(Reading time: 12 - 23 minutes)

வன் நிரந்தரமாகப் போய் விடுவேன் என்று கூறியவுடன், அனுவின் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத கலக்கம். எங்கே போகிறான், ஏன் போகிறான் என்று எல்லாம் அவளுக்குக் கேட்ட வேண்டும் போல் இருந்தது ஆனாலும் திவ்யா இருந்ததனால் அவள் ஏதும் கேட்க வில்லை. அவனைக் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவனோ இருவரையும் பார்க்காமல் கீழே குனிந்தவாறு இவர்களுக்குப் பதில் கூறிக் கொண்டிருந்தான்.

 “ஹலோ, அனு என்ன காட்சி பொருளா, நீ தினமும் வந்து பார்த்துவிட்டு போவதற்கு. அனுவை எதற்கு நீங்க பார்க்கனும்,” திவ்யாவின் அடுத்த கேள்வி. இன்று இவன் யார் என்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.

திவ்யா அப்படிக் கேட்டவுடன் பதரி விட்டான் விஷ்ணு. அனுவை அவன் காட்சி பொருளாக நினைப்பதா? தெய்வத்தைத் தரிசிக்கும் பக்தன் போலத்தான் இவன் அவளைப் பார்க்கிறான் ஆனால் திவ்யா இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாள். 

“தினமும் ஒருதன் கோயிலுக்கு போகிறான் என்றால் அது கடவுள் மேல் உள்ள பக்தியால்தானே தவிர கடவுளுக்கு என்ன அலங்காரம் பண்ணிருக்காங்க, என்ன நகை போட்டிருக்காங்க என்று பார்ப்பதற்கு இல்லை. அது போலத்தான் நானும் இந்த 20 வருடம் அனுவை பார்த்தது. காட்சிப் பொருள் அது இது என்று தப்பா பேசாதீங்க திவ்யா பிளிஸ்” என்று தன் உணர்ச்சிகளை வார்த்தையாகக் கொட்டினான் விஷ்ணு.

அவனது இந்தப் பதில் இருவரையும் ஆச்சரியத்தில் உரைய வைத்தது. இவன் ஏதோ விளையாட்டாக இருக்கிறான் என்றுதான் திவ்யா இதுவரை நினைத்தாள். ஆனால் அனுவை இவன் கடவுள் நிகராக தன் மனதில் வைத்திருப்பான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை.

அனுவிற்கும் அதே ஆச்சரியம்தான். விஷ்ணுவைப் பார்த்த நாள் முதலே அவன் இப்படிப்பட்ட ஆச்சரியத்தைத் தர தவறவில்லை. யார் என்று தெரியாமல் குழப்பி ஆச்சரியம் தந்தான், வம்பிழுக்க வந்து இருக்கிறான் என்று நினைத்தாள் மன்னிப்பு கேட்டு ஆச்சரியம் தந்தான், இன்று கடவுளுக்கு நிகர் என்று கூறி உடலைச் சிலிர்க்க வைத்துவிட்டான்.

ஆனாலும் திவ்யா விடுவதாக இல்லை “ என்ன அது 20 வருஷம் 25 வருஷம் னு சொல்றீங்க. எப்படி உங்களுக்கு அனுவை தெரியும். அப்படி 20 வருஷம் தெரியும் என்றால் இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போ ஏன் வந்து பேசுறீங்க” அடுத்த கேள்வி கனையைத் தொடுத்தாள்.

அவன் என்ன பதில் அதற்கு கூறப் போகிறான் என்று ஆர்வமாகக் காத்திருந்தாள் அனு.

நடப்பது நடக்கட்டு இன்று அனைத்தையும் சொல்லிவிடலாம் என்று துணிந்து விட்டான் விஷ்ணு. கேள்வி கேட்பது திவ்யாதான் ஆனால் விஷ்ணு அனுவைப் பார்த்த வாரே பதில் கூறினான் “அது வந்து அனு, உங்களுக்கு ஞாபகம் இருக்கா? சின்ன வயதில் நீங்கக் குடியிருந்த பகுதியில் “சற்குரு ஆஸ்ரமம்”என்று ஒரு ஆஸ்ரமம் இருந்தது” என்று கேள்வியோடு நிறுத்தினான்.

அனுவிற்குப் பார்த்த ஞாபகம் இல்லை என்றாலும் அவள் அப்பா அடிக்கடி சொல்வதை கேட்டிருக்கிறாள். ராஜ சேகர் அந்த ஆஸ்ரமத்திற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.

“அப்பா சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். அது அனாதை ஆஸ்ரமம் இல்ல” என்று கேள்வியோடு பதில் கூறினாள் அனு.

“ஆம் அனு. நான் வளர்ந்தது அங்கேதான்” என்று தான் அனாதை என்பதை மறைமுகமாகக் கூறினான் விஷ்ணு. அதைக் கூறிவிட்டு, அது ஒன்று பெரிய கவலை இல்லை என்பது போல் அவன்  முகத்தில் எந்தச் சோகமும் இல்லாமல் ஒரு மென்மையான புன்னகை மட்டுமே இருந்தது.

அதைக் கேட்ட இருவருக்குமே முகம் மாறியது.

“உங்க அப்பா, அம்மா?” என்று நிறுத்தினாள் அனு.

தன் சோகத்தை வெளிக்காட்டாமல் அதே புன்னை அணிந்த முகத்தோடு இல்லை என்பதைப் போல் தலை அசைத்தான் விஷ்ணு.

“ஸாரி” என்று மட்டும் கூறிக் கொண்டு வேறு என்ன சொல்வது என்று தெரியாமல் நிறுத்தினாள் அனு.

இருவர் முகத்திலும் ஜீவன் இல்லை. இருவரும் அவன் நிலைக்காக வருந்தினார்.

அதை உணர்ந்த விஷ்ணு அதை மாற்றப் பேச்சை தொடங்கினான். “ ச்ச நீங்க எதற்குக் கவலை படுறீங்க அனு. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. அதான் இதை எல்லாம் மறக்க நான் ரெம்ப தூரம் போக போறேனே. அங்க போனா கண்டிப்பா இதை எல்லாம் மறந்து சந்தோஷமா இருப்பேன்” என்று அவர்களுக்கு இவன் ஆறுதல் கூறினான்.

அதற்கு திவ்யா “என்ன நீங்க எப்போப் பார்த்தாலும் தூரமான இடத்துக்குப் போக போறேன் னு சொல்றீங்க அப்படி எங்கேப் போக போறீங்க” என்றாள்.

“இப்படி திடீர் என்று கோட்டு விட்டாளே. இப்போது என்று பார்த்து எந்த ஊரு பேரும் ஞாபகம் வர மாட்டங்குதே. பேசாமல் உண்மையைச் சொல்லிவிடலாமா? எமனைப் பார்க்க எம லோகம்  போறேன் என்று சொன்னா நம்பவா போறாங்க” என்று தனக்கு தானே புலம்பினான் விஷ்ணு.

அவன் புலம்பியதில் எமன் என்ற வார்த்தை மட்டும் திவ்யா காதில் தெளிவாக விழுந்தது. “என்னது எமனா?” தன் காதில் விழுந்ததை ஊர்ஜித படுத்திக் கொள்ளக் கேட்டாள்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட விஷ்ணு “எமனா? நான் ஏமன் தானே சொன்னேன். எமனைப் பார்க்க யாராவது போவாங்கள” என்று அசடு வழியச் சமாளித்தான் விஷ்ணு. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.