04. மார்பில் ஊறும் உயிரே!!! - மது
கவிழ்ந்த இருளில் விடிவெள்ளி நீ!!!
அன்று பள்ளி முடிந்து வீடு வந்ததும் மகன் உற்சாகமாக இருந்ததைக் கண்டு பெற்றோர் இருவருமே ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி அடைந்தனர்...கிட்டத்தட்ட ஒரு வருடமாக மயான அமைதி சூழ்ந்திருந்த வீட்டில் மகனின் சந்தோஷமான பேச்சுக்கள், பெற்ற நெஞ்சங்களை குளிர்வித்தன.
"அம்மா நான் இந்த வாட்டி சேகென்ட் மா" வருத்தமில்லாமல் மகிழ்வுடன் கூறினான் சித்தார்த்.
"அதுனால என்ன டா கண்ணா.அடுத்த டைம் பர்ஸ்ட் வரலாம்" அவனை மடியில் இருத்திக் கொண்டு மாலை சிற்றுண்டியை ஊட்டி விட்டபடியே உரையாடினார் சுசீலா.
“எத்தனை நாள் ஆயிற்று இவனை இப்படி மடியில் உக்கார வைத்து உணவை ஊட்டி விட்டு” ஏக்கமாய் நினைத்தவர் மகனின் பேச்சில் கவலை மறந்து போனார்.
"பர்ஸ்ட் யாரு தெரியுமா"
"யாருடா கண்ணா"
"பில்லி மா பில்லி " அபூர்வா முகத்தை நினைத்து நினைத்து சிரித்தான்.
அவன் மனம் விட்டு சிரிப்பதைக் கண்டு சுசீலா கண்ணீர் வடித்தார். அவனை அணைத்து உச்சி முகர்ந்தார்.. சித்துவின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும் சற்று உணர்ச்சி வசப்பட்டுத் தான் போனார்.
"யாருடா அது பில்லி" மைந்தனின் சந்தோஷத்திற்கு என்ன காரணம் என அறிந்து கொள்ள ஆவல் அன்னைக்கு.
"புது கேர்ள் ‘பி’ செக்ஷன்ல அபூர்வா"
"அபூர்வா அழகான பேர்" என்று சொல்லிக் கொண்டவர்,
"அப்புறம் ஏன் பில்லி ன்னு சொல்ற சித்து"
"அம்மா அவ எவ்ளோ குட்டியா இருக்கா தெரியுமா” கைகளால் அளந்து காண்பித்தான்.
“ஸ்மால் ஸ்மால் ஐஸ்..குண்டு குண்டு சீக்ஸ்... நோஸ் சப்பையா அப்றம் இப்படி மூஞ்சி பூரா மூடின மாதிரி குல்லா போட்ருந்தா ம்மா" இதை சொல்லிவிட்டு மீண்டும் அவள் முகத்தை நினைத்துப் பார்த்து சிரித்தான்.
“வொயிட் மீசை வச்சிருந்தா... பூனைக்குட்டி மாதிரியே இருந்துச்சா அதா பில்லி சொன்னேன்"
சுசீலா மகனின் வர்ணனை கேட்டு அசந்து தான் போனார். யாரையும் அவன் இவ்வளவு கூர்ந்து கவனித்ததை அவர் இதுவரை பார்த்தது இல்லை. அபூர்வா அவனது மனதில் ஆழப் பதிந்து போயிருக்கிறாள் என்று கண்டு கொண்டார்.
"அவ தமிழ் பேசுறா...பாவம் ஹிந்தியே தெரிலம்மா"
“அப்புறம்”
"பில்லினா பூனையான்னு கேட்டாளா...நான் ஆமான்னு சொன்னேன்னா...கேலி பண்றியான்னு சேட்(sad) ஆகிட்டா"
“அச்சச்சோ பாவம்ல நீ அப்படி கேலி பண்ணலாமா கண்ணா”
பள்ளியில் நடந்ததை கதை கதையாக மகன் இன்று சொல்ல தன் கண்ணீரை அடக்க முயன்று தோற்று போனார் அந்தத் தாய்.
அம்மா, தான் அப்பெண்ணை கேலி செய்ததற்காக அழுகிறாள் என்று நினைத்துக் கொண்டான் போலும்.
"மா….அவ அழகா பூனை மாதிரி இருந்தா...அதான் பில்லி சொன்னேன் அப்புறம் ஹாப்பி ஆகிட்டா... ரிஷாப், மிதுன், ஹரிஷ் எல்லாம் பில்லி பில்லி சொன்னாங்களா, நா அவங்கள அப்படி சொல்லக் கூடாது மாரூங்கா சொல்லிட்டேன்"அவசர அவசரமாக அன்னையிடம் சொன்னான்.
"என் சித்துக்கண்ணா சமத்து பையனாச்சே. அடிப்பேன்னு எல்லாம் சொல்ல கூடாது...அவங்களும் உன் பிரண்ட்ஸ் தானே தெரியாம சொல்லிருப்பாங்க"
"சரி நாம பேரெண்ட் டீச்சர் மீட் போவோம்ல ...அப்போ எனக்கு அவளை காமி" எனவும் சரி என்று தலையாட்டி விட்டு வகுப்புப் பாடம் எழுத சென்றான்.
"ஏன் டல்லா இருக்க பூக்குட்டி " விஜயகுமார் மகளை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்.
" நான் பர்ஸ்ட் வந்தேன் டாடி மிஸ் சொன்னாங்க"
“என் ராஜாத்தி" என்று முத்தமிட்டார். எத்தனையோ பதக்கங்கள் பாராட்டுகள் பெற்றிருந்த போதும் இன்று மகள் அவருக்கு அளித்துவிட்டிருந்த பெருமை அளவில்லாதது அன்றோ.
"ரதி என் பொண்ணு என் சொல்ல காப்பாத்திட்டா... இங்க வா என்ன பண்ணுற அங்க"
"நிலாக்கு செரிலாக் ஊட்டறேன்" பத்து மாதக் குழந்தை நிலாவை இடுப்பில் இருத்தியபடியே அங்கே வந்தார் ரத்னாவதி.
"பர்ஸ்ட் வந்ததை ஏன் உம்ம்ன்னு மூஞ்சிய வச்சுட்டு சொல்றா உங்க பொண்ணு அதைக் கேளுங்க" மகள் மீது பெருமிதம் பொங்கினாலும் தன் பெண்ணின் வாடிய முகமே ரத்னாவதியின் கண்களில் பட்டது.
"அத தான் நானும் கேக்குறேன் .என்னடா பூக்குட்டி டாடி கிட்ட சொல்லுடா"
"எப்போவும் சித்து தான் பர்ஸ்ட் வந்தானாம் டாடி...இப்போ நான் பர்ஸ்ட் வந்துட்டேனா. பாவம்ல டாடி அவன். ஆனா சித்து அழவே இல்ல டாடி” கொஞ்சும் மழலையில் மகள் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"என் ராஜாத்திக்கு தங்கமான மனசு” பெருமை பொங்க உச்சி முகர்ந்தார் தந்தை.
ஐந்து வயது குழந்தை தன் வெற்றியின் மகிழ்வைக் கொண்டாடாமல் மற்றவரின் வருத்தத்தை எண்ணி மனம் கலங்குவது அதிசயமான ஒன்றாக இருக்கலாம். அது எப்படி சாத்தியம் என்றும் தோன்றலாம். ஆனால் அந்தக் குழந்தை அபூர்வா எனும் போது அந்த ஐயத்திற்கு இடமேது.