23. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்
“உன் வலியும் வேதனையும் நான் அன்னைக்கு சொன்னது போல் ஒரு முடிவுக்கு வரப்போகிறது… அதற்கான அறிகுறிகள் தான் இவை… அதனால் கவலைப்படாமல் நடப்பதை எதிர்கொள்ள மனதினை தைரியப்படுத்திக்கொள்…”
பிரம்மரிஷி அவனிடம் சொல்லிக்கொண்டே பாம்பு தீண்டிய இடத்தில் போட்டிருந்த கட்டினை பார்த்துக்கொண்டிருந்த பொழுது,
“தாத்தா…” என்றபடி ஓடிவந்தாள் சதி, கையில் பிரம்மரிஷி எடுத்து வர சொன்ன அந்த சிகப்பு நிற ஆடையுடன்…
“தாத்தா… அவருக்கு ஒன்னுமில்லல்ல….”
கேட்கையிலே அழுகையும் முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு…
“சிவாக்கு எதுவும் இல்லம்மா… நீ பயப்படாத…” என்றவர், அவனிடம் அந்த ஆடையை கொடுக்க முனைந்தார்…
அதைப் பார்த்ததும், அவன் கண்கள் அந்த ஆடையிலேயே நிலைத்திருக்க, மெல்லியதாய் ஒரு புன்னகை சிந்தினார் பிரம்மரிஷி…
“இதை உன்னுடன் எப்பவும் வைத்துக்கொள்ள முடிந்தால் நல்லது… எப்பொழுதும் சாத்தியமில்லை என்றால் உறங்கும்பொழுது உன் தலையணைக்கடியிலாவது வைத்துக்கொள்…”
சொல்லியபடி அவர் அவனைப் பார்க்க, அவன் கைகள் தானாகவே அந்த ஆடையை வாங்கிற்று…
அவனது கவனம் அந்த ஆடையிலேயே இருப்பதை கவனித்தவர்,
“நான் இப்போ வந்துடுறேன்மா….” என சதியிடம் சொல்லிவிட்டு அகன்றார்…
“என்னாச்சு உங்களுக்கு?....”
சதியின் கவலை குரல் கேட்டு நிமிர்ந்தவன், கலங்கிய விழிகளுடன் எதிரே நின்றவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான் எதுவும் பேசாமல்…
“எதாவது பேசுங்க… என்னைத்தான கடிக்க வந்துச்சு… நீங்க எதுக்கு குறுக்க வந்தீங்க?... உங்களுக்கு எதுவும் ஆகியிருந்தா?.....”
மேற்கொண்டு பேசமுடியாது அழுதவள், சில நொடிகள் கழித்து நிமிர்ந்து பார்க்கையில் அவன் விழிகள் கோபத்தில் சிவந்திருந்தது…
அவனது கோபத்தில் சற்று நேரம் திகைத்தவள், பின்,
“முறைக்காதீங்க… உண்மையை தான சொன்னேன்… என்னை ஏன் காப்பாத்தினீங்க?... என்னை காப்பாத்தாம இருந்திருந்தா உங்களுக்கு ஆபத்து வந்திருக்காது தான?...”
சட்டென அங்கிருந்து நகர போனவனின் முன் வந்து தடுத்தாள் சதி…
“ஒவ்வொரு தடவையும் என்னால தான் உங்களுக்கு ஆபத்து வருது… என்னால அதை தாங்கிக்க முடியலை… அன்னைக்கு அந்த பைரவ் உங்க நெஞ்சில………………”
வார்த்தைகள் வராமல் கண்ணீர் வர,
“இன்னைக்கு இப்படி இந்த பாம்பு என்னை கடிக்க வந்து கடைசியில உங்களை கடிச்சிட்டு…. ஏன் எனக்கு வர்ற ஆபத்து எல்லாத்தையும் நீங்க வாங்கிக்கிறீங்க?... நான் அப்படி என்ன செஞ்சேன் உங்களுக்கு?... காதலிக்கிறேன்னு ஒத்துக்கக் கூட மாட்டிக்குறீங்க… ஆனா எனக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு மட்டும் தவிக்குறீங்க… எதுக்காக?... நீங்க என்னை இப்படி காப்பாத்தும் போதெல்லாம் என் மனசு வலிக்குது…. எனக்காக உதவி செய்ய நீங்க வராம இருந்திருந்தா உங்க உயிருக்கும் எந்த ஆபத்தும் வராது தான…”
ஒரு முடிவுடன் கண்ணீரை அழுந்த துடைத்தவள்,
“நீங்க இனி குறுக்க வரக் கூடாது… எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் சரி… ஏன் அந்த பைரவ் என்னை கொன்………..”
அவள் சொல்லிக்கூட முடிக்கவில்லை….
“சதி…………………….” என ரௌத்திரமானான் ஜெய்…
அவனது அந்த தோற்றத்தைக்கண்டு அரண்டு போனாள் சதி…
அவளையே உறுத்துப் பார்த்தவனுக்கு, தன் கோபத்தினை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை…
கையிலிருந்த அந்த சிகப்பு நிற ஆடையை அவன் கசக்க ஆரம்பித்திருந்தான் தானாகவே…
அது கசங்க கசங்க அவன் மனதும், கசங்க ஆரம்பித்திருந்தது வேகமாய்….
வலி தாங்காமல் அவன் அந்த சிகப்பு நிற ஆடை வைத்திருந்த கைகளை நெஞ்சின் அருகே கொண்டு வந்து கண்களை இறுக மூடிக்கொள்ள,
சதி அவனது இமைக்கதவுகளை திறக்கப் போராடினாள் அவனின் அருகே வந்து கெஞ்சியபடி…
“கண்ணைத் திறங்க… என்னாச்சு உங்களுக்கு?...”
அவள் கெஞ்ச கெஞ்ச எந்த ஒரு பலனும் இல்லை… சிகப்பு நிறமாய் ஆடையுடன் குருதியும் அவன் கைகளில் இருந்து வழிய,
பதறியவளாய் அவள், அவனது கைகளை பிடிக்க முனைய,
சட்டென விழி திறந்தான் ஜெய்…
இமை திறந்தவனது விழிகள் ரத்தமும், கண்ணீருமாய் கலந்திருக்க, அவள் சிலையானாள்…
அவள் அப்படி இருக்கும்போதே அவளை விட்டு வேகமாக நடந்தவன், பின் சட்டென நின்றான்…
அவள் புறம் திரும்பாமலே, “நான் வாழுறதே உனக்காகத்தான்டி… உனக்கு எதுவும் ஆகாது… ஆகவும் விடமாட்டேன்….”
என உதடுகள் வழி மெல்லமாய் அவனுக்கே கேட்காதபடி சொல்லிவிட்டு விருவிருவென்று அகல, அவளோ அப்படியே நின்றாள் அவனின் கோபத்தை எண்ணி….