05. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன்
திரைச் சீலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு கண்கள் தெறித்து விழுந்து விடுமோ எனத் தோன்றும் அளவுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் மஞ்சத்தில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த குதிரைவீரனின் கண்களில் கண்களில் அப்படி என்ன பட்டது?
கடும் வாசனையை நுகர்ந்த அபரஞ்சிதா மஞ்சத்தில் மயங்கிச் சாய்ந்தாள் அல்லவா?அப்படி அவள் மஞ்சத்தில் விழுந்தபோது மல்லாந்த நிலையிலேயே விழுந்தாள்.
ஒரு தங்கச் சிலை கால் நீட்டிப் படுத்திருப்பதுபோல் இருந்தது அவள் படுத்திருந்த நிலை. அவ்வறையிலிருந்த சாரளத்தின் வழியே உள்ளே நுழையும் காற்றினால் மேலாடை சற்றே விலகுவதும் மீண்டும் மூடுவதும் மறுபடி விலகுவதுமாய் இருக்க அழகுப் பதுமை என அவள் கிடந்த விதம் பதினாறு வயதினிலே சினிமாவில் ஸ்ரீதேவி மேலாடை காற்றில் பறக்க கட்டிலில் படுத்துக்கிடப்பதைப்போல் இருந்தது. (கொஞ்சம் பழைய பட உதாரணம்தான். . புதுப் படமெல்லாம் எனக்குத் தெரியாது. . . சாரி. . )
அதையெல்லாம் ரசிக்கும் நிலையிலா நம் குதிரைவீரன் இருந்தான்?அப்படி மல்லாந்து மயங்கிக் கிடந்த அபரஞ்சிதாவின் தொண்டையிலிருந்து திடீரென கர்ணகடூரமான குரல் ஒன்று கிளம்பியது. அப்போது. . . அப்போது. . அவளின் வலப்பக்கக் காதுக்குள்ளிருந்து ஏதோ ஒன்று ஏதோ ஒரு உயிரினம் மெல்ல தலையை மட்டும் வெளியே நீட்டி அங்கும் இங்கும் இருபுரமும் மாறி மாறிப் பார்த்தது. கன்னங்கரேலென்று இருந்த அந்த உயிரினம் பார்க்கவே அருவருப்பாகவும் பயங்கரமாகவும் இருந்தது.
மீண்டும் அது அபாஞ்சிதாவின் காதுக்குள் ஒடுங்கிக்கொண்டது. சில வினாடியில் மீண்டும் கொஞ்சமாக வெளிவந்து தலை நீட்டிய அந்த உயிரினம் தன் உடலை இப்படியும் அப்படியும் ஆட்டியது. இன்னிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருந்த குதிரைவீரனுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ஆனாலும் மனதில் உறுதியோடும் தைரியத்தோடும் நின்றுகொண்டிருந்தான் அவன். அடுத்து என்ன நடக்குமோ என்று படபடப்போடு பார்த்தபடி இருந்தான் குதிரைவீரன்.
உடலை இப்படியும் அப்படியும் ஆட்டிய அந்த உயிரினம் அபரஞ்சிதாவின் காதிலிருந்து தொப்பென்று கீழே குதித்தது. அது என்ன உயிரினம்? என்று தவிப்புடன் அதனை உற்றுப் பார்த்தான் குதிரைவீரன். ஒரு ஆள்காட்டி விரல் அளவே இருந்த அது பார்க்கவே அருவருப்பாகவும் மிகப் பயங்கரமாகவும் இருந்ததோடு அல்லாமல் மிகுந்த கோபத்தோடு புளிச் என்று குதிரைவீரன் வைத்திருந்த தலையணைகள் மீது எச்சிலை பீச்சியடித்தது. அடுத்த நொடி அவ்வுயிரினம் மிகப் பெரிய பாம்பாக உருவெடுத்தது. சாதாரணமானவர்கள் அந்த பாம்பை பார்த்தாலே போதும் அது கடிக்கவே வேண்டாம். பயத்திலேயே இறந்து விடுவார்கள். அந்த பாம்பு மிகுந்த கோபாவேசத்தோடு குதிரைவீரன் ஒரு ஆள் படுத்திருப்பதைப் போல் வைத்திருந்த (ஏற்கனவே அந்த ஆள்காட்டி விரல் அளவு இருந்த உயிரினம் பாம்பு உருவமாக மாறுவதற்கு முன் எச்சிலை உமிழ்ந்ததே) அந்தத் தலையணைகளின் மீது பாய்ந்து பயங்கரமாய்ப் படமெடுத்து படீர் படீர்ரென்று கொத்திக்கொத்தி தன்னுடைய கடும் விஷத்தைப் பாய்ச்சியது. சிலைபோல் நின்று இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த குதிரைவீரனுக்கு இப்படித்தான் ஒவ்வொரு நாளும் இந்த பாம்பால் கொத்தப்பட்டு அபரஞ்சிதாவின் கணவர்கள் மாண்டுபோயிருப்பார்கள் என்பது புரிந்துபோயிற்று. தான்வைத்த தலையணைகளை மனிதனென்று நினைத்து அப்பாம்பு கொத்தியிருக்கிறது என்பதும் அவனுக்குப் புரிந்தது. . தான் கிடக்கும் மஞ்சத்தில் நடக்கும் இன்னிகழ்வுகள் எதனையும் அறியாது மயக்க நிலையிலேயே கிடந்தாள் அபரஞ்சிதா.
அடுத்து ஒரு கணமும் தாமதிக்காது திரைச் சீலையின் பின்னாலிருந்து வெளிவந்த குதிரைவீரன் கொஞ்சமும் தயங்கி தாமதிக்காது அந்த பாம்பை நோக்கி ஓடி கையிலிருந்த வாளால் அதனை இருகூராக வெட்டினான். அந்த பயங்கரப் பாம்பு இரண்டு துண்டாகிக் கீழே விழுந்தது. அப்படி கீழே விழுந்த அடுத்த நொடி மீண்டும் இரு துண்டுகளும் ஒன்றாகி பாம்பு மறுபடியும் உயிரோடு எழுந்தது. கடும் சீற்றத்துடன் குதிரைவீரனோடு சண்டையிட ஆரம்பித்தது. அதன் விஷக்காற்று தன்மீது படாதவாறு குதிரைவீரன் அப்பாம்போடு வெகு லாவகமாக சண்டையிட்டான். வெகு நேரம் சண்டை நடந்தது. குதிரைவீரனுக்குக் கொஞ்சம் களைப்பு ஏற்பட்டது. அப்பாம்பை எப்படிக் கொல்வது புரியவில்லை அவனுக்கு. . அப்போதுதான் அவன் கண்களில் பட்டது பாம்பின் வாலில் இருந்த ஒரு நட்சத்திரக் குறி. சட்டென அக்குறியில் தன் வாளைப் பாய்ச்சினான் குதிரைவீரன். இறுதியாய் இறந்து விழுந்தது அப்பாம்பு. என்ன அதிசயம் இறந்து வீழ்ந்த அப்பாம்பிலிருந்து ஓர் அழகிய இளம் ஆண்மகன் எழுந்தான். எழுந்தவன் குதிரைவீரனின் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.
குதிரைவீரனுக்கு அளவிடமுடியாத ஆச்சரியம். இதென்ன இப்படியொரு அதிசயம் என்று திகைத்தான்.
காலில் விழுந்த அந்த இளைஞன் குதிரைவீரனைப்பார்த்து மரியாதைக்குரியவரே. . என்னை சாபத்திலிருந்து மீட்டுள்ளீர். . உமக்கு மிகவும் நன்றி. . என்றான் மிகவும் வணக்கத்துடன்.
நீ யாரப்பா. . ?பாம்பின் உடலிலிருந்து வெளிவந்த உம்மைக்காண மிகவும் அதிசயமாக உள்ளது. உமக்கு ஏனிந்த நிலைமை ஏற்பட்டது?. . என்ன சாபம் உம்மை இன் நிலைக்கு ஆளாக்கியது?சொல்வாயாக என்று கேட்டான்.
என்ன சாபத்தால் யாரிட்ட சாபத்தால் எனக்கு இன்னிலைமை ஏற்பட்டது என்ற கதையை உமக்குச் சொல்கிறேன் கேளும். . என்று சொல்லி தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தான் பாம்பிலிருந்து வெளிவந்த அந்த ராஜகுமாரன் போலிருந்த இளைஞன்.
அந்த இளைஞன் சொன்ன கதை என்ன? அடுத்த வாரம் பார்ப்போமா?. . நன்றி. .
தொடரும்...
{kunena_discuss:956}