(Reading time: 26 - 52 minutes)

'டேய்... அப்படி எல்லாம் இல்லை. நீ அவ ஆடி பார்த்ததில்லை. ரொம்ப நல்லா ஆடுவா தெரியுமா. எனக்கு டான்ஸ்னாலே என்னனுன்னு தெரியாது. நானே அப்படியே உட்கார்ந்திட்டேன் அவ டான்சை பார்த்திட்டு...' தன்னையும் அறியாமல் விருட்டென  எழுந்து அமர்ந்துகொண்டு சொல்லிக்கொண்டிருந்த விஷ்வாவின் கண்களில் இருந்த பளபளப்பை ரசித்தபடியே அமர்ந்திருந்தான் பரத்.

'வாய் பேச முடியாது அவளாலே. ஆனா கண்ணு ரெண்டும் அப்படியே பேசும் தெரியுமா??? என்னாலேதான் பாவம் அதுக்கு அடிப்பட்டிருச்சு. நாளைக்கு சர்ஜரி அதுக்கு. நியாயமா நான் பக்கத்திலே இருந்திருக்கணும் ஆனா..' என்று அவன் சொல்லி முடித்தபோதுதான் தான் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே வந்தது விஷ்வாவுக்கு.

மென்னகையுடன் அவனையே ஊடுருவிக்கொண்டிருந்தான் பரத்.

'அது.. அது.. வந்து நான் பக்கத்திலே இருந்திருக்கணும் ஆனா அவளை வேறே டாக்டர் அட்டென்ட் பண்றாங்க அதனாலே விட்டுட்டேன்..'

'அப்புறம் ஏன் ப்ரதர் அந்த அருண் கிட்டே அவ யாருன்னே தெரியாதுன்னு சொன்னீங்க??? திடுக்கென குலுங்கியது விஷ்வாவுக்கு. இதை எப்போது பார்த்தான் இவன்???

'அது.. அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம்.. பேசாம படுத்து தூங்கு... எனக்கு தூக்கம் வருது ..' படுத்துக்கொண்டு விட்டான் விஷ்வா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மன முடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

'விஷ்வா...' மெல்ல அழைத்தான் பரத் ' என்னடா பண்ணிட்டிருக்கே நீ??? எனக்காக  பெரிய தியாகம் பண்றதா நினைப்பா???

'இந்த பேச்சை விடு. நான் இதுக்கு மேலே பதில் சொல்ல மாட்டேன். குட் நைட்'

'விஷ்வா...'

குட் நைட்..' விஷ்வா திரும்பி படுத்துவிட பேசாமல் படுத்துக்கொண்டான் பரத் இதற்கு என்ன செய்யலாம் என யோசித்தபடியே.....

மறுபடியும் ஒலித்தது விஷ்வாவின் கைப்பேசி. மறுபடியும் அம்மாவின் அழைப்பு. பொங்கிய உணர்வுகளை அழுத்திக்கொண்டவனாக  கைப்பேசியை துண்டித்தான் விஷ்வா.

அங்கே விஷ்வாவின் வீட்டில் சோர்ந்து போய் கட்டிலில் படுத்திருந்தார் அம்மா.

ன்று காலையில் நடந்த நிகழ்வுகளே அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தன....

தனது அருகில் வந்த மகனை பார்த்து கேட்டார் அம்மா 'விஷ்வா எனக்கு என்னடா ஆச்சு??? எனக்கு தலையிலே ஆபரேஷன் பண்ணனுமாடா விஷ்வா..'

சில நொடி மௌனத்திற்கு பிறகு அவருக்கு செலுத்த வேண்டிய ஊசியை கையில் எடுத்தபடியே சொன்னான் விஷ்வா 'ஆமாம்மா. ஒரு டாக்டர்க்கு மூணு டாக்டர் கிட்டே கன்சல்ட் பண்ணியாச்சு உன் ரிபோர்ட்ஸ் வெச்சு பார்க்கும் போது கொஞ்சம் கிரிடிகல் தான். இதுதான் உண்மை.' ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடம்.

மொத்தமாக அதிர்ந்து துவண்டு விழுந்தது அம்மாவின் முகம். அவர்  முகம் பார்க்கும் தைரியம் இல்லாதவன் போலவே வேறே பக்கம் திரும்பிக்கொண்டான் விஷ்வா.

'விஷ்வா.. பயமா இருக்குடா. நான் பிழைச்சுக்குவேன்தானேடா..' குரல் நடுங்க கேட்டார் அம்மா.

'நான் டாக்டர்மா... கடவுள் இல்லையே..' அம்மாவின் கண்களை சந்திக்காமலே சொன்னான் மகன். 'நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். இன்னும் பத்து நாளிலே அறுபதாம் கல்யாணம் வருது இல்லையா??? அது முடிஞ்சதும் சர்ஜரி வெச்சுப்போம். தைரியமா இரு..'

சொல்லிவிட்டு ஊசியை செலுத்தி விட்டு இரண்டு மாத்திரைகளை கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றதோடு சரி. அதன் பிறகு அழைக்க கூட இல்லையே அவன்???

தலைக்குள்ளே அப்படி ஒரு வலி. உள்ளே ஏதாவது பிரளயம் நடக்கிறதோ என்று தோன்றியது. இதனிடையே அவன் அழைப்பை துண்டிக்க துண்டிக்க இன்னமும் அதிகமாக வலிப்பதை போன்றதொரு உணர்வு.

'ஏன் இப்படி செய்கிறான் விஷ்வா???? யோசித்தபடியே புரண்டு புரண்டு  படுத்தார் அம்மா. அப்பா கூடத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

தலை சுற்றுவதை போல் இருந்தது. என்ன நடக்கிறது எனக்குள்ளே??? திடீரென எனக்கு ஏதேனும் ஆகிவிடுமோ??? இந்த உலகத்தை விட்டு போய் விடுவேனோ??? மெதுமெதுவாக பயம் பரவ துவங்கியது அம்மாவினுள்ளே. மறுபடியும் விஷ்வாவை அழைக்க மறுபடி கட்.

இந்த பூமியில் தான் மட்டும் இருப்பதை போலே ஒரு நடுக்கம் பரவியது. கண்களில் கண்ணீர் கட்டிக்கொண்டது.

'விஷ்வா...' என்றபடி மறுபடியும் அழைத்தார் மகனை. அவன் ஏற்கவில்லை அழைப்பை.

'டேய்... யாருடா... மறுபடி மறுபடி கூப்பிடறாங்க...' கேட்டான் பரத்.

....................................

'விஷ்வா ஃபோன்லே யாரு???'

'அம்மா..'

'டேய்.. நீ பண்ற அநியாயத்துக்கு ஒரு அளவே இல்லையா??? ஏன் பேச மாட்டேங்குற நீ???'

'தூக்கம் வருது அதான்...' கண்களை மூடிக்கொண்டு பதில் சொன்னான் விஷ்வா.

'டேய்.. அடி வாங்கப்போறே என்கிட்டே...'

'சரி அடி... வாங்கிக்கறேன்..' கண்களை திறக்கவில்லை விஷ்வா. மறுபடியும் ஒலித்தது அலைப்பேசி. அசையாமல் படுத்திருந்தான் விஷ்வா.

'விஷ்வா.. ஏதாவது அவசரமாக இருக்க போகுதுடா...'

'....................................................'

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.