05. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்
என்னங்க… தரகர் என்ன சொன்னாங்க?...
அவங்களுக்கு சம்மதமாம் விஜயா… மாப்பிள்ளை நம்ம மஞ்சரியைப் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்ல வேண்டியதுதான் பாக்கி….
அப்பாடா… இப்போதான் எனக்கு நிம்மதியாவே இருக்குங்க…
சரி விஜயா… அவங்களுக்கு என்னைக்கு வசதிபடுமோ அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வர சொல்லி தரகர் கிட்ட சொல்லிடவா?...
சொல்லிடவான்னு என்னங்க கேள்வி… சொல்லிடுங்க… நல்ல காரியத்தை எல்லாம் சீக்கிரமே செஞ்சிடணும் எப்பவும்… அதுதான் எல்லாருக்கும் நல்லது…
நீ சொல்லுறதும் சரிதான் விஜயா… நான் தரகர் கிட்ட பேசிட்டு வரேன்… என்றவர் திரும்பியபோது அங்கே மஞ்சரி நின்றிருந்தாள்…
அட மஞ்சு… என்னம்மா ஆஃபீஸ் கிளம்பிட்டியா?... சாப்பிட்டியாமா?... என்று அக்கறையாய் நீலகண்டன் கேட்க,
அவளோ சிலையாகி இருந்தாள்…
ஏண்டி… அப்பாதான் கேட்குறார்ல… நீ பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?... என்று விஜயாவும் அதட்ட… அவள் அப்போதும் அமைதியாகவே இருந்தாள்…
அடியே… என்னடி… காலையிலேயே பகல்கனவு காணுறியா?... என்ற விஜயா பக்கத்தில் வந்து மகளை உலுக்க,
இல்ல….ம்மா… நேரமாச்சு… வ….ரே…..ன்… என்றபடி மஞ்சு விறுவிறுவென்று அங்கிருந்து கிளம்பி விட,
என்னங்க… என்னாச்சு… இவளுக்கு… ஒரு மாதிரி போறா?...
கல்யாணம்னு நாம பேசினது அவ காதுல விழுந்திருக்கும்னு நினைக்கிறேன் விஜயா…
ஓ… அதான் அதிர்ச்சியில பேசாம போறாளா?... ஹ்ம்ம்.. சரி.. விடுங்க… எப்பனாலும், அவளுக்கு தெரியதான போகுது… இப்பவே தெரிஞ்சதும் நல்லதுக்குத்தான்… விடுங்க… நீங்க தரகர்கிட்ட பேசுங்க முதலில்… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்னைக்கு இங்க வராங்கன்னு கேட்க சொல்லுங்க…
சரி... விஜயா… என்றவரும் மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவராய் தரகரிடம் பேச சென்றுவிட…
அவரின் துணைவியோ வரப்போகும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை எப்படி எல்லாம் கவனிக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்…
ஹேய் மஞ்சு பிசாசே… என்னடி… காலையில இன்னைக்கு டிபன்பாக்ஸ் கூட வாங்க வரலை?... ஏன் சாப்பிட்டு வந்துட்டியா என்ன?..
……
இல்லையே… இருக்காதே… உனக்கு எங்கிட்ட வாங்கி சாப்பிடாம சாப்பிட்ட மாதிரியே இருக்காதே… ஹ்ம்… சரி… இந்தா… வழக்கம்போல இரண்டு டிபன்பாக்ஸ் கொடுத்துட்டேன்… ஒன்னு உனக்கு… இன்னொன்னு உன் ஃப்ரெண்டுக்கு… இந்தா… பிடி… என்றபடி மஞ்சுவை நோக்கி பாலா நீட்ட,
மஞ்சுவோ தலைநிமிராமல் இருந்தாள்…
ஹேய்… லூசு… உங்கிட்ட தான் பேசிட்டிருக்கேண்டி… காலையிலேயே கனவா?... என்று பாலா மஞ்சரியை கிண்டல் செய்துகொண்டிருக்கும்போது,
வள்ளி வந்து மஞ்சரியின் அருகே அமர்ந்தாள்…
என்ன மஞ்சு… சீக்கிரம் சாப்பிட்டியா என்ன?... அங்க வரவே இல்லை… அவ்வளவு பசியா உனக்கு இன்னைக்கு???... என்று கேட்க, மஞ்சு அப்போதும் நிமிரவில்லை…
இவளுக்கு என்னாச்சு?... என்ற யோசனையுடன் பாலா மஞ்சுவை சத்தமாக கூப்பிட, அப்போதும் அவள் மௌனம் காத்தாள்…
வள்ளியும், பாலாவும் எழுந்து அவளருகில் சென்று, அவள் தோள் மேல் கை வைக்க, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை கொட்டி தீர்த்தாள் மஞ்சு இருவரிடத்திலும்…
ஹேய்… என்னாச்சுடி… சொல்லு… அழாதே… மஞ்சு… என்னாச்சு சொல்லு… என்ற பாலாவின் குரல் அவள் காதிலேயே எட்டாதது போல் அழுதாள் மஞ்சரி…
வள்ளியோ அவள் முகத்தை திருப்பி, என்னாச்சும்மா?... சொல்லு… அழாம சொல்லு… அப்போதான எங்களுக்கும் தெரியும்… சொல்லு…. என்று பக்குவமாக சொல்ல…
மஞ்சு அனைத்தையும் அவர்கள் இருவரிடத்திலும் கூற ஆரம்பித்தாள்…
வீட்டில் நடந்த உரையாடல்களின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாதவளாய் இருந்தாள் மஞ்சரி அலுவலகத்தை அடைந்த பின்னரும்…
வழக்கமான அவளின் துறுதுறு குணம், காணாமல் போயிருந்தது அன்று முற்றிலும்…
அவளை சந்திக்க வந்த மைவிழியன் அவளின் முகத்தினைப் பார்த்ததுமே ஏதோ நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்…
மஞ்சரி… என்னாச்சு?... ஏன் ஒரு மாதிரி இருக்குற?
……….
உன்னைதான் கேட்குறேன்… மஞ்சரி… சொல்லு…. என்னாச்சு…
அவனின் சத்தமான கேள்வியில் தன்னுணர்வுக்கு வந்தவள், எனக்கு பயமாயிருக்குங்க என்றாள்…
பயமா?... எதுக்கு?
வந்துங்க…..
சொல்லு…. சீக்கிரம்…. இழுக்காம…
வீட்டுல யாரோ ஒருத்தருக்கு பேசி முடிக்கப்பார்க்குறாங்க… மாப்பிள்ளை வந்து என்னைப் பார்க்க வேண்டியதுதான் பாக்கின்னு சொல்லுறாங்க… எனக்கு பயமா இருக்குங்க… என் வீட்டுல வந்து பேசுங்க உங்க அப்பா அம்மாவோட….
சீக்கிரமே வந்து பேசுங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க… என்றவள் குரலே அவள் எவ்வளவு கலங்கி போய் இருக்கிறாள் என்று எடுத்துக்காட்டியது….
ஓ…. இவ்வளவுதானா?... இதுக்கு எதுக்கு பயம்?... என்று அவன் வெகு இலகுவாக சொல்ல… அவளுக்கு பதட்டம் உண்டானது…
என்னங்க… இப்படி சொல்லுறீங்க?.... நான் அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து பொண்ணு கேட்டுடக்கூடாதேன்னு பயந்துட்டிருக்கேன்… நீங்க என்னடான்னா எதுக்கு பயம்னு ஈசியா கேட்குறீங்க?...
வேற என்ன சொல்ல சொல்லுற மஞ்சரி?... உன் வீட்டுல உனக்கு மாப்பிள்ளைப் பார்த்திருக்காங்க… ஹ்ம்ம்… சொல்லப்போனா, இது எல்லாப்பொண்ணுக்கும் நடக்குற விஷயம் தானே… இதுக்கு எதுக்கு உனக்கு பயம்?...
விளையாடாதீங்க…. கொஞ்சமாச்சும் நிலைமையைப் புரிஞ்சி பேசுங்க… சீக்கிரம் வந்து என் வீட்டுல பேசுங்க…
உன் வீட்டுல வந்து நான் என்ன பேசணும் மஞ்சரி?...
அவனது கேள்வியில் சற்றே உறைந்து போனாள் அவள்…
இவனுக்கு இன்று என்ன ஆனது?... ஏன் இப்படி பேசுகிறான்?... இத்தனை நாட்கள் பொறுப்பாய் பேசியது என்ன???... இன்று எதுவுமே தனக்கு சம்மந்தமில்லை என்று பேசுவதென்ன???... விட்டேற்றியாய் இவன் பதில் சொல்லுவதற்கு என்ன காரணம்??... இவனுக்கு நான் இதற்குமேலும் எப்படி என் நிலையை புரியவைக்க??... சொன்னால் கூட புரிந்து கொள்ளும் நிலையில் இவன் இல்லை போலவே… கடவுளே… என்ன நடக்கிறது என்னை சுற்றி???... எனக்கு எதுவும் புரியவில்லையே… இன்று விடிந்த பொழுதிலிருந்து எதுவுமே சரியாக இல்லையே… என் வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்துவிட்டதா?... என்று மனதினுள் புலம்பியவள், வெளியே அவனிடத்திலும் அவளின் பதட்டத்தை வெளிக்காட்டினாள்…
என்ன என்ன கேட்டீங்க?... என்ன பேசணுமா?... என்ன ஆச்சுங்க உங்களுக்கு?... ஏன் இப்படி நடந்துக்கறீங்க?... சொல்லுங்க….. என்று அவள் பதற…
உன் வீட்டுல பார்க்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ…. என்று அவள் தலையில் இடியை இறக்கினான் அவன் கொஞ்சம் கூட கவலையே இல்லாது…