“நீங்கள் எப்போது கிளம்ப வேண்டும்.?”
“இன்னும் பத்து நாட்களில்” என்றவன் “நாளையிலிருந்து நமக்கு நிற்க நேரமிருக்காது. இன்னும் ஐந்து நாட்கள் நான் அலுவலகம் வேறு செல்ல வேண்டும். பிறகு பேக்கிங்கிற்கும், உனக்கும் அம்மாவிற்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் நேரம் சரியாக இருக்கும். அதனால் நாம் இரவுகளில் மட்டும்தான் சந்திக்க முடியும். நாளை காலை நான் உன்னை நம் வீட்டில் விட்டு விட்டு அலுவலகம் சென்று விடுவேன்.” என்று கூறியவன்.. சற்றுத் தயங்கி
“ப்ரத்யும்மா .. வந்து .. நமக்குள் இப்போது எதுவும் வேண்டாம். ஏனென்றால் நான் உடனே ஊருக்கு கிளம்பி விடுவேன். பிறகு இருவரும் ஏங்கி விடுவோம். நடுவிலும் என்னால் எப்படி வரமுடியும் என்று தெரியவில்லை. அதனால் .. இந்த காலகட்டத்தை நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் சரியா? நீ என்ன சொல்கிறாய்?” என்று வினவ,
வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்தபடி “ஹ்ம்.” என்றவள் கீழே படுக்கையை விரிக்கப் போனவளை தடுத்து “மேடம்.. நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம் என்றேன். நீ கீழே படுத்தால் எப்படி முடியும்? நீ என்னோடு தூங்கு. “ என்று அவளை இழுத்து தன் மீது அணைத்தவன், பிறகு நெற்றியில் முத்தமிட்டு “தூங்கு.. “ என்று அவளை அணைத்தபடி படுத்தான். ப்ரத்யுஷாவும் அவன் அணைப்பில் அடங்கி உறங்கினாள்.
மறுநாள் காலை முறைப்படி தன் புகுந்த வீடு சென்ற ப்ரத்யுஷா, அங்கே சற்று நேரத்தில் அவள் கணவன் ஆபீஸ் கிளம்பி விட தன் மாமியார், நாத்தனாரோடு இயல்பாக இருந்தாள்.
அவள் கணவன் கூறியபடி நாட்கள் ஜெட் வேகத்தில் நகர்ந்தன. அவன் அலுவலக வேலை ஒருபுறம், அவனுடைய ஷாப்பிங் ஒருபுறம் என்று நடக்க, இடையில் வீட்டிற்கு, தங்கைக்கு, தன் மனைவிக்கு தேவையானது என்று அவன் எல்லா பக்கமும் பறந்தான். இதனிடையே விசா இன்டர்வியூ, மெடிகல் செக்கப் என்று வேறு அலைய நேர்ந்தது.
அவனின் நிலை உணர்ந்து, ப்ரத்யுஷா அவன் டென்ஷனைக் குறைக்க தன்னாலான உதவிகள் செய்தாள். அவன் உடல்நிலையும் பார்த்துக் கொண்டாள்.
எல்லாம் முடிந்து அவன் கிளம்பும் நாளும் வந்தது. காலையிலேயே அவன் தங்கை வீட்டில், ப்ரத்யுஷா வீட்டில் எல்லோரும் வந்து விட அவர்களுக்குத் தனிமையே கிடைக்காமல் இருந்தது. ப்ரத்யுவின் கண்ணில் அவ்வப்போது கண்ணீர் அணை கட்ட, அவனறியாமல் மறைத்தாள். அவள் மறைத்தாலும் அவள் நிலை உணர்ந்த அவள் கணவனோ உள்ளுக்குள் இறுகினான்.
கிடைத்த சில நிமிட தனிமைகளில், அவளை அணைத்து, முத்தமிட்டு சமாதானப் படுத்தினான். நள்ளிரவு விமானம் என்பதால், இரவு உணவு முடித்த பின் கிளம்பினார். லக்கேஜை டிக்கியில் ஏற்றி விட்டு மற்றவர்கள் விடைபெற அவன் தாயும், மனைவியும் மட்டும் அவனோடு விமான நிலையம் வரை கிளம்பினர். எல்லோரும் வெளியே சென்று விட கடைசியாக வீட்டைப் பூட்ட நின்ற ப்ரத்யுஷாவை உள்ளே இழுத்து நீண்ட இதழ் முத்தத்தை அளித்தான் அவள் கணவன்.
ஏர்போர்ட் சென்று அவன் இமிக்ரேஷன் செக் செல்லும் வரையில் ஆதர்ஷ் தன் மனைவியின் கையை விடவில்லை. கிளம்பும்போது தன் அம்மாவையும் மனைவியையும் ஒருவரைஒருவர் பார்த்து கொள்ளவும், கவனமாக இருக்குமாறும் கிட்டத்தட்ட 1௦௦ முறையாவது சொல்லி விடை பெற்றான்.
ஏர்போர்ட்டிலிருந்து வீடு வந்த பிரத்யுஷாவும் அவள் மாமியாரும் தங்கள் அறைக்கு சென்றனர். அவனை வழியனுப்பி வைக்கும் வரை கட்டுபடுத்திய கண்ணீர் இப்போது வழிந்து ஓடியது. வெறும் பத்து நாட்கள் மட்டுமே தன் கணவனோடு பழகியிருந்தாலும் , ஜென்ம பந்தம் போல் தோன்றியது.
அவன் அந்த அறையில் தனக்காக செய்திருந்த வசதிகளை பார்த்தாள். ஒரு இன்டர்நெட் வசதியோடு கூடிய கம்ப்யூட்டர், புது செல் போன், மேலும் சில பரிசுகள் எல்லாம் பார்த்தாள். நல்ல படியாக அவன் ஊர் சேர கடவுளை வேண்டி கொண்டு அழுகையினோடு படுத்தாள்.
தன் தாயின் வீட்டில் உள்ளது போல் இங்கே இருக்க முடியாது என்பதால், தன் தினசரி வேலைகளை மாற்றிக் கொள்ள முடிவு செய்தாள்.
மறுநாள் காலை நேரத்தில் எழுந்தவள் மாமியாருக்கு தேவையான உதவிகளை செய்து தான் வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் சென்றாள்.
தொடரும்
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.