19. காதல் பின்னது உலகு - மனோஹரி
அதிபனுக்கு அனு வந்துவிட்டாள் என்ற உற்சாகத்தில் மணி ஏறத்தாழ இரவு 10.30 ஆகப் போகிறது என்பது மனதில் படவே இல்லை….
உள்ளுக்குள் துள்ளுகிறது தன் உள்ளம் என்பதை கூட சட்டை செய்யாமல்….ஏன் தனக்கு இந்த உற்சாகம் என்றெல்லாம் ஆராயாமல் அவள் வீட்டை நோக்கி இழுத்த மனதை பின் பற்றினான் தன் கால்களால்.
அவள் வீட்டை நெருங்கும் போது சிணுங்கியது இவன் மொபைல்….. இணைப்பை எடுக்கவும்… “எங்கடா இருக்க நீ….இன்னுமா வரலை “ என்ற அபயனின் குரலில்தான் நேரம் என்னதாக இருக்கும் என இவனுக்கு உறைக்க…..
”வீட்டுக்கு வந்துட்டேன்டா….பக்கதுலதான் இருக்கேன்” என தம்பிக்கு பதில் சொல்லி இணைப்பை துண்டித்துக் கொண்டே சற்று தயங்கி நின்றான்…… இப்ப போய் அவள பார்க்க முடியாதே என்றது மனது.
ஏதோ தோன்ற….எப்படியும் அவள் வீடு பூட்டி இருக்கும் என தெரிந்தாலும்..…அதைப் போய் ஒரு பார்வை பார்த்துவிட்டாவது திரும்பலாம் என்ற எண்ணத்தில் இவன் அவள் வீட்டு வாசலை அடைய…. வீட்டிற்குள் இன்னும் வெளிச்சம்…. வீட்டின் பின் புறம் ஆள் நடமாட்டம் இருக்கும் அரவம்.
அனு வீட்டின் பின் புறம் நின்று கொண்டிருக்கிறாள் என புரிந்துவிட்டது இவனுக்கு….
‘இத்தன மணிக்கு கொஞ்சம் கூட யோசனையே இல்லாம கதவ திறந்து வச்சுகிட்டு வெளிய வேற நிக்காளே…இவள என்ன சொல்ல….’ கட கடவென அவள் வீட்டின் பின் கதவை நோக்கிப் போனான்…… ஆனால் இத்தனை மணிக்கு அவள் வீட்டின் உள்ளே நுழைந்து போவது சரி இல்லை என்பதால்…..அவள் வீட்டை சுற்றிக் கொண்டு பின் வாசல் பகுதிக்குப் போனான்….
அதை நெருங்கும் போதே அவள் சிறு குரலில் பேசும் சத்தம் காதில் விழுகிறது….. ஏதோ ஒரு மொழியும் ஆங்கிலமும் கலந்து கலந்து பேசிக் கொண்டிருந்தாள் அவள்….. ஆங்கிலத்தில் பேசியது மட்டும் இவனுக்கு புரிந்தது….
“இங்கெல்லாம் ஒரு கல்யாணம் ஆகாத பையனும் பொண்ணும் நைட்டு வயல்ல தனியா இருக்றத யாரும் பார்த்தா, ஊர்காரங்களே கண்டிப்பா பிடிச்சு வச்சு கல்யாணம் செய்து வச்சுடுவாங்க…..” யாரிடமோ சொன்னாள் அவள்……
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
‘இவ எந்த கால சட்டத்தைப் பேசிகிட்டு இருக்கா…..இப்ப அப்படில்லாம் இங்க எதுவும் கிடையாதே…..…ஆனாலும் இத எதுக்கு இவ யோசிக்கா….அதுவும் இப்ப…?’ அதிபன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே…
அவளிடம் அடுத்த மொழியில் பேசிய ஒரு ஆண் குரலுக்கு எதையோ அடுத்த மொழியில் சொல்லிக் கொண்டிருந்தவள் “அதெல்லாம் நல்லாவே தெரியும்….தினமும் தீபன் அந்த வயலுக்கு நைட் கண்டிப்பா ஒரு விசிட் வருவாங்களாம்…..” என இடையில் ஆங்கிலத்தில் தொடங்க….
‘நான் வயலுக்கு போறத பத்தி இவளுக்கு என்ன?’ என இயல்பாக யோசித்தவனுக்கு
“அவங்க தம்பி டெய்ரி ஃபார்ம்க்கு போய்ட்டு…அங்க இருந்து இந்த வயலுக்கு வந்து ஒரு 45 மினிட்ஸாவது இருந்துட்டு அப்றம்தான் வீட்டுக்கு போவாங்களாம்…….நான் டைம்லாம் கரெக்டா கால்குலேட் செய்து தான் வயலுக்கு போவேன்…..” என அவள் தொடர்ந்து சொன்ன வார்த்தைகளை எப்படி எடுக்கவென தெரியவில்லை….
உள்ளுக்குள் ஒரு பக்கம் சுர் சுர் என எகிறி ஏறுகிறது…. இவன் இருக்கும் டைம்மை கால்குலேட் செய்து அவ அங்க வருவாளாமா? நைட்ல அப்படி சேர்த்து யாரும் பார்த்தா ஊரே பிடிச்சு வச்சு கல்யாணம் செய்துடுவாங்கன்னு சொல்லிவிட்டு இப்படியும் சொன்னால்?????
ஆனாலும் ‘அவள தப்பா நினைக்க கூடாது…..எந்த விஷயத்துக்கும் அடுத்த கோணம் ஒன்னு இருக்கும்….இதுக்கு வேற எதாவது சரியான அர்த்தமும் இருக்கும்…’ என தன்னைத்தானே தடுத்தாள எவ்வளவோ முயன்றான் அவன்…
அடுத்து இவள் அந்த அடுத்த மொழியில் பேச அவளிடம் பேசிக் கொண்டிருந்த அந்த ஆண் அதற்கு அதே மொழியில் ஏதோ சொல்ல…..
“இன்னைக்கு நைட் மட்டும் ப்ளான் படி எல்லாம் நடந்துட்டா போதும்…..அடுத்து ஒரு மாதிரி நான் செட்டில் ஆயிடுவேன்…..” அனுவின் பதில் இப்படி இருந்தது…..
இப்போது அந்த ஆண் ஏதோ சொன்னான்….
“நோ நோ தீபன்ட்ட போய் நேர்ல கேட்கிறதாவது….. ஆரம்பத்துல இருந்து அவங்களுக்கு என்ன சுத்தமா பிடிக்கலை…… கண்டிப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டாங்க…. அதனால தீபன் பின்னால அலையுறதெல்லாம் டைம் வேஸ்ட்….”
மீண்டும் அந்த ஆண் ஏதோ சொல்ல….
“அதோட நமக்கு தேவை வயல்…..தீபன் இல்ல…” அனு இப்படி ஒரு பதிலை அந்த ஆணுக்கு சொல்வது அதிபனுக்கு கேட்கிறது.
“நான் போய் சரியா 30 மினிட்ஸ்ல நான் சொன்ன மாதிரி அங்க வா….” இப்படி முடித்தாள் அனு.
இதற்கு மேலும் இதை இவன் என்னவென்று யோசிக்க….. கொதிக்கிறது ஒரு புறம் அதிபனுக்கு….எவ்வளவுதான் அவள் மலங்க மலங்க அப்பாவியாய் முழித்தாலும் அவள் ஆரம்ப அறிமுகமே திருட்டுதானே…..
ஆனாலும் இந்த உரையாடல் இரண்டு மொழிக் கலவை..ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக இதற்கு வேறு அர்த்தமும் இருக்க கூடும்….