(Reading time: 15 - 30 minutes)

தன்பின் காலம் பம்பரமாய் சுழன்றது. அர்ப்பணாவின் முதல் படம் பிரம்மாண்டமாய் திரையிடப்பட்டது. அவள் நடிப்புக்கென நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அர்ப்பணாவிற்கே தன்னை நினைத்து ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஒருவேளை தனக்கே தெரியாமல் தனக்குள் நடிப்பு திறமை இருந்ததோ எனஅவளையே கேட்டுக் கொண்டாள் அர்ப்பணா.

அதன்பின் படவாய்ப்புகள் அர்ப்பணாவை தேடி வந்தன. ஒரு படம் நடித்தால் போதும் என்று கூறிய அவளின் தந்தையோ மொத்தமாய் மாறி இருந்தார். அவள் அடுத்தடுத்து நடிக்க வேண்டிய படங்களை அவரே தேர்வு செய்தார். இந்தமுறை அர்ப்பணா அழவில்லை,ஆட்சேபிக்கவும் இல்லை.

அவளுக்கென ஒரு அங்கீகாரம் !அவளையும் கண்மூடித்தனமாய் ரசிக்கும் ரசிகர்கள்,அவளின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து நாடி வந்த இயக்குனர்கள் இப்படி பலரின் ஆதரவு அவளை மாற்றியது என்றுத்தான் கூற வேண்டும்.

தனது இரண்டாம் படத்திற்காக தயாராகினாள் அர்ப்பணா. அந்த திகில் படத்தில்அவளுடன்நடிக்க அறிமுகமானவன் தான் சத்யன். பிரபல, நடிகர் கௌரவின் வாரிசு என்ற பெயர் அவனை நிழலாய் தொடர்ந்து வந்தது.

அதனாலேயே அந்த படத்திற்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகமாய் இருந்தது. ஆரம்பத்தில் அர்ப்பணாவிற்குமே சத்யனுக்கு கிடைக்கும் வரவேற்பு சற்று அதிகப்படியாய் இருப்பதாகத்தான் தோன்றியது.

இன்னும் ஒரு படம் கூட அவன் நடிக்கவில்லை. ஆனால் ஏன் இவனை இப்படி கொண்டாடுகிறார்கள் ? என்ற கேள்வி அவளுக்குள் அடிக்கடி எழாமல் இல்லை. எது எப்படியோ அந்த படத்தை பொருத்தமட்டிலும் கதாநாயகனாகிய சத்யனே ஒரு விளம்பரம் தான் என்று தெரிந்து வைத்திருந்தாள் அர்ப்பணா. அதனாலேயே அவனிடம் மிகக் குறைவாய் பேசுவாள் அவள். மற்றவர்களிடம் இருக்கும் ஒரு இயல்புநிலை அவனிடம் பேசும்போது மட்டும் அவளிடமிருந்து தொலைந்துவிடும். சத்யனும் அதைக் கண்டுக் கொண்டதாய் தெரியவில்லை. அவன் யாரிடமும் அதிகமாக பேசுவதே இல்லை. அதனால் அர்ப்பணாவின் இச்சுபாவம் அவனுக்கு சாதகமான ஒன்றுத்தான்.

பேஸ்புக்கில் தனக்கென இருக்கும் தனி அக்கவுன்ட் மூலமாக தினமும் தனது அனுபவங்களை நிரூபணாவுடன் பகிர்ந்து கொள்ளுவாள் அர்ப்பணா. இந்த ஒன்றரை வருடத்தில் அவளின் தோழிகளில் மற்ற இருவரும் திருமணம் முடித்து இருந்தனர். அதனாலேயே அர்ப்பணாவிற்கும் அவர்களுக்கும் நேரம் ஒதுக்கி பேசிட வாய்ப்புகள் கம்மியாகிவிட்டது. அர்ப்பணாவின் பெற்றோர்களோ கிடைத்த வசதியான வாழ்க்கையை அனுபவிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள்.

வாழ்க்கை அதிக சந்தோஷத்துடனோ, அல்லது அதிக சோகத்துடனோ செல்லாமல் ஓரளவு சமநிலையாய் சேர்ந்த நேரம்தான் அர்ப்பணாவின் வாழ்க்கையில் புயலடிக்கத் தொடங்கியது.

“கண்ணாடி பெண்ணே”படத்தின் அறிமுகக் கதாநாயகியின் அந்தரங்க வாழ்க்கை அம்பலம் ! என்ற தலைப்பில் இணையத்தளத்தில் சில ஆபாசப் படங்கள் வெளியிடப்பட்டன. அர்ப்பணாவின் முகத்தை பயன்படுத்தி, பார்த்துவுடனேயே பொய் என்று சொல்ல முடியாத அளவு மிக நுணுக்கமாய் அந்த படங்கள் எடிட் செய்யப்பட்டு இணையத்தில் பலராலும் பகிர்ப்பட்டு வந்தது.

“ இவளைப் பார்த்தப்போவே தெரிஞ்சதே,இவ இப்படித்தான்னு..!

சினிமா நடிகைன்னா இதெல்லாம் சாதாரணம்..!

 காசுக்காக இவளுங்க என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க! “ இப்படி பல கருத்துக்கள் அர்ப்பணாவைப் பற்றி அவதூறாக பரவிக் கொண்டிருந்தது. நேற்றுவரை “ அழகான நடிகை, திறமையான நடிகை, அருமையான தமிழ் உச்சரிப்பில் பேசும்நடிகை” என இந்த ஒன்றரை வருடத்தில் அவளுக்கு கிடைத்த பெயரெல்லாம் இமைக்கும்நொடியில் நொறுங்கிப் போனது. உறங்கிக் கொண்டிருந்த அர்ப்பணா தனது செல்போன் விடாமல் அடிக்கவும், தூக்க கலக்கத்துடன் ஃபோனை எடுத்தார்.

சினிமா உலகத்தில் அவளுக்கு தெரிந்த சில நண்பர்கள் தான் ஃபோன் செய்து நடந்ததை கூறி இருந்தனர். இதுப் போன்ற சூழ்நிலையை சந்தித்த அனுபவத்தில் அவர்களில் சிலர் அவளுக்கு நம்பிக்கையளித்தனர். இது பொய் என்ற பட்சத்தில் பயப்படவோ அல்லது உடைந்து போகவோ வேண்டாம் என்று அறிவுரைகள் கூறினார்கள்.

ஆனால் அவள் சராசரி பெண்தானே ?எந்த பெண்தான் தனது மானம் பிறரால் விமர்சிக்கப்படுவதை சுலபமாய் எடுத்துக் கொள்வாள் ? நடுங்கும் விரல்களுடம் இணையத்தளத்தில் அந்த படங்களை பார்த்தவள் சொன்ன ஒரே வார்த்தை “ வினய் !” .அவளுக்குத் தெரியும் அந்த படங்களின் பின்னனி.

அடிக்கடி செல்ஃபி எடுக்கும் பழக்கமும் அவளுக்கு இல்லை ! நண்பர்களுடன் சேர்ந்து ஃபோட்டோவும் அதிகம் எடுத்ததில்லை . அவளை அதிகமாய் படம் எடுத்ததே வினய்தான்! “என்னை லவ் பண்ணுறதானே அப்போ ஃபோட்டோவுக்கு என் பக்கத்துல நிற்க மாட்டியா?”இப்படிக் கேட்டு கேட்டுத்தான் அவளுடன் படம் பிடித்துக் கொள்வான்.

அந்த படத்தின் நகல் அவளுடைய ஃபோனிலும் இருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டுமென கொஞ்சம் தெளிவடைந்தாள் அர்ப்பணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.