(Reading time: 18 - 35 minutes)

"யோ இதற்க்காகத்தானே நான் இந்த காதலே வேண்டாம் என்றேன். இன்று என் காதல் நிறைவேற போவதில்லை என்று அறிந்தது மட்டும் அல்லாமல் என் நட்பும் போயிற்றே. இப்படி ஒரு கேள்வி வரும்போது தைரியமாக எதிர்கொள்ளலாம் என்று எளிதாக எண்ணினேனே. ஆனால் அது இத்தனை வலி மிகுந்ததாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லையே " என்று மனம் பதறினாள். வேதனையிலும் குழப்பத்திலும் அவள் மூழ்கியிருக்க அவள் கழுத்தை சுற்றி  மெல்ல இரு வளைகரங்கள் வளைத்தன.

"உனக்கு வேணா உன் தகுதி தெரியாமலிருக்கலாம். உன் தகுதி என்னனு சொல்லட்டுமா. எல்லோரையும் நேசிக்கும் நல்ல மனசிருக்கு. யாரையும் நோகடிக்காத பொய் பேசாத நேர்மையான குணமிருக்கு. எல்லாத்துக்கும் மேல யு ஆர் தி பெஸ்ட் ப்ரெண்ட் ஒப் மது. இதுக்கும் மேல எனக்கு என்ன தகுதி வேணும் உங்க அண்ணனை கல்யாணம் பண்ணவும் உங்க வீட்டுக்கு மருமகளா வரவும் அப்படின்னு நீ கேக்க வேணாமா. இப்படியா நின்னு அழுதுட்டு இருப்ப " என்று திவ்யாவின் தோளை தொட்டு திருப்பி அவள் கண்களை துடைத்து விட்டவள், "பைத்தியகாரி இந்த உலகத்துல உன்னை விட ஒரு பெஸ்ட் மேட்ச் என் அண்ணாக்கு கிடைக்காது. நீ எனக்கு அண்ணியா வர போற அப்படின்னு தெரிஞ்சதும் நான் எவ்வளவு சந்தோச பட்டேன் தெரியுமா? " என்று திவ்யாவை அணைத்து கொண்டாள்.

"நீ நெஜமா சொல்றியா. " என்று ஒரு தடுமாற்றத்துடனே கேட்ட திவ்யாவை பார்த்த மதுவிற்கு புரிந்தது அவள் தன்னுடைய கேள்வியால் மிகவும் அரண்டு போயிருக்கிறாள் என.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

"ஹ்ம்ம் இல்லை பொய் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் என்கிட்டே விஷயத்தை மறைச்சுடிங்க. உங்களுக்கு அதுக்கான பனிஷ்மெண்ட் கொடுக்கணும்னு தான் நான் அப்படி கேட்டேன். இனி நெக்ஸ்ட் அந்த சரணுக்கு இருக்கு பனிஷ்மெண்ட். " என்று மது சொல்ல "அய்யயோ வேணாண்டி பாவம் அவரை திட்டாதே. " என்று சரணுக்காக பரிந்து பேசிய திவ்யாவை ஆழமாக ஒரு பார்வை பார்க்க , கன்னங்கள் சிவக்க தலை குனிந்தாள் திவ்யா.

"அட்ரா சக்கை உங்களுக்கு வெக்க பட கூட தெரியுமா அண்ணி " என்று மது கேட்க மேலும் வெட்கத்தில் சிவந்தவள் "ச்சீ போடி " என்று மதுவின் கன்னத்தில் தட்டி அவள் தோளிலேயே சாய்ந்து கொண்டாள்.

"ஒரு விஷயம் சொல்லட்டுமா திவ்யா. இந்த நிமிஷம் உலகத்துலையே ரொம்ப ஹப்பியான பெர்சன் அப்படினா அது நான் தான். என்னால இந்த சந்தோசங்களை தாங்க முடியலை. என்னை தேவதையை போல தாங்கற அம்மா அப்பா, எனக்கு ஒரு சின்ன கஷ்டம் கூட வரகூடாதுன்னு  நெனைக்கிற அண்ணாங்க, அவங்க பசங்களை விட என் மேல அன்பை பொழியற என் சித்தப்பா சித்திங்க, என்னை நான் நேசிப்பதை விட அதிகமா நேசிக்கிற மதி, என்னை கோழிக்குஞ்சை போல அடை காக்கற என் ப்ரெண்ட் நீ, அதே ப்ரெண்ட் என் வாழ் நாள் முழுவதும் என் கூடவே வரப்போற என் சொந்தமா, என் அண்ணாவுடைய வாழ்க்கையில் வசந்தமா. இதுக்கும் மேல ஒரு பொண்ணுக்கு வேற என்ன வேணும். நான் கேட்காமலேயே எனக்கு எல்லா வரமும் அந்த ஆண்டவன் கொடுத்துருக்கானே அது ஏன். ?" -மது

"ஏன்னா நீ ரொம்ப நல்லவ. யாரையும் கஷ்டபடுத்துனது இல்லை . ஒரு சின்ன எறும்பை தெரியாம நசுக்குனா கூட அதுக்காக வருத்தபடுவ . இப்படி ஒரு குணமுள்ள பொண்ணுக்கு இதெல்லாம் கெடைக்கலைனா தான் தப்பு " -திவ்யா

"எனக்கு வேற எதுவுமே வேண்டாம் என் குடும்பம் இதே போல என்னைக்கும் சந்தோசமா இருக்கணும் " என்று கூறிய மது கண்மூடி படுக்கையில் சாய்ந்தாள்.

தே நேரத்தில் உறங்குவதற்கு முன்பு எல்லாம் சரியாக எடுத்து வைத்து விட்டார்களா என்று சரி பார்த்து விட்டு தனது அறையை நோக்கி சென்ற மங்களம் ஹாலில் ஏதோ சத்தம் கேட்கவும் அங்கே ஓடியவர் அங்கே கீழே விழுந்து உடைந்து கிடந்த தன் மாமனார் மாமியாரின் போட்டோவை பார்த்தவர் நெஞ்சம் பதறியது. "ஐயோ இது என்ன இப்படி ஒரு அபசகுனம் " என்று ஓடியவர் அந்த ஆளுயர போட்டோவை ஓரமாக நகர்த்தி வைத்து அங்கே கிடந்த கண்ணாடி துண்டுகளை எடுத்து குப்பை தொட்டியில் போட்டவர், வெளியே உறங்கி கொண்டிருந்த வீட்டு வேலையாளை அழைத்து, " இந்த போட்டோவை நாளைக்கு காலையில எல்லோரும் ஹாலுக்கு வரதுக்கு முன்னாடி பழைய மாதிரி கொண்டு வந்து மாட்டிருப்பா " என்று பணித்து விட்டு உள்ளே கட்டிலில் வந்து படுத்தவருக்கு வெகுநேரம் உறக்கம் பிடிக்கவில்லை. ஏனோ இந்த இரண்டு நாட்களாக அவருடைய மனம் அலைபாய்ந்து கொண்டே  இருக்கிறது. எதனால் என்று புரியவில்லை. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அப்படி என்ன தப்பாக நடக்க போகிறது என்று தோன்றும் அதே வேளையில் அன்று அந்த ஜோசியர் மதுவின் ஜாதகத்தை பார்த்து சொன்னது வேறு ஞாபகம் வந்து தொலைக்க இவருக்கு மனதின் தைரியம் குறைந்து போனது.

எதைஎதையோ நினைத்து மனம் குழம்பியவர் அவரறியாமல் உறங்கி போனார்.

டுத்த நாளை மதுவும் திவ்யாவும் தங்களுக்குள் உண்டான அந்த புது உறவின் உரிமையிலும் தங்களது எதிர்காலத்தை பற்றிய கற்பனைகளிலும் சந்தோசமாகவே தொடங்கினர் திவ்யாவின் வீட்டிலிருந்து அந்த தொலைபேசி அழைப்பு வரும் வரை.

"மது அப்பா... அப்பாக்கு..." -திவ்யா

"திவ்யா ஏன் அழற.. அப்பாக்கு என்ன.. அழுகாதே என்னனு சொல்லுடா..."-மது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.