“என்ன மாமி இது. கௌரி மாறி பொறுப்பு யாருக்கும் வராது. (ஆண்டவா இந்தக் கொடுமைய என்னன்னு சொல்ல, கௌரிய பெரிய பருப்புன்னு வேண்ணா சொல்லலாம், பொறுப்புன்னு எல்லாம் சொல்ல முடியாதே. உங்க மாட்டுப்பொண்ணுக்காக நீங்க அடிக்கற ஜால்ரா சத்தம் காதைக் கிழிக்கறது லச்சு மாமி) கிருஷ்ணாவை அவ பார்த்துக்கற ஒண்ணேப் போறாதா. ஆபீஸ், ஆம், குழந்தைன்னு சகலகலா வல்லியா சமாளிக்கறா”, லச்சு மாமி சொல்ல மற்றவர்கள் கௌரியா=பொறுப்பா என்று ‘ஙே’ முழி முழித்தார்கள்.
“சரிம்மா, நான் கிளம்பறேன், இம்மிக்ரேஷன் கிளியர் பண்ணிட்டு உள்ள போக சரியா இருக்கும்”
“சரிடி பார்த்து போயிட்டு வா, போன உடன போன் பண்ணு”
“உடம்ப பார்த்துக்கோ கண்ணா, ஜாகிரதையா போயிட்டு வா”,என்று லக்ஷ்மியும், பத்துவும் கூற, ராமன் அவர் பங்குக்கு வாழ்த்தினார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
“ஜாக்கிரைதையா போயிட்டு வா ஸ்வேதா. உனக்கு டைம் கிடைக்கும்போது எங்களுக்கும் பேசு. அம்மா, அப்பா பத்தி கவலைப்படாத. நானும், மாமாவும் பார்த்துக்கறோம். நீ ஹரி சாமானை எடுத்துண்டு அலையாத. அவனே வீக் எண்டு வந்து வாங்கிக்கறேன்னு சொன்னான்”, ஜானகி கூற ஹரியை பார்க்காமல் வீக் எண்டு எப்படி எஸ்ஸாவது என்று யோசிக்க ஆரம்பித்தாள் ஸ்வேதா. பின் மீண்டும் ஒரு முறை அனைவரிடமும் விடை பெற்று இம்மிக்ரேஷனை நோக்கி நடந்தாள்.
எல்லா ஃபோர்மாலிடீஸும் முடித்து உள்ளே வந்து அமர்ந்து ஹரியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் ஸ்வேதா. ஸ்வேதா ஹரியின் மீது இத்தனை காண்டாக இருப்பதற்கு நூறு சதவிகிதம் நியாயம் இருக்கிறது.
ஸ்வேதா, ஹரியிடம் முதலில் காதலை சொல்லி அவன் மறுக்க, அதன் பின்னும் இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் இவள் தன் மனதை அவனுக்கு உணர்த்த அவன் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.
தன் அண்ணனின் கல்யாணத்தின் போது வைத்த நலங்கில், இவளைப் பாட சொல்ல, இவள் பாட ஆரம்பிக்கும்போது மிகச்சரியாக ஹரி எங்கேயோ வெளியில் சென்று விட்டு உள்ளே நுழைய இவளும் ‘மன்னவன் வந்தானடி தோழி’, என்று சிச்சுவேஷன் பாட்டுப் பாடினாள். ஹரியும் மாட்டுவேனா என்று ‘ என்னென்ன செய்தோம் இங்கே... இதுவரை வாழ்விலே’ என்று தத்துவ பாடலை எசப்பாட்டாக பாட நொந்து விட்டாள் ஸ்வேதா.
அதன் பின் அவனை அவள் கண்ணால் மற்றும் காலால் தொடர்ந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஸ்வேதாவின் தோழிகள் அனைவரும் இவர்களின் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தைப் பார்த்து அவளை ஓட்டித் தள்ளி விட்டார்கள். இது வேலைக்காகாது என்று மறுபடியும் கஜினி முகம்மதுவாக அவனைப் பார்த்து தன் விருப்பத்தைக் கூற விரைந்தாள். அவளிடம் சிக்காமல் போக்கு காட்டிய ஹரியும் ஒரு சந்தர்ப்பத்தில் மாட்டிக் கொண்டான்.
“என்ன வேணும் ஸ்வேதா உனக்கு, எதுக்கு என் பின்னாடியே வர்ற”
“இல்லை ஹரி எனக்கு உங்களோட கொஞ்சம் பேசணும்”
“என்ன பேசணும் சீக்கிரம் சொல்லு. நம்ம ரெண்டு பேர் இங்கத் தனியா நின்னுண்டு பேசறதை யாரானும் பார்த்தா தப்பா நினைப்பா”, என்று சொல்ல, நான் சொல்ல வேண்டிய டயலாக் எல்லாம் இவன் பேசறானே என்று கடுப்பானாள் ஸ்வேதா.
“ஹரி முன்னாடி பணப் பிரச்சனை.... கல்யாணம் நடக்குமா... நடக்காதா.... இப்படி ஏகப்பட்ட டென்ஷன் இருந்தது. இப்போதான் எல்லாம் சுபமா முடிஞ்சுடுத்து இல்லை. இனிமேயானும் நான் சொன்னதை நீங்க கன்ஸிடர் பண்ணலாமே”
“உனக்கு என்ன வயசு ஸ்வேதா ஒரு பதினெட்டு, பத்தொன்பது இருக்குமா. இப்போ எந்தப் பையனை பார்த்தாலும் ஹீரோ மாதிரிதான் தெரியும். இது லவ் பண்ற வயசு இல்லை. படிக்கற வயசு. ஒழுங்கா அதை மட்டும் பாரு. தேவை இல்லாததை எல்லாம் பேசிண்டு நடக்காத. ஒழுங்கா நல்லபடியா படிச்சு முடிச்சு ஒரு வேலைலயும் உட்கார்ந்த பிறகு அப்போவும் உனக்கும், எனக்கும் பிடிச்சு இருந்தா மேல்கொண்டு பேசலாம். அது வரைக்கும் தயவு செய்து என் பின்னாடி வராத”, அவன் கொஞ்சம் காட்டமாகக் கூற ஸ்வேதா கண் கலங்கி அந்த இடத்தை விட்டு சென்றாள். அதன் பின் அவன் இருக்கும் பக்கம் கூட அவள் திரும்பவில்லை. ஹரிக்கு அவள் கண்கலங்கி சென்றது மனதை வருத்தினாலும், அவளின் நல்லதிற்குத்தான் என்று மனதைத் தேற்றிக் கொண்டான்.
நான்கு வருடங்கள் கழித்து அத்தனை பிரச்சனைகளும் முடிந்து அவன் அவளிடம் பேச முயல இப்பொழுது முறுக்கிக் கொள்வது அவள் முறையானது. இவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவளின் விமானத்திற்கான அழைப்பு வர, தன் கைப்பைகளுடன் விமானத்தில் சென்று அமர்ந்தாள். விமானம் வான் நோக்கி எழும்பும் வரை வேறு சிந்தனை இன்றி இருந்தவள். அது சீராக ஓட ஆரம்பித்தவுடன் மீண்டும் அவள் சிந்தனையை ஹரியிடம் கொண்டு நிறுத்தினாள்.
இத்தனை வருடங்கள் இருவரும் வேறு வேறு ஊர்களில் இருந்ததால், எப்படியோ அவனைத் தவிர்த்தாகி விட்டது. இனி இருக்கும் மூன்று மாதங்களும் வேலை, வேலை என்று அவனை தவிர்த்து விடலாம். அவன் வருவதாக மாமி சொன்ன வார இறுதியில் எங்கேனும் வெளியில் சென்று விட வேண்டும் என்று ஏகப்பட்ட பிளான்களுடன் அவள் JF கென்னடி விமானத் தளத்தில் இறங்கி தன் பெட்டிகளை தள்ளியபடியே வெளியில் வர, அங்கே சிவப்பு ரோஜா பூங்கொத்துடன் முகம் முழுக்க புன்னகையை சுமந்தபடி ஹரி நின்றிருந்தான். அந்தோ பரிதாபம்..... Swetha proposes, Hari disposes.
தொடரும்
{kunena_discuss:964}