19. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
வாழ்வில்
எதை இழந்தாலும்
தாங்கும் வலிமை எனக்குண்டு.
உனை இழப்பதை மட்டும்
தாங்கிட இயலாதே
விழித்திடு
என் தாமரையே….
படபடவென கழிந்தன அடுத்தடுத்த நிமிடங்கள். பைத்தியக்காரனைப் போல அகண்ட விரிந்த அந்தக் கடலில் தன் காதலியைத் சல்லடைப் போட்டுத் தேடினான் அவன். அவளோடு இருந்த மற்றப் பெண்களுக்கும் உண்மை உறைக்க சற்று நேரமாயிற்று.
எங்களோடு கூடத் தானே அவள் இருந்தாள். பெரிதான அலை எதுவும் வரவில்லையே? மூழ்குபவள் ஒரு முறைக் கூட தண்ணீரை விட்டு தலை வெளியேயும் வரவில்லையே? என ஆயிரம் சந்தேகங்கள். பதற்றம், புலம்பல்கள் அந்த இடத்தை உல்லாசமான மன நிலையிலிருந்து கடும் குழப்பமான நிலைமைக்கு தள்ளியது.
நிமிடத்தில் பேயாய் கடலுக்குள் தேடியவன் கண்களில் அரை மயக்கத்தில் கடல் நீரின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் அனிக்கா தென்பட்டாள். கடலினின்று ஆவேசமாய் அவளை பிரித்து அள்ளிக் கொண்டு வந்தவன் கரையின் ஓரம் அவளைக் கிடத்தி அவளது சுவாசத்தை ஆராய்ந்தான். காதுகளை அவள் வாய்க்கும் , மூக்குக்கும் அருகே கொண்டுச் செல்ல அவளது சுவாசத்தின் இழை இவனது சுவாசத்தை மீட்டெடுத்தது.
தான் கற்றுத் தேர்ந்த மீட்புக் கலை தன்னவளுக்கே உதவியாய் இருப்பதை என்னேச் சொல்வது என்று எண்ணியவனாய் மூச்சுக்கு திணறும் அவளைக் குப்புறப் படுக்க வைத்து, அவள் மூழ்கும் போது அவசரமாய் அவள் நுரையீரலுக்குள் புகுந்துக் கொண்ட தண்ணீரை வெளியேற்றினான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
இப்போது அவளது சுவாசம் சற்றே சீரானது போல தோன்ற கூட்டத்திலிருந்த மருத்துவர் கையில் அவளை ஒப்படைத்துவிட்டு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாதவன் போல் ஒரு மரத்த நிலையில் நின்றுக் கொண்டிருந்தான்.
கடலில் மூழ்க ஆரம்பித்திருந்த அனிக்கா இத்தோடு நம் வாழ்வு முடிந்தது என்கிற எண்ணத்திற்க்குள் அப்போது வந்திருந்தாள், கடலின் ஓட்டத்தில் இழுத்துச் செல்லப் பட்டு, உலகத்துக்கும் தனக்குமான தொடர்பு முடித்துக் கொள்ளப் போகிறோம். என்று எண்ணும் போது தான் அவன் வந்தான் .முடியை பிடித்து ஏன் இழுக்கிறான்?. அனிம்மா ஹேய் நான் இருக்கேன் பயப்படாதே…..ஆவேசமாய் தொடர்ந்து அவளோடு பேசினான். உனக்கெதும் ஆச்சு அப்புறம் நானும் இருக்க மாட்டேன் புலம்பினான்.
உனக்கெதுவும் ஆகாது கண்ணம்மா………… இப்போது என் உடல் முழுக்க அவன் கரங்களில்..ம் ஹீம் …பயமில்லை இனிமேல் அவன் பார்த்துக் கொள்வான்…..சிறிது சிறிதாய் முழுமையான மயக்கத்திற்க்குள் சென்றிருந்தாள் அவள்.
அவளின் மயக்கம் தெளியும் போது அருகில் அவனில்லை கொஞ்சம் தூரத்தில் நிற்கும் அவனது முதுகு மட்டும் தெரிகிறது. உப்புத்தண்ணீரில் இருந்ததில் கண்கள் வெயிலின் நேர்பார்வையில் எரிகின்றது. தொடர்ந்து இருமி இருமி கடல் நீரை வெளியேற்றியதில் இன்னமுமாய் சோர்ந்து போய் விட்டாள். ஏற்கெனவே, கூட்டத்தைச் சேர்க்க வேண்டாம் என்றதும் குறைந்த நபர்களே சுற்றி இருந்தனர்.
அவளுக்கு ஆபத்து எதுவுமில்லை என்றதும் முன் போல சிலர் விளையாடவும் , கடலுக்கும் சென்றுவிட்டிருந்தனர். முதல்முறையாக கண்கள் கலங்கியவனாய் அருகாமையில் நிற்கும் ஜீவனை அதிசயமாய் பார்க்கின்றாள்.
அனிக்காவுக்கு மயக்கம் பயத்தில வந்திருக்கணும், அதிகமா ஒண்ணும் பிரச்சினை இல்ல. கொஞ்சம் அவளை ஈரமாயிருக்கிற டிரெஸ்ஸ சேஞ்ச் பண்ணிட்டு ரெஸ்ட் எடுக்க வைச்சா சரியாகிடும். யாராவது ரூம்க்கு கூட்டிட்டுப் போங்க” என்றதும் முதுகு காட்டி நின்றிருந்த ரூபன் வந்து அவளைத் தூக்கிக் கொண்டான்.
ஜீவனும் கூடவே வந்தாலும் அவர்கள் எல்லை பெண்கள் அறை வரைக்கும் தானே, உதவிக்கு பெண்கள் வந்தால் நன்றாயிருக்குமே என்று நினைக்கும் போதே, “ அனிக்காவை நான் பார்த்துக்கிறேன்” என்றவளாய் திவ்யா பின்னோடு வந்திருந்தாள்.
ரூபன் முன்னெப்போதும் பார்த்திராத அளவு இறுகிப் போயிருந்தான். பெண்கள் அறையில் யோசிக்கவே இல்லாமல் அவளையும் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஓரிருவரே உள்ளிருக்க அவர்களுக்கும் அவள் அறைக்குள் வருகின்ற விஷயம் முன்பே தெரிந்திருக்க வழி விட்டனர்.
கட்டிலில் இறக்கும் போது தான் அவனையே கவனித்துக் கொண்டிருந்த அனிக்கா கீழே விடுங்க அத்தான், நானா மேனேஜ்……. சொல்ல யத்தனித்தவளை
இவ்வளவு நேரம் என் கையில் இருந்தவளுக்கு இப்போ மட்டும் என்ன வந்துச்சு? என்கிற பாவனையில் ரூபனின் முறைப்பு நிறுத்தியது.
“இல்ல நான் ஈரமா இருக்கேன் . இந்த மெத்தை எல்லாம் பாழாகிடும்…“ மிக சன்னமாய் பலவீனமாய் ஒலித்த அவளது குரலில் கோபம் தணிந்தான்,