12. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

நீலம் கொண்ட கண்ணும், நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும், பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக் கூறும் பொன்மணி
ஏற்கனவே ஸ்வேதா, பெரிய அபார்ட்மெண்ட்டிற்கு ஒளி கொடுக்கும் அளவிற்கு ஏகப்பட்ட பல்புகளை வாங்கி ஸ்டாக் செய்து விட்டதால், கௌரியுடன் சேர்ந்து மேற்கொண்டு எந்த திட்டங்களும் தீட்டாமல் வேலையை மட்டும் பார்த்தாள். அதுவும் இவர்கள் நால்வரும் வெளியில் சென்றபொழுது நடந்தது அனைத்தையும் கௌரியிடம் சொன்ன ஸ்வேதா, ‘இனிமேலும் ஹரியைக் காயவிடவேண்டாம் மன்னி, அடுத்த வாட்டி அவர் ப்ரொப்போஸ் பண்ணினா ஓகே சொல்லிடப் போறேன். எனக்கு யாரோ போல தள்ளி நின்னுண்டு அவரோட பேச கஷ்டமா இருக்கு’, என்று அறிவித்து விட்டதால், கௌரியும் அதற்கு மேல் எதையும் கூறவில்லை.
கௌரி வாயை மூடியதன் பின்னணி, கௌஷிக்கிடம் மண்டகப்பிடி வாங்கியதே. இருவருக்கும் நடுவில் சின்ன குழந்தை போல் சண்டை மூட்டி விடுவதை நிறுத்தி விட்டு கௌரியை அவள் வேலையை மட்டும் பார்க்குமாறு கூற, அதிலும் குறிஞ்சிப்பூ மலர்வதைப் போல எப்பொழுதோ வரும் கோபக்குரலில் கூற, கௌரி அதை சிரமேற்கொண்டு பின்பற்றினாள்(கௌஷிக் இந்த வேலைய நீ முன்னாடியே பண்ணி இருக்கலாம், நான் பதினோரு அப்டேட் வேஸ்ட் பண்ணி இருக்க மாட்டேன்).
தீபா சென்ற அன்று ஸ்வேதா பகல் பொழுதை அலுவலகத்தில் தள்ளிவிட்டதால் பிரச்சனை இல்லை, இரவுதான் வில்லனாக ஸ்வேதாவிற்கு வந்தது.
ஸ்வேதா தனியாக இரவில் தங்குவது இதுவே முதல் முறை. முதலில் தன் பெற்றோருடன் இல்லாமல் தனியாகத் தங்குவதே இதுதான் முதல் முறை எனும்போது எங்கிருந்து இரவில் தங்குவது. அலுவலகத்தில் இருந்து வந்ததில் இருந்தே யாரும் இல்லாத வீட்டில் தனியாக இருக்க பயந்து கீழே சென்று பார்க்கில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு வந்தாள். நேரம் ஆகியதால் வேறு வழி இல்லாமல் அறைக்கு வந்து, சாப்பிட்டேன் பேர்வழியென்று எதையோ கொறித்து விட்டு படுக்கையறைக்குச் செல்ல, அது இன்னும் அவளை பயமுறுத்தியது. வாஸ்து சரியில்லையென்று ஹாலிற்கு வந்து அங்கிருந்த ஸோஃபாவில் படுக்க அப்பொழுதும் பயத்தில் தூக்கம் வராமல், தொலைகாட்சி, மியூசிக் சிஸ்டம் போதாத குறைக்கு அவளின் மடிக்கணினி எல்லாவற்றிலும் பாடல்களை ஒலிக்க விட்டு தூங்க முயற்சி செய்தாள். முயற்சி மட்டுமே, தூக்கம் அவளுக்கு பெப்பே சொல்லிவிட்டு ஓடி விட்டது. போதாத குறைக்கு ஸ்வேதாவிற்கு தான் சிறுவயதில் டிவியில் பார்த்த பட்டணத்தில் பூதம் படத்திலிருந்து சமீபத்தில் டீஸர் பார்த்த டார்லிங் படம் வரை வரிசையாக நினைவில் வந்து போனது.
ஆண்டவா இது என்ன சோதனை என்று கணபதி துதியில் ஆரம்பித்து ஹனுமான் சாலிஸா வரை சொல்லியும் அவள் பயம் தெளியவில்லை. யாருடனாவது பேசினால் தன் பயம் சிறிது தெளியலாம் என்று முதலில் கௌரிக்கு அழைக்க நினைக்க, அது அவளுக்கு அலுவலக நேரம் என்பதால் அந்த நினைப்பை கைவிட்டாள். பெற்றோர் ஏற்கனவே இவள் தனியாக எப்படி இருக்கப்போகிறாளோ என்ற கவலையில் இருப்பதாலும்... மேலும் அவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்கும் அழைக்கவில்லை. அடுத்து இருக்கும் ஒரே நெருங்கிய ஜீவன் ஹரிதான். நேரத்தைப் பார்க்க அது பதினொன்று என்று காட்டியது. இருந்தாலும் ஆபத்திற்கு பாவம் இல்லை என்று அவனை அழைத்தாள்.
ஸ்வேதாவிடமிருந்து இரவு பதினோரு மணிக்கு அழைப்பு என்றவுடன் என்னவோ, ஏதோ என்று முதலில் ஹரி பயந்து விட்டான். பிறகு அவளின் பயமறிந்து ஆறுதல் கூறி அவளை சூடாகப் பால் குடித்து விட்டு வரக் கூறி, பின்னர் அவளுக்குத் தூக்கம் வரும்வரை அவளுடன் பேசிக்கொண்டிருந்தான். இப்படியே தீபா ஊருக்கு சென்ற பின் அடுத்த இரண்டு நாட்கள் ராமிற்கு மிக சோகமாகவும், ஸ்வேதாவிற்கு ஹரியின் துணையால் எந்த வித பெரிய சம்பங்கள் இல்லாமலும் கழிந்தது. இந்த நேரத்தில்தான் சென்னையில் புயலால் மழை பொழிய ஆரம்பித்தது.
ஸ்வேதாவின் பெற்றோர் வசிக்கும் வேளச்சேரியில் சாதாரணமாக தூறல் போட்டாலே முட்டி அளவிற்கு தண்ணீர் நிற்கும் எனும்போது, புயல் அடித்தால் கேட்கவே வேண்டாம். முதல் இரண்டு நாட்கள் தன் பெற்றோருடன் தொடர்பில் இருந்த ஸ்வேதாவிற்கு மூன்றாம் நாளிலிருந்து அதுவும் முடியாமல் போனது.
“மன்னி, நீங்க அப்பாம்மாக்கு ஃபோன் பண்ணினேளா, எனக்கு இங்க இருந்து லைன் போகவே மாட்டேங்கறது. அவா எப்படி இருக்கா”
“இல்லை ஸ்வேதா, எனக்கும் லைன் கிடைக்கலை. பக்கத்துல நாணு மாமாவாத்துக்கும் ட்ரை பண்ணினேன், அங்கயும் லைன் போகலை”
“ஆமாம் மன்னி, நேத்திக்கே ஃபோன் பண்றச்ச கார் பார்க் முழுக்க தண்ணி வந்துடுத்து. கீழ எறங்கவே முடியலைன்னு அம்மா சொன்னா. மழை வேற கன்டின்யூ ஆயிண்டு இருக்கு. எப்படி சமாளிக்கப் போறான்னே தெரியலை. கௌஷிக் போய் சேர்ந்தாச்சா”