Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 26 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மாலை ஆன பிறகும் நிஷாவை தேடி ஒருவரும் வரவில்லை என்பதில் சரண்யாவிற்கு சற்று நிம்மதி ஏற்பட்டது! ஆனாலும், அவ்வப்போது சந்தேகத்துடன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க தான் செய்தாள்...
அவளின் சந்தேகம் சரி என்பது போல மித்ரன் அவளின் வீட்டை நோக்கி வருவது தெரியவும், அவசரமாக நிஷாவை எட்டிப் பார்த்தாள்.
நிஷா அவளின் புதிய விளையாட்டுகளை வைத்து மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தாள்...
சத்தம் போடாமல் கதவை திறந்து வெளியே வந்த சரண்யா, மித்ரன் வந்துக் கொண்டிருந்த அதே பக்கமாக சென்றாள்.
“சரண்யா, நிஷா எங்கே??? ஏன் இன்னைக்கு அவ வரவே இல்லை??? உடம்பு சரி இல்லையா? என்ன ஆச்சு???”
மித்ரனின் குரலில் இருந்த அக்கறை, பதற்றம் இத்யாதி, இத்யாதி சரண்யாவை ஒரு வினாடி வாயடைக்க செய்தது...!
அவள் நிச்சயமாக மித்ரன் இந்த அளவிற்கு நிஷாவிடம் ஈடுபாடு வைத்திருப்பான் என்று எதிர்பார்க்கவே இல்லை...
மெல்ல தன் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தவள்,
“மித்ரன் சார்... நீங்க நிஷாவை விட்டு தள்ளி இருங்க... அது தான் உங்களுக்கும் நிஷாக்கும் நல்லது,” என்றாள் மிகவும் சீரியசான குரலில்.
“அப்படி என்ன உனக்கு என்னை பார்த்து பயம் சரண்யா?”
மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு சாதாரண குரலில் கேட்டான் மித்ரன்.