“நீ தானே தள்ளி உட்கார சொன்ன,” என்றான்.
அவள் கோபத்துடன் பதில் சொல்ல தொடங்கிய நேரம், பக்கத்தில் இருந்த சிவகாமி,
“கண்ணம்மா, கொஞ்சம் நேரம் அமைதியா இருடா! எல்லோரும் பார்க்குறாங்க பாரு,” என்றாள்.
தியாகு பக்கம் சூடாக ஒரு பார்வையை கொடுத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் கிருத்திகா.
அவள் பற்களைக் கடித்துக் கொள்வது அவனுக்கும் புரிந்தது.
ஹப்பா என்ன ஒரு கோபம்...! எப்படி தான் இவளை சமாளிக்க போகிறானோ...? அந்தக் கேள்வியும் கூட ‘என்ன ஒரு வெயில்’ என்கிற பாணியில் வெகு இயல்பாக தான் அவனுள் தோன்றியது! எப்போதும் போலவே, கிருத்திகா எது செய்தாலும் ரசிக்க மட்டும் தான் அவனால் முடிந்தது!
அவள் கழுத்தில் தாலியை அணிவித்தப் போது வேண்டுமென்றே விரலால் அவள் கழுத்தில் அவன் கோடு வரைய, அவள் முறைக்க, அவன் கண் சிமிட்ட என்று தொடர்ந்த அவர்களின் சீண்டலும் – முறைப்பும் தொடர்ந்த எல்லா சடங்குகளிலும் இருந்துக் கொண்டே இருந்தது...
அன்று முதலிரவு அறைக்குள் நுழைந்தவளை,
“கீர்த்தி டார்லிங், வெல்கம், வெல்கம்...” என்று சொல்லி உற்சாகத்துடன் வரவேற்றான் தியாகு.
பதிலுக்கு எப்போதும் போல முறைத்த கிருத்திகா,
“இங்கே பார் ஜெம், என் மனசு இரும்பு மாதிரி! அதை உன்னால எல்லாம் அசைக்க முடியாது. எத்தனை வருஷமானாலும் அப்படியே தான்,” என்றாள் ‘கெத்தாக’!