மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 16 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
மதியூர் திருவிழா கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது. சக்தி நடப்பவற்றை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
போலீசாக இருந்த காலத்தில், அவள் பொதுவாக எந்த பண்டிகைக்கும் லீவ் எடுத்தது கிடையாது. அப்படியே யாராவது கட்டாயப் படுத்தி லீவ் எடுக்க வைத்தாலும் வீட்டுக்குள்ளேயே படுத்து தூங்குவாள். அல்லது புக்ஸ் படிப்பாள்.
எனவே அந்த கிராமத்தின் கோலாகலமான திருவிழாவை சிறுக் குழந்தைப் போல பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
“இரட்டை ஜடை மட்டும் மிஸ்ஸிங்! மத்தபடி பாவாடை, சட்டைல இருந்து எல்லாம் சரியா இருக்கு!” சாந்ததுரை அவளை கேலி செய்தான்.
சக்தி குனிந்து அவளையே பார்த்துக் கொண்டாள். பிரவுன் நிற ப்லீட்டட் ஸ்கர்ட்டும், நீல நிற டாப்ஸும் அணிந்திருந்தாள்.
“என் ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்? நல்லா தான் இருக்கு,” என்றாள் சக்தி!
“யாரு நல்லா இல்லைன்னு சொன்னது? அங்கே பாருங்க. அந்த பாப்பாவோட உங்களை கம்பேர் செய்து சொன்னேன்!”
சாந்ததுரை காட்டிய இடத்தில ஆறு ஏழு வயதான சிறுமி ஒருத்தி பட்டு பாவாடை சட்டை, இரட்டை ஜடை, கொலுசு, வளையல் என முழு அலங்காரத்துடன் அழகாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
“வெரி க்யூட்,” என்றாள் சக்தி ரசனையுடன்!
“நீங்களும் அதே க்யூட் தான்! என்ன இரட்டை ஜடை மட்டும் மிஸ்ஸிங்,” என்றான் சாந்ததுரை உற்சாகத்துடன்.