02. விழிகளிரண்டு..! - அன்பு சுடர்
“இன்னும் கொஞ்சம் தாமதமா வந்திருந்தீங்க நான் அப்படியே அங்க கீழ இருக்க கல்ல எடுத்து உங்க தல மேல போட்டு உடைச்சிருப்பேன்..தப்பிச்சீங்க..” கோபம் கொந்தளிக்க பின்னாலிருந்து அவன் தன் விழி மூடிய கைகளை விலக்கினாள் மலர்வேணி.
அவன் ஏதும் பேசாமல் அவளின் அன்பை மட்டுமே சிந்தும் அந்த பூங்கண்களையே இமை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன்.
“ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு?” கோபத்துடன் கேட்டாள் மலர்வேணி.
பதிலில்லை.

“எத்தனை மணிக்கு வரேன்னு சொன்னீங்க?”தொடர்ந்து போர் தொடுத்தாள் அவள்.
அமைதி.
“ஏன் பேசாமலே நிக்குறீங்க?”
சத்தமில்லை.
“இந்த கோயில்லையே எவ்ளோ நேரம் காத்திருக்கறது..சாயங்காலம் 3 மணிக்கு வரேன்னு சொல்லிட்டு இப்படி 5 மணிக்கு வந்தா என்ன அர்த்தம்?.நான் அப்படியே இங்கேயே சிலையாகிடனும்னு ஏதாவது பிளான்ஆ?.இன்னைக்கு அப்புறம் உங்கள அடுத்த மூணு மாசம் கழிச்சு தான் பாக்க முடியும்..இன்னைக்காவது கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?” கோபமும் அழுகையும் தொண்டையை அடைக்க அவளின் அவனிடம் பொங்கினாள் மலர்வேணி.
“மலர்”
“வேண்டாம் “அவள் அவனின் முகத்தை பார்க்காமல் திரும்பி கொண்டாள்.
“மலர்..”
இப்போது அவளின் கோபம் கொஞ்சம் தணிய தொடங்கி இருந்தது.
“வேணி..கொஞ்சம் பாரேன்.”கெஞ்சினான் முகிலன்.
“மலர்.. “.அவன் அவள் பெயரை அழைப்பதில் தான் அவளுக்கு எவ்வளவு ஆனந்தம்.இப்படி ஒருவன் அழைக்கத்தான் அவளுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது என்று அவள் எப்போதும் நினைத்து நினைத்துப் பூரித்தாள்.
மீண்டும் ஒருமுறை “மலர்வேணி..” என்றான் முகிலன் அன்பொழுக.
“சொல்லுங்க ..”
“வீட்ல எனக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைக்கனும் இல்ல .அதான் டைம் ஆகிடுச்சு..ப்ளீஸ் சாரி என்றான் மேகத்தின் பெயருடையவன்.
“இன்னைக்கு ஊருக்கு கெளம்புறேன்”
“ம்”
“மூணு மாசம் கழிச்சு தான் வருவேன் “
“ம்”
“போனதும் போன் பண்றேன்”
“ம்”
“எதாவது பேசு மலர்”
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு மெல்ல பேச ஆரம்பித்தாள் மலர்வேணி.
“போன் எத்தனை முறை பண்ணுவீங்க?”சோகம் தோய்ந்த குரலில் பேசினாள் மலர்.
“ஒருமுறை..சரி சரி முறைக்காத ரெண்டு முறை பண்றேன்”
“இன்னைக்கு நைட் உங்க கூட ஸ்டேஷன்க்கு நானும் வரட்டுமா?”
“வேண்டாம் மலர்..திரும்பவும் நீ வீட்டுக்கு திரும்ப டைம் ஆகிடும்..இந்தா உனக்கு பிடிச்ச அல்லி பூ ..” என்று அவன் பின்னால் ஒளித்து வைத்திருந்த அல்லி மலர்களை அவளிடம் நீட்டினான்.
ஆசையாய் அப்பூக்களை அவள் வாங்கியதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது முகிலனுக்கு.அந்த கண்களின் மீது தான் அவனுக்கு எவ்வளவு காதல்.
“கட்டாயம் போய்தான் ஆகணுமா?”மலர்களை பார்த்தபடியே கேட்டாள் மலர்வேணி.
“இதையே நீ எத்தனை முறை கேட்டாலும் என் பதில் ஒன்னு தான் மலர்..இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல” என்று உறுதியாய் இருந்தான் முகிலன்.
“இது தான் உங்க கிட்ட எனக்கு எப்பவும் பிடித்த விஷயம்...அந்த உறுதி..சரி எப்பவும் நாட்டையே நெனைச்சிக்கிட்டு இருக்காம இந்த மலரையும் நெனச்சுக்கோங்க...”
“இந்த அல்லி பூவ தான?”
“அடி விழும்.நான் அந்த மேகத்தோட மலரச் சொன்னேன்.”
“அது யாரு மேகம்”
நாணினாள்.
“சொல்லு அது யாரு மேகம்?”
“மலருக்கு தேன் வார்க்கும் மேகம்”
“பார்ரா ..கவிதையெல்லாம் பலமா இருக்கு” என்று ஆச்சர்யமாய் அவளைப் பார்த்தான் முகிலன்.
“சரி வாங்க கோயில் நடை சாத்திட போறாங்க..அர்ச்சனை பண்ணனும்”
“அது யாரு அர்ச்சனா? உன் தோழியா?”
“பேசாம வாங்க.இல்ல இங்கேயே இந்த தூணுலேயே கட்டிப்போட்டுடுவேன்..”என்று அவனின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு கோயிலின் மூலவரான சுப்பிரமணிய சுவாமியிடம் சென்றாள் மலர்வேணி.
“நல்லபடியா போய்ட்டு..நல்லபடியா வரணும்.
யாருடைய கண்ணும் படக்கூடாது.
நாட்டுக்காக போற என் நாயகனுக்கு நீ தான் கூட இருக்கணும்” என்று சொல்லி அவனின் நெற்றியில் திருநீறு பூசினாள் மலர்வேணி.
“எனக்கு இன்னும் நெறைய நெத்தி இருக்கக் கூடாதா?” என்றான் முகிலன் குறும்போடு.
“போதும் போதும்..
இந்த ஒரு கண்ணு நான்.இன்னொரு கண்ணு நாடு.சரியா?”
போனதும் மறக்காம போன் பண்ணனும்.நேரத்துக்கு சாப்பிடனும்.நேரத்துக்கு தூங்கனும் புரியுதா ?”
“புரிகிறது இளவரசி.எல்லாம் உன் முருகர் பாத்துப்பார் .”நகைத்தான் முகிலன்.
“நான் வீட்டுக்கு கெளம்பனும்.அம்மாவும் அப்பாவும் திருச்சி போயிட்டு இந்நேரம் வீட்டுக்கு வந்திட்டு இருப்பாங்க...நான் கெளம்புறேன் “ என்று பிரிய மனமில்லாமல் நகர்ந்து செல்ல ஆரம்பித்தாள்.
“ஹே வேணி ஒரு நிமிஷம்”
“ம்ம் “
“என் பேரை இன்னைக்காவது கூப்பிடேன்”
“ம்ஹும்.முடியாது.”
“ப்ளீஸ்..”
“அதெல்லாம் முடியாது...”
“இப்ப நீ கூப்பிடல,நான் இந்த இடத்த விட்டு நகரமாட்டேன்”
“ரொம்ப சந்தோஷம்.இங்கேயே இருந்துடுங்க..ஊட்டி வேணாம்.”
“சரி அப்போ நான் கெளம்புறேன்.போன் பண்ண மாட்டேன்” பாசாங்கு செய்து புறப்பட தயாரானான் முகிலன்
“சரி சரி கோபப்பட வேணாம்..கூப்பிடுறேன்..” என்று அவனிடம் ஏதோ சொல்ல வந்தவள் போல் அருகில் வந்து பிறகு “மழைமூட்டை” என்று மெல்லமாக சொல்லி விட்டு”பஷீர் அண்ணாவ கேட்டதா சொல்லுங்க” என்று வேகமாய் பறந்தோடி அவனின் கண்களுக்கு தெரியாத மரமொன்றின் பின் நின்று ஆற்ற முடியாத பிரிவுத்துயரில் மூழ்கினாள் மலர்வேணி.
கண்கள் சிவந்து கரைந்து போகும் அளவுக்கு அழது முடித்து ,வீட்டிற்கு மனமின்றி நடக்கலானாள்.
இதழ் சிரித்தபடியே அவள் ஓடிய திசையையே வெகு நேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சிறிது தூரம் நடந்து கோயிலின் வாசலுக்கு வந்தான்.
எதையோ மறந்தவன் போல் மீண்டும் கோயிலுக்குச் சென்று கொஞ்சம் திருநீறு அள்ளிக் கொண்டு மீண்டும் வாசலுக்கு வந்தான்.
அவனுக்கு எதிரில் வந்த அந்த நபரைப் பார்த்து வியந்து விரைந்து நடக்க ஆரம்பித்தான் முகிலன் தன் கண்களில் நீர் துடைத்துக் கொண்டே.
தொடரும்
{kunena_discuss:846}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.