36. கிருஷ்ண சகி - மீரா ராம்
குருமூர்த்தியின் வார்த்தைகளால் மகத்தின் மேல் பல மடங்கு குரோதம் கொண்டவள், காவேரியை வெறுக்கவில்லை… எனினும் காவேரியின் மேல் கோபம் இருந்தது… அதற்கும் குருமூர்த்தியின் தூபமே காரணம்….
அவளின் அந்த கோபத்தை தன் பக்கம் எடுத்துக்கொள்ள விழைந்த குருமூர்த்திக்கு கடைசியில் வெற்றியே கிட்டியது…
மகத்திடம் ஹாஸ்பிட்டல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதே அவருக்கு அங்கிருந்த மற்றவர்களின் மீது நம்பிக்கை இல்லாததால் தான்… மேலும், மகத் இதற்கென தனியாக சம்பளம் கேட்கமாட்டான்… நியாயஸ்தன்… நேர்மையானவன்… அதனால் அவனிடம் பொறுப்பை ஒப்படைக்கப்பட்டது… இது ஆரம்பத்தில் கன்யாவிற்கு தெரிந்து அவள் கேட்ட போது, குருமூர்த்தி அவளிடம் விளக்க அவளும் சரி என்றாள்…
ஆனால் இன்று, இத்தனை நடந்த பிறகு, தனக்கும் அவன் தாலி கட்டி விட்டான் என்றறிந்த பின்பு அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை… குருமூர்த்தியின் குரோத பேச்சுக்கு செவி சாய்த்தவளிடம், காவேரியையும், மகத்தினையும் பழிவாங்க முடிவெடுத்திருப்பதாக அவர் கூற, அவள் முதலில் மனதிற்குள் காவேரியையுமா என தயங்கினாலும், பின்னர் தகப்பனின் குணம் அறிந்து சம்மதித்தாள்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
அந்த நாடகத்தின் படி, அவள் குருமூர்த்தியையும், காவேரியையும், மகத்தினையும் வெறுப்பது போல் காட்டிக்கொண்டாள் அனைவரின் முன்னிலையிலும்…
ஆனால் அவள் மனதிற்கு மட்டுமே தெரியும்… அவள் இதில் காவேரியை மட்டும் வெறுக்கவில்லை என்று… ஏனெனில் காவேரியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டே அந்த தாலியை அவள் சுமந்திருந்தாள்… அது குருமூர்த்திக்கு தெரியாது…
“இந்த தாலி என் ராஜா கட்டினது… இது உன் கழுத்தில இருந்து இறங்கணும்னா அது என்னாலயோ, இல்ல ராஜாவாலயோ தான் இருக்கணும்… நீயா எந்த சந்தர்ப்பத்திலேயும் இத கழட்டக்கூடாது… இனி நானும் உன்னைத் தேடி வர மாட்டேன்… நீயும் என்னைத் தேடி வராதே… மீறி இந்த தாலியை கழட்டணும்னு நினைச்ச, நான் செத்தா கூட என் முகத்துல நீ விழிக்கக்கூடாது… என் வார்த்தைக்கு மரியாதை கொடுக்குறதா இருந்தா, நான் செத்த பின்னாடி என்னைப் பார்க்க வரலாம்… இல்ல உன் இஷ்டத்துக்குத்தான் ஆடுவேன்னு சொன்னா, ஆடிக்கோ… ஆனா அதைப் பார்க்க நான் இங்க இருக்கமாட்டேன்… இன்னொரு முக்கியமான விஷயம், ராஜா இனி உன் கணவன், அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ… அவனை இனி வா, போன்னு மரியாதை இல்லாம பேசுற பழக்கத்தை எல்லாம் வச்சிக்காத, மீறி அவனை எதாவது தவறா பேசின உன்னை கொன்னுட்டு தான் மறுவேலை பார்ப்பேன்… சொல்லிட்டேன்…” என்றவர், அடுத்த நிமிடம் அங்கே நிற்கவில்லை…
அவர் பேசிவிட்டு சென்ற வார்த்தைகள் அவள் காதுகளுக்குள்ளே ரீங்காரம் பாட, தன்னைப் பார்க்க வராதே என்று சொல்லியவர், மகத்தினை எதாவது பேசினால் வந்து உன்னை கொன்றே விடுவேன் என்று சொன்ன வார்த்தைகளை ஜீரணிக்க முடியாது திணறினாள் அவள்…
தனது முழுது குரோதத்தையும் அவன் பக்கம் திருப்பினாள் அவளும் விரும்பியவனை கைப்பிடிக்க முடியாத வருத்தத்தில்…
ஆனால், பாழாய்ப்போன அவள் மனதிற்கு ஏனோ இதில் மகத் மேல் எந்த வித தவறும் இல்லை என்ற உண்மை கொஞ்சமும் புரியவே இல்லை… இன்று வரை…
தனக்கு தாலிகட்டிவிட்டு, ருணதியிடம் பேசிக்கொண்டிருக்கும் அவன் மீது ஏனோ, தான் இது போல் தனது இந்தரிடம் பேச முடியவில்லையே, அவனோடு வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம் மேலோங்க, அது ருணதியின் பக்கமும் ஆத்திரமாக திரும்பியது…
அந்த சமயத்தில் தான் துருவனை தூக்கிச் சென்று அவளை அழ வைக்க அவள் திட்டம் போட்டது… ஆனால் ஜித் கடத்திவிட, அவள் ருணதிக்கு உதவி செய்வது போல் சென்று பேசக்கூடாததெல்லாம் பேசி காவேரியின் கோபத்திற்கு ஆளாக கடைசியில் அது விபரீதத்தில் முடிந்தது…
ஆம், அவளே எதிர்பாராத நிகழ்வு… அவள் கழுத்திலிருந்த தாலியை காவேரியே பறித்தது தான்… அவளுக்கு நேர்ந்த பேரதிர்ச்சி…
“எந்த தாலியை கழட்டினால், செத்தால் கூட என் முகத்தில் விழிக்கக்கூடாதென்று..” கூறினாரோ, அந்த தாலியை அவரே அறுத்தெறிந்ததை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… அவள் அதை ஒரு சுமையாக தான் பார்த்தாள்… அது பாரமாக தான் இருந்தது அவளுக்கு… ஆனாலும், அதை அவள் சுமந்ததற்கு காரணம் காவேரி… அவள் வாழ்க்கைக்காக அவர் முடிவெடுத்து நடத்திய ஒரு திருமணம்… அதை அவரே முறித்த போது, அவளுக்குள் ஒரு அதிர்வு, அவருக்கும் அவள் வாழ்வில் கண்ணாமூச்சி ஆட விருப்பம் தானா அந்த கடவுள் மாதிரி… மகத்துடனான வாழ்க்கையை அவள் வாழ எண்ணவில்லை… எனினும், அவர் செய்த காரியம், அவளை சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க வைத்தது… ஏனெனில் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் முதல் ஆத்மா அவர் தான்… அவர் தான் அன்று இதை என் கழுத்தில் அணிவிக்க சொன்னார்… இன்று அவரே அதை அறுத்தெரிகிறார் என்றால், என யோசித்தவளுக்கு, இனி மகத்துடன் எந்த பந்தமும் இல்லை என்றெண்ணியதும் வந்த சந்தோஷம், இப்படி ஒரு தாலி அதுவும் என் இந்தர் கையினால் எனக்கு கிடைக்கவில்லையே என்ற நினைவு வர, அதுநாள் வரை இருந்த கோபம், ஆத்திரம், அனைத்தும் அழுகையாய் வெளிவர, அவள் கண்கள் ரத்தமென சிவந்து போயிற்று… இந்தரின் நினைவுகள் அவளை மொத்தமாய் புரட்டிபோட, துவண்டு போய் விழுந்தாள் நிலத்தில் பொம்மையாக…