலுத்துக் கொண்டாள் ஷாலினி!
“இந்த மாதிரி சத்தமா பாட்டை போட்டுக் கேட்டா அது என்ன, எதுவுமே கேட்காது! டமாரம் தான்! வால்யூமை குறைச்சு வைன்னு தானே சொல்றேன்,” என்றாள் சத்யா கண்டிப்புடன்.