(Reading time: 16 - 32 minutes)

14. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ம்மா நான் இன்னைக்கு கார்த்திக் வீட்டுக்கு போயிட்டு வரேன்.”

“சரிடா போயிட்டு வா. ஹாஸ்பிடல்ல இருந்து சீக்கிரம் வேணும்னா போயிடு. வரும் போது சீக்கிரம் வந்திடு.”

ஹாஸ்பிடலில் இனியா அன்று அவளுக்குள்ள அப்பாயின்மென்ட்டை பார்வையிட்டு விட்டு அதற்குள் அங்குள்ள பேஷன்ட்களை பார்க்க சென்றாள்.

நம் மனதிடமே நம் உடலை குணப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை மருத்துவர்கள் பெரும்பாலும் நம்புகிறார்கள். ஆனால் அம்மனதிடத்தை அவர்களால் எளிதாக வரவைக்க இயலாது. பெரிய பெரிய வியாதிகளால் பாதிக்கப் பட்டவர்களும் தம் மனதிடத்தால் குணமாகி விடுவர். ஆனால் சிறிய வியாதி வந்தும் நம்பிக்கை சிறிதும் இல்லாமல் அதிலே உழன்று மரணமடைபவர்களும் உண்டு.

அதிலும் வயதானவர்களுக்கு மனதிடத்தை வளர்ப்பதே சவாலான ஒரு விஷயம். என் பையனே என்னை வந்து பார்க்கறதில்லை. அவனுக்கு நான் முக்கியமா படலை. இனிமே நான் வாழ்ந்து என்ன பண்ண போறேன். இனிமே நீங்க முயற்சி பண்றதெல்லாம் வேஸ்ட் டாக்டர். நான் இனி பொழைக்க மாட்டேன் என்று டாக்டர்க்கே அட்வைஸ் பண்ணுவாங்க.

நம்ம கிட்ட வயசு இருக்கும் போது மனுஷனுக்கு யாரும் தேவைப்படரதில்லை. பசங்க பண்ற தப்பை மன்னிக்க முடியாம அவங்களை தள்ளிக் கூட வச்சிடறாங்க. ஆனால் அதுவே நமக்கு வயசாகும் போது நமக்கு துணை தேவைப் படுது. மனுசனோட மனசே ஒரு விசித்திரம் தான்.

“ஐயோ...... உன்னை இந்த சைக்கலாஜி படிக்க வச்சதே ரொம்ப தப்பா போச்சின்னு அக்கா சொல்லும் போதெல்லாம் எனக்கு கோவமா வரும். ஆனா இப்பல்லாம் எனக்கே அப்படி தோண ஆரம்பிச்சிடுச்சி. வரவர நான் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்” என்று எண்ணியவளாக தன் அறைக்குள் வந்தாள்.

“மணி 11 ஆகிறது. 11.30 க்கு அப்பாயின்மென்ட் இருக்கிறது. தொடர்ந்து வொர்க் இருந்துட்டே இருக்கணும். இல்லன்னா இந்த மைன்ட் ஏதேதோ நினைச்சி தேவை இல்லாம குழம்பும்”.

அதற்குள் அவளின் போன் அடித்தது. இளவரசன் தான் போன் பண்ணினான்.

போனை எடுக்கலாமா வேண்டாமா என்று இனியா யோசித்தாள்.

இனியாவால் எந்த முடிவையும் எடுக்க முடியாவிட்டாலும் ஏதோ தெளிவாக இருப்பது போல் தான் தோன்றியது.

சரி என்று முடிவு செய்தவளாக போனை எடுக்க போகும் போது கட் ஆகியது.

அவனே செய்கிறானா என்று 5 நிமிடம் வெயிட் செய்து பார்த்தாள். ஆனால் அவன் திரும்ப கூப்பிடவில்லை. நாமே போன் செய்து என்னவென்று கேட்போம் என்று திரும்ப போன் செய்தாள்.

போன் செய்த இரண்டாம் ரிங்கிலே போனை இளவரசன் எடுத்தான்.

“ஹலோ”

“ஹலோ. போன் செஞ்சீங்க போல”

“ம்ம்ம். ஆமா.”

“என்ன விஷயம்”

ஒரு நிமிடம் யோசித்தவனாக “இனியா உன்னை கொஞ்ச நேரம் மீட் பண்ணணும்.” என்றான்.

இனியா சிறிது நேரம் ஏதும் பேசவில்லை.

திரும்ப இளவரசனே “நோ பெர்சனல் டாக்ஸ் இனியா. நான் உன்னை ஹர்ட் பண்ண மாட்டேன். எனக்கு தெரிஞ்ச ஒருத்தவங்களை உன் கிட்ட கவுன்செல்லிங்க்கு கூட்டிட்டு வரணும். அதைப் பத்தி தான் பேசணும்”

“யார். திரும்ப சந்துருக்கு ஏதும் ப்ரோப்லமா.” என்றாள் படபடப்பாக.

“இல்லல்ல. அப்படிலாம் ஒன்னும் இல்லை. சந்துருக்கு ஒன்னும் இல்லை. அவன் நல்லா தான் இருக்கான். இது வேற ஒருத்தவங்களுக்கு. இதைப் பத்தி நாம நேர்ல பேசலாம்ன்னு நினைக்கறேன். நீ எப்ப ப்ரீன்னு சொன்னா நான் வரேன்.”

“ம்ம்ம். இப்ப எனக்கு ஒரு அப்பாயின்மென்ட் இருக்கு. லஞ்ச்க்கு அப்புறம் ஒரு 2.30க்கு வந்தீங்கன்னா பேசலாம்”

“ஓ ஓகே. நான் 2.30க்கு வரேன். பை”

“ம்ம்ம்.”

“போனை வைத்த இளவரசனுக்கு மனசே சரி இல்லை. இருவரும் நன்றாக பேசி கொள்ளவில்லை என்றாலும் இருவரும் சண்டை போடாததே அவனுக்கு ஆறுதலாக தான் இருந்தது. ஆனாலும் ஏதோ மனசே சரியில்லை. லஞ்ச்க்கு அப்புறம் வாங்க என்றால் லஞ்ச் சாப்பிட வந்துடாதேன்னு அர்த்தமா, இல்லை நான் உன் கூட லஞ்ச் சாப்பிட மாட்டேன்னு அர்த்தமா” என்று குழப்பிக் கொண்டிருந்தான்.

னியாவிற்கு அந்த அப்பாயின்மென்ட் முடிவதர்க்கே 2 மணிக்கு மேல் ஆகி விட்டது. அவசர அவசரமாக டிபன் பாக்ஸில் இருந்ததை நாலு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு இளவரசனுக்காக காத்திருந்தாள்.

இளவரசனும் அவளை காக்க வைக்காமல் சொன்ன நேரத்திற்கு முன்பே வந்து சேர்ந்தான்.

இருவரும் சலனமில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“சொல்லுங்க. யாரை பத்தியோ பேசனும்ன்னு சொன்னீங்களே” என்றாள் இனியா.

இளவரசனுக்கு அவள் முகத்தில் ஏதோ விலகல் தன்மை தெரிந்தது. நான் அவளை ரொம்ப காய்ப்படுத்திடேனா. இப்ப அவ முகத்துல “என்ன சொல்ல வந்தியோ அதை சொல்லிட்டு கிளம்பு” ன்ற மாதிரி தெரியுது.

எப்படியோ தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு, “ஷங்கர் குரூப் ஆப் கம்பெனீஸ் தெரியுமா” என்றான்.

“ம்ம்ம். தெரியும். அந்த கம்பெனி ஓனர் கூட ரீசன்டா இறந்திட்டாரு இல்ல. கன்ஸ்ட்ரக்ஷன், டைல்ஸ் இப்படி நிறைய பிசினஸ் பண்றாங்க இல்லை. அப்பா முன்னாடி அவங்க கம்பெனீஸ்க்கும் ஆடிடரா இருந்தார்.”

“ஹ்ம்ம். அந்த கம்பெனி எம்.டி. யோட சன் சிவா என் பிரன்ட். அவன் தங்கச்சிக்கு தான் நீ கவுன்செல்லிங் தரனும்”

“ஓ. அவங்களுக்கு என்ன ப்ரோப்லம்.”

“எல்லாம் இந்த லவ் தான் என்றான் சலிப்பாக”

இனியா அவனை முறைத்தாள்.

“இல்லை நான் எதையும் மீன் பண்ணி சொல்லலை. சிவா ரொம்ப பீல் பண்றான். அதுவும் ஸ்ருதியோட பிஹேவியர் பார்த்ததால தான் இப்படி பேசறேன். வேற ஒன்னும் இல்லை” என்றான் அவசரமாக.

இனியாவிற்கு ஒரு நிமிடம் சிரிப்பு வந்து விட்டது. அதை மறைத்துக் கொண்டு “ம்ம்ம். முழுசா சொல்லுங்க.” என்றாள்.

“ஸ்ருதி சிவாவோட சிஸ்டர். அவ மேல ரொம்ப பாசம் வச்சிருக்கான். சின்ன பொண்ணு. லவ் பண்ணக் கூடிய வயசே இல்லை. இப்ப தான் காலேஜ் சேர்ந்திருக்கா. நானும் முன்னாடி அவளை பார்த்திருக்கேன். அண்ணா அண்ணான்னு நல்லா பேசுவா.”

“இப்ப லவ் பண்ணி ஒரே பிரச்சனை. அந்த பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒரே அடம் பிடிச்சா. அப்புறம் நானும் சிவாவும் தான் அவங்க அம்மாவை கன்வின்ஸ் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சோம். இருந்தாலும் பொண்ணை குடுக்கறோம்ல. அதனால நான் தான் அந்த பையனை பத்தி விசாரிச்சேன். அப்புறம் தான் அவன் தப்பானவன்னு தெரிஞ்சிது.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.