அந்த புதியவன் அவள் அருகில் சென்று ஒரு பார்வையை செலுத்தி விட்டு, "வரோம் பாட்டி, கிளம்பறோம் ருத்ரா, உனக்கு வரணும்னு இருந்த நீயும் வரலாம், ஆனா இப்போ முடியாதுன்னு தெரியும் எப்போ வேணுமோ அப்போ வா, அது உன் வீடு" என்று அவள் தலையில் கை வைத்து சொல்லி விட்டு வாசலை நோக்கி நடந்தான்.
ஸ்ரவந்தி உள்ளூர நொடிந்து போனாள். அவன் தானே வந்து தாலி கட்டினான் இவள வேண்டும் என்றால் இப்போது ஒரு பார்வை மட்டும் செலுத்தி விட்டு வா என்று கூட அழைக்காமல் செல்பவனை நம்பி எங்கு எப்படி எதற்காக செல்வது.
"பாத்து போயிட்டு வாடா ராஜாத்தி, நல்ல படியா நடந்துக்கோ" , அதுக்கு மேல் வார்த்தைகள் எழாமல் கண்களை மீண்டும் துடைத்து கொண்டார்.
"ம்ம்ம்" என்ற சின்ன தலை அசைப்புடன் அவள் விடை பெற்று, நந்தனிடம் பார்வையை திருப்ப, விவரிக்க இயலாத பாவத்துடன் இவளையே பார்த்திருந்தான் அவன்.
அவனை பார்க்கவே ஏனோ பயமாக இருந்தது, இவள் பேச முனைவதை கண்டவன் சட்டென்று அகன்று விட்டான்.
ஓரமாக நின்ற கணக்கு பிள்ளையிடம் ஒரு தலை அசைப்புடன் விடைபெற்று வாசல் நோக்கி அவள் செல்ல, அவன் காரை தயாராக வைத்திருந்தான்.
வேலையால் பெட்டியை காரில் வைக்க, பின் பக்கம் அவள் ஏறி அமர்ந்து ருத்ராவை பார்த்து கை அசைக்க வந்த வேகத்திலேயே கார் பறந்தது.
ஏதேதோ எண்ணங்கள் நடுவில் பின் சீட்டில் அவள் சரிந்து அப்படியே தூங்கி போக, இடையில் ஒரு கடையில் காபி குடிக்கவென நிறுத்தியவன் அவளை பார்த்தான்.
குமரி வயதில் குழந்தை தூங்குவது போல் இருந்தது. நன்றாக படுக்காமல் குறுக்கி கொண்டு புடவை தலைப்பை மேலே போட்டு கைகளை கோர்த்து தாடைக்கு கீழ் வைத்து அவள் உறங்கிய காட்சி ஏனோ பிடித்து போனது.
அன்றைய நாளில் முதன் முறையாய் அவன் உதடு சிரிப்பில் மெலிதாய் வளைந்தது. அவளை எழுப்ப மனமின்றி தான் மட்டும் சென்று காபி குடித்தவன், அவளுக்கு பிஸ்கட்டும் ஒரு ஜூஸ் பாட்டிலும் வாங்கி கொண்டு காரை கிளப்பினான்.
அடுத்த ஒரு மணி நேரம் சென்றும் அவள் எழும்பவில்லை. மணியை பார்த்தான். 4.10.. அவள் மதிய உணவை சாப்பிடாமலே உறங்குகிறாள் என்ற எண்ணத்தில் காரை ஓரமாக நிறுத்தி அவளை அழைக்க பேச்சில்லை அவளிடம்.
பின் பக்கமாக திரும்பி லேசாக அவள் தோல் பற்றி அவன் எழுப்ப, அவன் கையை உதறி விட்டு பயந்து எழுந்தாள் ஸ்ரவந்தி.
"ச..சாரி, பயந்துட்டியா?"
பதில் பேசாத அவள் மிரண்டு விழிக்கவும், புரியாமல் அவளை நோக்கி விட்டு.
"ஈசி ஸ்ரவந்தி, டைம் நாலுக்கு மேல ஆகுது, நீ எதுமே சாப்பிடல அதான், வழியில சார் நிறுத்தும் போதும் தூங்கிட்டு இருந்த சோ டிஸ்டர்ப் பண்ணல, இந்த பிஸ்கட் சாப்பிட்டு கொஞ்சம் ஜூஸ் குடி" என தான் வாங்கியவற்றை அவள் கைகளில் கொடுத்து விட்டு திரும்பி காரை எடுத்தான்.
அவளிடம் இல்லை இல்லை அவள் முன்னால் அவன் பேசிய நீண்ட வசனம், அதுவும் சற்று மென்மையான குரலில்!!
அவள் சாபிடாமல் அமர்ந்திருப்பதை கண்ணாடி வழியாக கண்டவன், திரும்பி ஏன் என்பது போல் பார்க்க, அவள் ஜூஸ் பாட்டிலை திறந்து பருகினாள்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னையை அடைந்திருந்தனர்.எங்கு போகிறோம் என்று தெரியாமல் வந்தவளுக்கு சென்னை என்று தெரிந்தவுடன் சகலமும் அடங்கி போனது.
அவள் சிந்தனையில் மூழ்கி இருக்க, கார் ஒரு வீட்டின் இல்லை அவளுக்கு அது பங்களா. அதன் முன்னே நிற்க, கதவை திறந்த செக்யுரிட்யிடம் தலை அசைத்து உள்ளே செலுத்தினான்.
கார் ஓசை கேட்டு கையில் ஆரத்தி தட்டுடன் நடுத்தர வயது பெண்மணி வர, பின்னோடு இன்னொரு பெண்ணும் சிறுமியும் வந்தனர்.
இவர்கள் காரில் இருந்து இறங்கியவுடன் எதுவும் பேசாமல் ஆரத்தி எடுத்துவிட்டு அந்த பெண்மணி சிறுமியிடம் தட்டை கொடுக்க அவள் அதை வாங்கி கொண்டு சிட்டாக ஓடினாள்.
அவனை ஒரு பார்வை பார்த்த அந்த அம்மாள், வா என்று அவனை பார்த்து சொல்லி விட்டு, ஸ்ரவ்ந்தியை மேல் இருந்து கீழாக பார்த்தாள்.
ஸ்ரவந்தி தலையை குனிந்து கொள்ள, அந்த அம்மாள் அவள் கை பற்றி, "வலது கால் எடுத்து வெச்சு வாம்மா" என்று அழைத்தார்.
சற்று முன் 'வா' என்ற ஒற்றை சொல்லில் இருந்த கடினம் அடியோடு மாறியிருந்தது.
அப்படி ஒரு இனிமை.
எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள் ஸ்ரவந்தி.
மேலிருந்து யாரோ படியிறங்கி வரும் ஓசை கேட்க, அனைவரும் மேலே பார்த்தனர்.
"பூஜை ரூம்ல பொய் விளக்கு ஏத்திட்டு வரலாம் வாம்மா" என அதே இனிமையான குரலில் அவளை அழைத்து சென்றார் அந்த பெண்மணி.
அவனும் உடன் சென்றான். ஆளுயர முருகன் படமும், இடை உயர கிருஷ்ணன் சிலையும், மற்ற தெய்வங்களின் படங்கள் வரிசையாக என அழகாக இருந்த பூஜை அறை அவளுக்கு மிகவும் பிடித்து போனது.
மனம் ஒன்றி விளக்கு பற்ற வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மனமுருகி வேண்டி கொண்டாள். அனால் என்ன வேண்டினாள் என்பதை அவளே அறியவில்லை.
ஹாலிற்கு வந்து அமர்ந்தவர்களை மேலிருந்து இறங்கி வந்த மனிதர் பார்த்தார். கம்பீரமான தோற்றம், முகத்துக்கு ஏற்ற கண்ணாடி, பார்த்தாள் பயம் கலந்த மரியாதை தோன்றும் முக பாவம், ஆனால் கண்களில் மேன்மை கலந்த கனிவு. அவன் அப்பாவாக தான் இருக்க முடியும்.
"மதி அந்த பொண்ண ரூமிற்கு கூட்டிட்டு போம்மா"
"சரிங்க", அந்த அம்மாள். அவர்கள் பெயர் மதி போலும் எண்ணி கொண்டாள்.
"சரளா அவங்களுக்கு சாப்பிட ஏற்பாடு பண்ணு"
"சரிங்கய்யா" மற்றொரு பெண், எளிமையான தோற்றம் வேலை செய்பவளோ? கேள்விகள் உதயம்.
"நானும் போய் ரெஸ்ட் எடுக்கறேன்" , அவள் கணவன்.
"மிதுர்வா, நில்லு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்", அவன் அப்பா தான் சொன்னார்.
மாடிப்படி ஏறி கொண்டிருந்த ஸ்ரவந்தியிம் காதிலும் அவன் பெயர் விழுந்தது.
மெல்ல மனதில் உச்சரித்தாள்,
'மிதுர்வா'....
'மிதுர்வன்!!'
தொடரும்…
{kunena_discuss:804}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.