(Reading time: 12 - 23 minutes)

07. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval  

னிக்கா தன்னுடைய அறையின் வாசலுக்கு வந்து நிற்கிறாள் என்று அவளைப் பார்க்கும் முன்னதாகவே ரூபனின் புலன்கள் அவனுக்கு சிக்னல் கொடுத்தன. இப்போது மட்டுமா பல நாட்களாகவே அவன் தன்னையே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவள் வீட்டிற்குள் வரும் முன்னதாகவே அவன் மனதிற்கு எப்படித்தான் புரியுமோ? தன்னையறியாத சந்தோஷம் உள்ளுக்குள் குமிழியிடும். அவள் குரல் முன்னறையில் கேட்கும் முன்னே அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று மனம் பரபரக்கும். தன்னைப் பார்க்க வருவாள் என்று நினைக்கும் போது அவள் அவனைச் சந்திக்க வராமல் ஜீவனுடன் பேசும் சத்தம் கேட்டதும் காற்றுப் போன பலூன் போல மனம் உற்சாகம் இழந்து தவிக்கும்.

 ஒருவேளை முன் தினம் தன்னிடம் திட்டு வாங்கிய பின் சமாதானப் படுத்த வந்திருப்பாளோ? எனத் தோன்றியது. எப்பவும் அவள் அப்படித்தான், தன்னுடைய தவறென்றால் உடனே வந்து சமாதானப்படுத்தி விடுவாள். அடிக்கடி வீட்டில் நடப்பதுதான். ஆனால், சாரி (sorry) கேட்கின்ற வழக்கமே கிடையாது. சமாதானத் தூது விடுவதைப் போல எங்கிருந்தாவது ஒரு வெள்ளைத்துணியைக் கொண்டு வந்து ஆட்டுவாள். அவளுக்கு அது போர் நிறுத்தம் போலும். அவள் விசித்திரமான செயல்களையெல்லாம் வைத்துக் கொண்டே எல்லோரையும் கவர்ந்து விடுகிறாள் என்று எண்ணியவாறு நிமிர்ந்தவன் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

 மறுபடியும் திட்டி விடுவானோ என்ற தயக்கத்தோடு அவன் அறையின் உள்ளே ஒரு காலும், அப்படி திட்ட ஆரம்பித்தால் ஓடி விடலாமென்று அறைக்கு வெளியே இன்னொரு காலும் வைத்து நின்றுக் கொண்டிருந்தவளின் கையிலிருந்த வெள்ளைத்துணி தான் அவன் சிரிப்பிற்கு காரணம். 

 "ஏன் அத்தான் சிரிக்கிறீங்க?".........முகத்தை சுருக்கியவளாய் மெதுவாக அருகில் வந்தாள். தேடிப் பார்த்தேன் ஒரு துணியும் கிடைக்கல, அதான் கிச்சன்ல இருந்து எடுத்து வந்தேன்.

 அவள் எடுத்து வந்திருந்தது கிச்சன் டேபிள் துடைக்கும் துணி, அடக்க முடியாமல் மறுபடியும் சிரித்தான்.

 அப்பாடா, அப்படின்னா இனிமேல் பேசலாம், திட்டு விழாது என்று எண்ணியவளாக அவள் ஆரம்பித்தாள், 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

 "அன்னிக்கு அந்த ஷைனி அக்காதான் உங்களைப் பத்தி விசாரிச்சாங்க, நம்ம வீட்டில இருக்கிற மத்த யாரையும் பத்தி விசாரிக்காம உங்களைப் பத்தியே கேட்டுட்டு இருந்தாங்களா .......அதான்." 

 என சொல்ல ஆரம்பித்தவுடன் அவன் மனது அன்றைய தினத்தின் நிகழ்வுகளுக்குச் சென்றது. ஷைனி வேறு யாருமில்லை அவன் அண்ணியின் தங்கை. தற்போது இளநிலை கல்லூரி 2 ம் வருடத்தில் இருப்பதாக அம்மா சொன்னதாக ஞாபகம். பெண்பார்க்க பெரியவர்களும் தீபனும் மட்டும் சென்றிருந்ததால், அண்ணியைக் குறித்து செவி வழியாக கேட்டதும் புகைப் படத்தைப் பார்த்ததும் உண்டு. பெரியவர்கள் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் குறித்து பெரும்பாலும் போனில் பேசியதாலும், அவர்கள் ஏதாவது வேலையாக வீட்டிற்கு வரும் போது ரூபன் வேலையில் இருந்ததாலும் அந்த குடும்பத்தினரை நிச்சயதார்த்தம் அன்று தான் அவன் சந்திக்க நேர்ந்தது.

 நிச்சயதார்த்தம் மிக எளிமையாக இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்துச் செய்ய தீர்மானித்து இருந்தாலும் கூட ஓரளவு கூட்டமாக தான் இருந்தது. அன்றைய நிகழ்வுகள் பெண்வீட்டாரின் ஏற்பாடு என்பதால் அங்கே மாப்பிள்ளை வீட்டாராகிய இவர்களுக்கென்று அதிகமான வேலைகள் எதுவும் இருக்கவில்லை.பெரியவர்கள் பொறுப்பாக முன் நின்று செயல்படச் சென்று விட அவர்களுக்கு இடையூறு கொடுக்கா விதத்தில் அதே நேரம் தேவையிருந்தால் கூப்பிடும் தூரத்தில் இவர்கள் நின்றுக் கொண்டனர். 

 தீபனும் ப்ரீதாவும் மோதிரம் மாற்றிய பின்னர் இருவரையும் ஒருவர் அருகே ஒருவர் உட்கார வைத்தனர். இருவருமே கொஞ்சம் நெர்வஸாக இருப்பது தெரிந்தது. திருமணத்திற்கான நாளைக் குறிப்பதும், திருமண ஏற்பாடுகளைக் குறிப்பதும், சர்ச் சென்று எப்போது திருமணத்திற்கான செயல்முறைகளை ஆரம்பிக்க வேண்டுமென்று இரு குடும்பத்தினரும் பேசிக் கொண்டு இருந்தனர். வாழ்த்துக்கள் வழங்குதல், ஒருவர் மாற்றி ஒருவர் வந்து போட்டோ எடுப்பது, சுவையான விருந்து என கலகலப்பாக இருந்தது. 

 அவன் அண்ணியின் பெற்றோர் அன்பாக வரவேற்ற விதம், தீபன் தன் தம்பிகளை ப்ரீதாவிடம் அறிமுகப் படுத்திய பொழுது எழுந்த நட்பான புன்னகை எல்லாமே மிக நன்றாக இருந்தாலும் ஏனோ ஷைனியின் நடவடிக்கை கொஞ்சம் மட்டுமே கொஞ்சம் இடத்திற்கு ஒவ்வாத விதமாக இவனுக்கு நெருடியது. இவனுக்கு மட்டுமல்ல பலருக்கும் அப்படித்தான் என்பதை அனைவர் பேச்சிலும் பின்னர் உணர்ந்துக் கொண்டான். அதற்கும் காரணங்கள் இருந்தன. தன்னுடைய அக்காவிற்கு நிச்சயதார்த்தம் ஆயிற்றே, கூடமாட துணையாக இருக்கலாமென எண்ணாமல் , தோழியர் கூட்டத்தோடு சேர்ந்துக் கொண்டு யார் வீட்டு விழாவுக்கோ வந்தது போல சுற்றும் முற்றும் கண்ணைச் சுழற்றிக்கொண்டு திரிந்தது , அதிகப் படியான மேக் அப், கவர்ச்சியான உடை கூடவே தேவையேயில்லாமல் சற்றும் முன் பின் யோசிக்காமல் அள்ளி விடும் கமெண்ட்கள் என்கின்ற காரணங்கள் தான் அவை.

 ஷைனி அனியைக் கூப்பிட்டுப் பேசியதை சற்றுத் தொலைவிலிருந்து ரூபன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால், அது அவனைக் குறித்த விசாரணையாக இருந்திருக்கும் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்கு அவள் அனியைக் கூப்பிட்ட விதமும் அவளிடம் பேசிய தோரணையும் அப்போதே உறுத்தியது . அகம்பாவமான முகபாவனையோடு வெகு அலட்டலாக பேசிக் கொண்டிருந்தாள் . அதையொன்றும் கண்டுக் கொள்ளாமல் அனி மிக உற்சாகமாக அவளுக்கு பதிலிறுத்தாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.