06. கனியாதோ காதலென்பது! - Anna Sweety
மைக்ரோ செகண்டிற்கு தன் மூச்சை இழுத்து பிடித்தாள் நிரல்யா. அக்கால அளவிற்குள் கண்மூடி தன் அருகில் இருப்பவன்/இருப்பவளின் நிற்குமிடம், விதம், தனக்கும் அம் மனு உயிருக்கும் இடைப்பட்ட தூரம் இவற்றை உள்ளுணர்வில் கணித்தவள், அத் துப்பாக்கி தூக்கி, வலக்கையில் பிஸ்டலோடு தனக்கு பின்னால் நிற்பதை உணர்ந்து, சிறுத்தையின் வேகத்தில், சீக்கிரமாக, அப்பிறவியின் வலது கால் மூட்டின் பக்கவாட்டில், தன் காலால் வெட்டினாள்.
எதிர்பாராத எம்மனிதனும் சற்று தடுமாறி கால் முட்டி வளையும் அந்நேரம், தன் நெற்றியிலிருக்கும் அவனது வலக்கை சற்றே கீழிறங்கும். சரியாக அத்தருணத்தில், தன் வலகையை மடித்து, கை முட்டியினால் அவன் வலகையை, மனோவேகத்தில், சரி கோணத்தில் தட்டினால், அப் பிஃஸ்டல் அவன் கையிலிருந்து 45டிகிரி சாய்வாக கிளம்பி, அரை வட்ட பாதையில் பயணித்து, இயற்பியல் விதிபடி இரு முழ தூரத்திற்குள், இவளது இடகைக்கு நேராக வரும், என கணித்து, கணித்ததை கண கச்சிதமாக கடை பிடிக்கவும் செய்தாள்.
ஆனால் பிஸ்டல்தான் இவள் வசம் வரவில்லை. இவள் கால் அவன் முட்டியை தாக்கியவிதத்தில் சற்று அசைந்தவன், அதற்கு மேல் அவன் சரீரத்தில் இவள் காலிட்ட அதிர்வு, தன் உடலுக்குள் பரவாமல் நிறுத்தி கொண்டான். நிச்சயமாக டிபென்ஸ் டிரெயினிங் எடுத்தவன் வந்திருப்பவன்.
“ஓ! இளவரசியாருக்கு போர்பயிற்சி உண்டுல்ல, மறந்தே போனேன்...”
அவன் சொன்ன அவ் வார்த்தைகள், வந்திருப்பது ஆண் என உறுதி படுத்தியதைவிட, வேகமாக அவளுக்கு வெளிபடுத்தியது அது ‘ஜாஷ்’ என.
இந்த இளவரசி போர்பயிற்சி குறித்து அவன் முன்பும் பேசியிருக்கிறான். இத்தனை பாதுகாக்கபட்ட வீட்டிற்குள் வரும் சாமர்த்தியம், இவள் தாக்குதலை சமாளித்தவிதம், இவன் மனக்கண்ணில் கண்ட அவனது ஆறடிக்கு மேற்பட்ட உயரம்...இப்படி ஏராளம் அது ஜாஷ் என அறைந்து கூற.....
‘இப்பொழுது......ஏன் வந்தான்.....என்ன செய்ய போகின்றான்......?’ மயங்கி சரிந்தாள் நிரல்யா.
எப்படியெல்லாமோ அவன் வரவை எதிர்பார்த்தவள், இப்படி எதிரியாய் வருவான் என எதிர்பார்த்ததே இல்லை. ஏன் இப்படி?
அறைக்குள்ளிருந்த மின் விளக்கு அணைந்திருந்தாலும் பால்கனி ஜன்னல் வழியாக வெளியிலிருந்து வெளிச்சம் உள்ளே. அந்த மங்கலான வெளிச்சத்தில் அவள் சரிவதை கண்டவன், அவள் தலையில் அடிபடாவண்ணம் தாங்கி தரையில் படுக்க வைத்தான்.
“ச்சே!” என்ற சலிப்பு அவனிடமிருந்து.
ஒரு நொடி சுற்றும் முற்றும் பார்த்தவன் கையிலிருந்த பிஸ்டலை தரையில் வைத்துவிட்டு அக்கையை நீட்டி அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான்.
இஷ்...ஷ....ட். நிமிர்ந்து படுத்திருந்த நிரல்யா குப்புற திரும்பி அவனது பிஸ்டலை பிடித்து எடுத்துக்கொண்டு ஒரு சுழற்ச்சியோடு துள்ளி எழுந்தாள். இப்பொழுது பிஸ்டல் அவள் கையிலிருந்து அவன் புறம் நீண்டிருந்தது.
“ராஜகுமாரிக்கு ராஜதந்திரமும் தெரியும்.... கத்து குடுத்த குரு யாருன்னு சொல்லித்தான் தெரியனும்னு தேவையில்ல....” வருத்தம்,கோபம்,குத்தல் எல்லாம் கலந்து ஒலித்தது அவள் குரல்.
அவன் தன் கைகளை தலைக்கு மேலாக தூக்கியபடி நிற்பதை பார்க்கவேண்டிய நிர்பந்தம் நிரல்யாவிற்கு.
அவன் அறை வாசலருகிலும், இவள் ஏறத்தாழ அதற்கு எதிராகவும் நின்றிருந்தார்கள். வாயிலருகில் செல்வது இவளுக்கு நல்லது. அதற்கு அவன் இவளிருக்கும் இடத்திற்கு இடம் மாறவேண்டும். ஸேப் ஸோன். அதன் பின் எதுவானாலும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்.
“மூவ்...மூவ் தட் சைட்...” இவள் பிஸ்டல் காட்டிய திசைக்கு நகர தொடங்கினான் அவன். இவளும் அவனுக்கு எதிராக வாசல்நோக்கி நகர்ந்தாள். இமைதட்டவில்லை இருவரும்.
“உன் எங்கேஜ்மென்ட் நியூஸை கேட்டதும் எவ்வளவு சந்தோஷபட்டேன் தெரியுமா? ஆனா அத வச்சே இப்படி எனக்கு எதிரா நீ சதி செய்வன்னு....நான் எதிர்பார்க்கல...”
கவனம் சிதறாமல் நகர்ந்து கொண்டே அவன் சொல்ல ‘சதியா? இவளா? இவனுக்கு எதிராகவா?’
இவளுக்கு சிந்திக்க கிடைத்த நேரம் இரு நேனோ செகண்டிற்கும் குறைவு.
“யாரோ வர்றாங்க!”
என்றவன் தன் வலக்காலால் மின்னலாய் இவள் வலக்கையை தட்டினான். இம்முறை இயற்பியல் விதி மாறாமல் 45டிகிரி கோணத்தில் எழும்பி, அரை வட்ட பாதையில் பயணித்து அவன் கை சேர்ந்தது அவன் பிஸ்டல்.
அவன் இவள் சொன்ன திசை நோக்கி நகர்ந்திருந்தாலும், இவள் எதிர்பாத்தபடி வடக்கு நோக்கி நேர் கோட்டில் நடக்காமல் கோணம் குறுக்கி வடமேற்காய் நகர்ந்து எதிரில் இருந்த இவளை நெருங்கி இருக்கிறான் என்பதே அவளுக்கு அப்பொழுதுதான் புரிந்தது.
அதற்குள் அவன் அவளை மட்டுமல்ல வாசல் வழியாக அறையையும் கடந்திருந்தான்.
படபடப்பும் பரிதவிப்புமாக வெளியே வந்து தளம் முழுவதும் தேடினாள். அவனது தடத்தை கூட காணோம்.
ரஃபேல்......யொஹான் சார்...... அலறியபடியே தன் அறைக்குள் சென்று அலாரத்திற்கான விசை பட்டனை தட்டினாள். வீடு தோட்டமென சைரன் சங்கொலி எழுப்ப.... சூழ்நிலை துடி துடித்தது.
இதற்குள் இவள் அழைப்பில் அந்த ரஃபேலும் ...யொஹான் சாரும் வந்திருந்தார்கள்.
“சம் ஒன்....கேம்....” தன் நெற்றியில் இருவிரல் வைத்து மீதியை சைகையில் தெரிவித்தாள். “சர்ச்....” அதீத உண்ர்ச்சி வேகத்தில் மூச்சிளைத்தது அவளுக்கு.
ரஃபேல் அவளது பாதுகாப்பின் பொறுப்பாளன். அவன் தன் தாய் மொழியிலும் தன் சகாக்களறிந்த மொழியிலும் உத்தரவிட்டவாறே, இவள் அருகில் நின்று அறையை பார்வையால் பரிசோதித்தான்.
யொஹான் சார் எனப்பட்ட இவளது பி.ஏவோ “உட்காருங்க மேம்” என்றபடி தண்ணீர் பாட்டிலை தேடினார்.
மறு நொடி அவள் காதுகளில் கேட்டது அக்காலடி சத்தம். வீடெங்கும் பல ஷூக்கால்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. சோதனை, துப்பறிதல், தப்பாமல் தடுத்தல் என பல காரணங்களுக்காக. ஆனாலும் இக்காலடி சத்தம்....அவள் இதயத்திற்கு எப்பொழுதும் புரியும் போலும்.
அறை வாயிலை நோக்கி அம்பென பாய்ந்தாள்.
”நோ மேம்...” ரஃபேல் இவளை அடையும் முன் அவள் முந்தியிருந்தாள்......மாடியேறி வந்து கொண்டிருந்தது அவளது அவனல்லவா. ரக்க்ஷத்
படிகளை தாவி தாவி கடந்து கொண்டிருந்தவன் இவளை கண்டதும் வார்த்தையில் கனிந்தான்.
“என்னடாமா?”
அவன் மார்பில் தஞ்சமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தவளுக்கு சட்டென சூழ்நிலை உறைத்தது. ஜாஷ் இந்த நொடி இங்கே இருந்தால்...அவனது குறி ரக்க்ஷத்தாக தானே இருக்கும்.பறந்து கொண்டிருந்தவள் ரக்க்ஷத்மேல் பாய்ந்தாள்.
அவனை அருகிலிருந்த சுவரோடு சுவராக்க்கி, முதுகை அவன் மேல் சாய்த்து, தன் இரு கரங்களையும் இரு புறமாக நீட்டி அவனை கவசமாக சூழ்ந்தாள்.
“ரக்க்ஷத்த எதுவும் பண்ணிடாத..ப்ளீஸ், ரக்க்ஷத்த எதுவும் பண்ணிடாத.....”
பயம் பரிதவிப்பு, மிரட்சி என எல்லாமுமாக இவள் கதற,
இவள் பின்னிருந்தவனோ தனது இடகரத்தால் இவள் இடையோடு வயிற்றை சுற்றினான். வினாடிக்கும் குறைவான நேரத்தில், அவளோடு தரை நோக்கி தட தடதடத்தான் வலக்கையில் பிஸ்டலோடு எட்டு திசையையும் கணக்கின்றி குறி பார்த்தபடி.
அவசரமாக தன் வாகனத்தை சமிஞ்சையால் திறந்தவன் அதற்குள் ஒரு முறை பார்த்துவிட்டு அவளுடன் உள்ளேறி கதவை அடைத்தான்.
“கண்ணம்மா இங்க யாருமில்ல...பயபடாதடா....” சொல்லிகொண்டே காரை கிளப்பினான். கூட்ட நெரிசலுள்ள சாலையை நோக்கி பறந்தது அந்த Ferrari F12berlinetta.