09. கிருஷ்ண சகி - மீரா ராம்
பவித்ரா சொன்னதைக் கேட்டு சற்றே யோசனையில் ஆழ்ந்தார் காவேரி… பவித்ரா சொன்னது நிச்சயம் பொய்யாக இருக்க வாய்ப்பில்லை… எனில் ருணதியின் வாழ்வில் சிக்கல் இருப்பது உண்மை தானா?... என்னால் அந்த சிக்கலின் பிடியை தளர்த்த முடியுமா?...
தளர்த்தும் அந்த கை யாருடையதாக இருக்க வேண்டும் என இறைவன் தீர்மானித்துவிட்ட பிறகு இதில் நான் யோசிக்க என்ன இருக்க இருக்கிறது?...
அறையின் குறுக்கே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த காவேரியின் மனதில் பல எண்ணங்கள் தலை தூக்க அமைதியாய் அடுத்து நடக்க வேண்டியவற்றை நினைத்து மனதை ஒருநிலை படுத்தினார்…
அப்போது, மகத்-ன் வீட்டில்,
கால் மேல் கால் போட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்தபடி ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள் விசித்திர கன்யா… அவளைத் தேடி வந்த குருமூர்த்தி அவள் அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு அவளருகில் செல்ல முயன்றார்…
ஓரெட்டு எடுத்து வைத்தவர் பின் வைத்த காலை பின்வாங்கியபடி நின்றார்….
கன்யா நான் பேசுவதை எப்படி எடுத்துக்கொள்வாள்???
முதலில் நான் பேச அனுமதிப்பாளா என்ன???...
பின்னர் தானே நான் அவளிடம் பேசுவது எல்லாம்…
சொல்ல வேண்டியவற்றை தெளிவாக சொன்னால் நிச்சயம் கேட்பாள் தான்…
அவளைப் பெற்ற தகப்பன் ஆயிற்றே…
அதற்காகவேனும் அவள் என் பேச்சை கொஞ்சமாவது கேட்பாள்…
You might also like - Mounam etharku... A family drama...
என்ற நம்பிக்கையில் பின் வைத்த காலை முன் வைத்து அவள் முன் சென்று நின்றார்….
“கன்யா…”
“………”
“கன்யா…..” என சற்றே அழுத்தி அழைத்தவர், அவள் தோளை தொட்டு அசைக்க
சட்டென விழித்தவள், யாரை கேட்டு என்னை தொட்டு எழுப்பினீர்கள்??? என்ற பாவனையில் பார்த்தாள்…
“ஒரு நிமிஷம் கன்யா… உங்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
“எங்கிட்ட நீங்க பேச எதுவுமே இல்ல….” என்றபடி காதிலிருந்து ஹெட்போனை ரிமூவ் செய்தாள் அவள்….
“அப்பாகிட்ட பேச உனக்கு எதுவுமே இல்லையாடா?...” என்றவரின் குரலே அவர் கலங்கியிருக்கிறார் என்பதை உணர்த்த….
அவள் எழுந்து நின்று அவரின் கண்களைப் பார்த்தபடி,
“இப்படி எல்லாம் செண்டிமென்டா பேசினா நான் மனசு இறங்கிடுவேன்னு பார்த்தீங்களா மிஸ்டர் குருமூர்த்தி????...” என கைகட்டியபடி அவள் கேட்க
அவருக்கு பேச வார்த்தைகளே இல்லாது போனது…
“இந்த வார்த்தை வராத மாதிரி சீன் போடுறது, அப்புறம் என் பின்னாடியே பேச வர்றது, என்னை தொந்தரவு பண்ணனும்னு நினைக்கிறது, அப்புறம் அதான் உங்க அசிஸ்டெண்ட் எம்பிபிஎஸ், வச்சு என்ன எதாச்சும் மாத்திடலாம்னு தப்பு கணக்கு போடுறது இதெல்லாம் செய்யாம இருந்தீங்கன்னா என் எரிச்சலாவது கொஞ்சம் குறையும்…
இல்ல நான் அப்படித்தான் செய்வேன்னு நீங்க சொன்னா, அதுக்கு அப்புறம் நானும் என்ன செய்யணுமோ அதை செஞ்சிடுவேன்… அப்புறம் என் நிம்மதி போச்சு, சந்தோஷம் போச்சுன்னு உட்கார்ந்து புலம்பாதீங்க சொல்லிட்டேன்… இன்னொரு விஷயம், நீங்க வேண்டாம்னு சொன்னாலும், கெஞ்சினாலும், உங்க நிம்மதி கண்டிப்பா போகத்தான் போகுது என்னால… அதை மாத்த யாராலயும் முடியாது கோடீஸ்வரர் குருமூர்த்தி அவர்களே… என்ன புரியுதா நான் சொல்லுறது?... இல்ல வயசானதால காதுல விழுகலையா எதும் சரியா?... அப்படின்னா சொல்லிடுங்க… நான் திருப்பி சொல்லிடுறேன்… சொன்னீங்களே கொஞ்ச நேரம் முன்னாடி… எதோ ஒரு உறவு பேரு… அதுக்காக தான் திருப்பி வேணாலும் சொல்லுறேன்னு சொன்னேன்… மத்தபடி உங்ககிட்ட பேச எனக்கு எதுவுமே இல்லை…”
என சொல்லிவிட்டு நகர்ந்தவள், அவர் இன்னும் அங்கேயே அசையாமல் நிற்பதை பார்த்துவிட்டு
“வயசான காலத்துல போயி கொஞ்சமாச்சும் ஓய்வெடுங்க… ஏன்னா இனி உங்களுக்கு அது இருக்கவே இருக்காது எப்பவும்… அதும் இங்க நான் இருக்குற இடத்துல… சரியா?...” என சொல்லிவிட்டு கொஞ்சம் கூட தாமதிக்காது அங்கிருந்து அலட்சியமாக அகன்றாள் அவள்…
அவள் சென்றதும் வீசி சென்ற புயலின் தாக்கத்தில் இருந்தார் அவர்…
அருள் இல்லத்தில்….
“ராஜா… நான் உங்கிட்ட….” - காவேரி
“மதர்… எங்கிட்ட என்ன தயக்கம் மதர்?... எதோ கேட்க நினைக்குறீங்க… கேளுங்க…” – மகத்
“இல்லப்பா… இதை எப்படி கேட்குறதுன்னு தான் கொஞ்சம் தயக்கமா இருக்கு…”
“மதர்… நான் வேற யாரோ இல்ல…. சோ கேளுங்க…”
அவன் குரல் சற்று தைரியத்தை கொடுக்க, அவர் மெதுவாக ஆரம்பித்தார்…
“நீ ருணதியை பத்தி என்ன நினைக்குற ராஜா?...”
அவர் அப்படி கேட்பார் என்று எதிர்பார்த்திடாத அவன் ஒரு கணம் தடுமாறித்தான் போனான்… அவர் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்ல தடுமாறவே, அவரே தொடர்ந்தார்…
“ருணதி நல்ல பொண்ணு ராஜா… எனக்கு அவ மேல ஏனோ ஒரு இனம் புரியாத பாசம் வருது… அது ஏன்னும் எனக்கு தெரியலை… அதனால தான் அவ சொந்த பிரச்சினையை நான் என்னால முடிஞ்ச அளவு தீர்த்து வைக்கணும்னு நினைக்கிறேன்… அது தப்பா ராஜா?...”
“தப்பில்ல மதர்… உங்களுக்கு அவங்களைப் பிடிச்சிருக்கு… அது எனக்கு எப்பவோ தெரியும்… சரி மதர்… சொல்லுங்க… இப்போ நான் என்ன செய்யணும்?...”
“நான் என்ன பிரச்சினைன்னு சொல்லவே இல்லையே ராஜா… ஆனா நீ என்ன செய்யணும்னு கேட்குற?...”
“நீங்க அந்த பொண்ணுக்கு உதவணும்னு முடிவு பண்ணின பின்னாடி, நானும் முடிவு பண்ணிட்டேன்…”
“என்ன முடிவு?....” என கொஞ்சம் பதட்டத்தோடு கேட்டவரிடத்தில்,
“என்னோட மதர் சொல்லுறதை கேட்கணும் அப்படிங்கிற முடிவு தான் மதர்…”
என அவன் சொல்லி முடித்ததும் தான் அவருக்கு முகத்தில் புன்னகையே வந்தது….
“ரொம்ப சந்தோஷம் ராஜா… பிரச்சினை என்னன்னு எங்களுக்கும் சரியா தெரியலை…”
“எங்களுக்குமா?... அப்படின்னா?...”
“அது வந்து…” என இழுத்தவர், பவித்ரா தான் தனக்கு இந்த விஷயத்தை சொன்னது என்பதை சொல்லிவிட்டு,
“ருணதி கணவனுக்கும், அவளுக்கும் ஏதோ பிரச்சினை ராஜா… அவ இப்போ அவ கணவனோட இல்லை… குழந்தையோட தனியா இருக்குறா… அவ மாமனார் வீட்டோட பிரச்சினை… இப்போதைக்கு இவ்வளவு தான் தெரியுது… வேற எதுவும் தெரியலை ராஜா….”
அவர் சொன்னதைக் கேட்டவன் மனது இன்னதென்று இனம் பிரித்து சொல்லமுடியாத வேதனையை அனுபவித்தது…
“நான் தான் இங்கு நிம்மதி இல்லாமல் இருக்கின்றேன் என்றால், நான் நேசித்தவளுக்கும் அதே நிலையா?... கடவுளே ஏன்?....” என இரு விழி மூடி தவித்தான் அவன்…