கோகுலும் அம்மாவும் வீட்டை அடைந்த போது வீட்டுக்குள் அமர்ந்திருந்தனர் அவனது பெரியப்பா நந்தகோபாலனும் பெரியம்மா யசோதாவும். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் அப்பா.
பெரியப்பா பிரபலமான வக்கீல். தமிழ் நாட்டில் அவருக்கு நிறையவே செல்வாக்கும் மரியாதையும் உண்டு. அப்பாவுக்கு தனது அண்ணன் மீது மரியாதையும் பாசமும் அதிகம். பெரிய முடிவுகள் எடுக்கும் சந்தர்ப்பங்களில் பெரியப்பாவை கலந்துக்கொள்ளாமல் இருந்ததில்லை அப்பா.
அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யும் வரலக்ஷ்மி மாமி அவர்களுக்கு காபி கொடுத்துவிட்டு அகன்றார். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு உள்ளே சென்று விட்டிருந்தான் கோகுல்.
சில நிமிடங்கள் கழித்து மெல்ல கோதையை பற்றிய பேச்சை துவக்கினார் தேவகி.
சந்தேக விதைகள் மனதிற்குள் வீழ்ந்திருக்க அன்று மாலை சரவணின் காரில் ஏறவில்லை வேதா.. வேலை இருப்பதாக கூறி அவனை திருப்பி அனுப்பி விட்டிருந்தாள் அவள். அவளை தனது வழியில் மறுபடியும் இழுப்பதற்கான யோசைனையிலேயே இருந்தான் சரவணன்.
மறுநாள் மதியம் மணி பன்னிரெண்டரையை தாண்டிக்கொண்டிருந்தது. ஒலித்தது கோதை வீட்டு அழைப்பு மணி.
அவள் வந்து கதவை திறக்க, அவளை பார்த்து தலை சாய்த்து சிரித்தான் வாசலில் நின்றிருந்த கோகுல் 'ஹாய் ...'
'அச்சச்சோ...' அவனை எதிர்ப்பார்க்காத அதிர்ச்சியில் வாய்விட்டு சொன்னாள் கோதை.
'அடியேய்... ஆத்து மாப்பிள்ளை முதல் முதலா ஆத்து வாசலிலே வந்து நிக்கறேன். ஆரத்தி எடுக்காம அச்சச்சோங்கறே? என்றபடியே செருப்பை கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தான் கோகுல்.
'அப்பா ஆத்திலே இல்லை... ' என்றபடியே அவன் பின்னால் நடந்தாள் அவள்.
'தெரியுமே. இப்போதான் நான் வரச்சே வேளச்சேரி பஸ்லே ஏறி எங்கேயோ போனார். பார்த்துட்டுதான் வந்தேன். வர எப்படியும் ரெண்டு மணி நேரமாவது ஆகும்' ஹாலில் இருந்த சோபாவில் சென்று வசதியாக அமர்ந்துக்கொண்டான் கோகுல்.
'இப்போ உங்களுக்கு என்ன வேணும்?'
'ம்? வாசல் கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு வா நேக்கு என்ன வேணும்னு சொல்றேன்.'
'ம்???'
'கதவை சாத்திட்டு வா..' அவள் பேசாமல் சென்று கதவை சாத்திவிட்டு உள்ளே வர....
'ஆத்திலே இன்னைக்கு என்ன தளிகை (சமையல்)? என்றபடி சமையலறைக்குள் நுழைந்தவன், வெகு இயல்பாக பாத்திரங்களை திறந்து பார்த்தான்.
'ஆஹா.... உருளைக்கிழங்கு பொடிமாஸ், சாத்துமது (ரசம்), இதை விட வேறே என்ன வேணும் மனுஷனுக்கு.? கை கால் அலம்பிண்டு வரேன் இலை போடு'
கை கழுவிக்கொண்டு அவன் உள்ளே வர கையில் இலையுடன் நின்றிருந்தாள் கோதை .
'இன்னும் இலை போடலையா நீ?'
'தரையிலேயா? தரையிலே உட்கார்ந்து சாப்பிடுவேளா?'
'ஏன்? சாப்பிட்டா என்ன? அங்கே நம்மாத்திலே டேபிள் உட்கார்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போச்சு'. என்றபடி தரையில் அமர்ந்தான் கோகுல்.
'இலை போட்டு அவள் பரிமாற, இலையை சுற்றி நீர் சுற்றி மந்திரம் ஜபித்துவிட்டு சாப்பிட துவங்கினான் கோகுல்.'
சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்டு இமைக்க மறந்து அவனையே ரசித்திருந்தாள் அவள். கோடீஸ்வரன் அவன்.!!!! கொஞ்சம் கூட அகங்காரம், திமிர் எதுவுமே இல்லாமல் வெகு இயல்பாய் அவன் பழகும் விதத்தில் அவள் மனம் வழுக்கிக்கொண்டு அவனிடத்தில் சென்று தஞ்சமடைந்துக்கொண்டிருந்தது.
ரசித்திருந்தாள், அவனையே ரசித்திருந்தாள் அவள். ஒரு கட்டத்தில் கண்களை நிமிர்த்தி அவளை பார்த்தவன் என்ன தோன்றியதோ? 'கோதை பொண்ணு...' என்றான் மென் குரலில்.
ம்? கலைந்தாள்.
'இப்படி என் பக்கத்திலே வந்து உட்காரு'
'எதுக்கு?'
'நீ வந்து உட்கார்ந்தாதான் நான் சாப்பிடுவேன்.'
மெல்ல நடந்து அவனுருகில் வந்து அமர்ந்தாள் சில நொடிகள் யோசித்தவன் தனது இலையிலிருந்து கொஞ்சம் சாதத்தை கையிலெடுத்து அவளை நோக்கி நீட்டினான்.
இமை தட்டவில்லை அவள். 'நான் குடுத்தா சாப்பிட மாட்டியா?'
அடுத்த நொடி வாய் திறந்து வாங்கிகொண்டாள் அதை. பல வருடங்களுக்கு முன் அம்மாவின் கையால் சாப்பிட்ட ருசியை நினைவு படுத்தியது அந்த ஒரு வாய் சாதம். நிறைவும், நெகிழ்வுமாக அவனை அவள் பார்க்க 'லவ் யூ ஸ்வீட் ஹார்ட்...' என்றான் உயிர் வருடும் தொனியில்.
பதில் சொல்லவில்லை அவள்.
''ஏதாவது பதில் சொல்லு கோதை பொண்ணு....' என்றான் அவள் கண்களை பார்த்தபடியே.
ஒன்றுமே பேசாமல் மறுபடி வாய் திறந்தாள் அவள். இன்னொரு வாய் ஊட்டி விட்டான் அவன். ரசித்து ருசித்து உண்டாள் அதை. அங்கே ஒரு நிறைவான மௌனம் பரவ, உணவோடு சேர்ந்து அவன் நேசமும் அவளுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.
சாப்பிட்டு முடித்து, அவளிடம் தலை அசைத்துவிட்டு அவன் கிளம்பும் கிளம்பும் வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை இருவரும். அவனது பைக் கிளம்பி பறந்து செல்ல, நடந்த நிகழ்வுகளில் கரைந்து போய் சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தாள் கோதை.
இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் அன்று காலை பதினோரு மணிக்கு ஸ்ரீதரன் வாத்தியாரின் கைப்பேசி. இரண்டு நாட்களாகவே அப்பாவின் கைப்பேசி ஒலிக்கும் போதெல்லாம். 'அழைப்பது அவர்களாக இருக்குமோ?' என படபடக்கும் கோதைக்கு. அப்பாவிடம் எதுவும் சொல்லிக்கொள்ளவும் முடியவில்லை அவளால்.
அப்பா உள்ளே இருக்க, மேஜையின் மீது ஒலித்துக்கொண்டிருன்தது அது. ஓடி வந்தாள் கோதை. 'வாசுதேவன்' என்று ஒளிர்ந்தது திரை. இனம் புரியாத சந்தோஷமும், உற்சாகமும் அவளுக்குள்ளே பொங்க, முகத்தில் ஓடிய கொஞ்சமான வெட்க ரேகைகளுடன் , கைப்பேசியை எடுத்துக்கொண்டு அப்பாவை நோக்கி ஓடினாள் கோதை.
'அப்பா....ஃபோன்..'
ஃபோன்தானே மா... அதுக்கு ஏன் இப்படி ஓடி வரே?.'
'இல்லைப்பா ... நின்னு போயிடுமோன்னு.... எடுத்து பேசுங்கோ.....' படபடத்தன அவள் கண்கள்.
'சொல்லுங்கோ.... சௌக்கியமா இருக்கேளா?' ஆரம்பித்தார் ஸ்ரீதரன் எதிர்முனையில் கோகுலின் தந்தை.
'பெருமாள் புண்ணியத்திலே நன்னா இருக்கோம். இன்னைக்கு நாங்க உங்காத்துக்கு வரலாம்னு இருக்கோம். உங்களுக்கு சௌகரிய படுமா?'
'வாங்கோ ... வாங்கோ... பெரியவா நீங்களெல்லாம் எங்காத்துக்கு வர்றதுக்கு நான் புண்ணியம் பண்ணி இருக்கணும் வாங்கோ...'
'நாங்களும், என் அண்ணா மன்னியும் வருவோம்.'
'வாங்கோ ..... ரொம்ப சந்தோஷம்.... ஏதானும் முக்கியமான சமாசாரமா?
'எல்லாம் நல்ல விஷயம் தான். கல்யாண விஷயம் பேசலாம்னு வரோம். இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு உங்காத்திலே இருப்போம். உங்க பெரிய பொண்ணு வேதாவையும் ஆத்திலே இருக்க சொல்லுங்கோ.' என்றார் வாசுதேவன்.
பேசி முடித்த அப்பாவுக்கு தலை கால் புரியவில்லை. உள்ளமெங்கும் ஆனந்த அதிர்வலைகள் பரவ அப்பாவையே பார்த்திருந்தாள் கோதை.
தனக்குள்ளே ஏதேதோ யோசித்தபடியே அப்பா அவளிடம் எதுவுமே சொல்லாமல் இருக்க பொறுத்துக்கொள்ள முடியாமல் 'என்னப்பா? என்றாள் மென் குரலில்.
'அது மா.... வாசுதேவன் மாமாவாத்திலேர்ந்து கோகுலுக்கு உங்க அக்காவை பொண்ணு பார்க்க வரான்னு நினைக்கிறேன்'