“சதி… ஏன் கனிகளை கூட உண்ணவில்லை நீ?... கூறு….” என அவள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க,
அந்த நேரம் அங்கு வந்த, பிரசுதியிடத்தில் சென்று முறையிட்டாள் அதிதி…
“தினமும் இங்கு பல பேர் உண்டு செல்கிறார்கள்… பல பேரின் பசியினைப் போக்குகிறது இங்கு நடைபெறும் அன்னதானம்… ஆனால் என் புதல்வியோ அன்னம், நீர் இன்றி இருப்பதைக் கண்டு என் மனம் அடையும் வேதனையை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை மகளே…”
என பிரசுதி கண்ணீர் வடிக்க,
“சதியின் இந்நிலைக்கு நாம் ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும் அன்னையே…” என்றாள் அதிதியும்…
அதே நேரம்,
பிரஜாபதியின் அறையில், “வசந்த விழாவிற்கான ஆயத்த பணிகளை துவங்க வேண்டும்… மேலும் அதனை எவ்வாறு நிகழ்த்த வேண்டுமென்று தம்மோடு கலந்து ஆலோசிக்கவே நாங்கள் இங்கே வந்தோம்…” என்றனர் சிலர்…
“வசந்த விழாவிற்கான ஏற்பாடுகள் உட்பட அனைத்தையும் இம்முறை நான் சதியிடத்தில் ஒப்படைக்கிறேன்…” என பிரஜாபதி சொல்லி முடிக்கும் போது,
“சதி உயிருடன் இருந்தால் தானே அதனை செய்வதற்கு?....” என்றார் பிரசுதி, அதிதி சகிதம் அங்கே வந்து…
வந்திருந்தவர்கள், பிரஜாபதியினை வணங்கிவிட்டு, அங்கிருந்து அகல,
“சதிக்கு நேர்ந்தது என்ன?...” என்று வினவினார் பிரஜாபதி…
“ஓய்வின்றி, உறக்கமின்றி இருக்கும் சதியின் நிலையினை தாங்கள் அறியவில்லையா?...”
“ஏற்றுக்கொண்ட பிராயசித்தத்தினை நிறைவேற்ற கடுமையான முயற்சி தேவையே… இல்லையேல் அந்த பணி நிறைவேறாது… செய்த பிழையினின்றும் விடுபட இயலாது… முக்தியும் கிடைத்திடாது…”
“தாங்கள் அளித்தது கடுமையான தண்டனை என்று தங்களுக்கு தெரியாதா?... இல்லை அதை நிறைவேற்ற அவள் கொள்ளும் பிரயத்தனங்கள் தான் தங்களுக்கு தெரியாதா?... இந்த பிரயத்தனங்கள் அவளது பிராணனை பறித்திட்டால், அந்த பாவத்திலிருந்து தாங்கள் முக்தி பெற இயலுமா சுவாமி?... வந்து அவளது நிலையினைக் காணுங்கள் சுவாமி… வாருங்கள்….”
பிரசுதி கேவலுடன் கூற, அதிதியும், “ஆம் தந்தையே… அவள் உண்ணுவதில்லை… நீர் கூட அருந்துவதில்லை… இவ்வளவு ஏன் உறக்கத்தினை கூட விடுத்துவிட்டாள்… இந்நிலையே நீடித்தால், நம் சதி நமக்கு கிடைக்க மாட்டாள் தந்தையே… தங்களின் வார்த்தைகளை சிரமேற்கொண்டு அவள் செய்யும் பிரயத்தனங்கள் சொல்லி மாளாது தந்தையே… இப்பொழுதோ அறைக்கதவினையும் திறக்க மறுக்கிறாள்…” என சதியின் நிலையைக்கூறினாள்…
“அறியாது தான் அவள் அன்று அந்த காரியத்தை செய்தாள்… அது அவளின் அறியாமையின் வெளிப்பாடே… அது தங்களுக்கு அவமதிப்பை அளித்துவிட்டதென்று ஈன்ற மகளுக்கு அளித்த தண்டனை போதாதா?... அவள் தங்கள் மகள் என்பதையும் மறந்துவிடுவீர்களா?... பிரஜாபதியாக தாம் போற்றப்பட்டு அமரத்துவம் பெற்றாலும், ஈன்ற தந்தையாக தாம் சதிக்கு இழைத்தது அநீதி என்றே காலம் சொல்லும்…” என பிரசுதி ஆதங்கத்துடன் கூற,
பிரஜாபதியோ போதும் என்பது போல் கையமர்த்தி தடுத்துவிட்டு, சதியின் அறைக்குச் சென்றார்…
“சதி… கதவைத் திற….” அங்கே, கியாத்தி, சதியின் அறைக்கதவினைத் தட்டிக்கொண்டிருந்தாள்… பிரஜாபதியைக் கண்டதும் அவரிடம் அவள் விஷயத்தைக்கூற,
“சதி… மகளே… கதவினைத் திற… உன் தந்தை வந்திருக்கிறேன் மகளே… நீ பிராயசித்தத்தினை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை மகளே… நீ அதற்காக மேற்கொண்ட கடுமையான முயற்சிகளே போதும்… கதவினைத் திற மகளே…”
என அவர் பெரும் அலைப்புறுதலுடன் கூற, சதியின் அறைக்கதவு திறந்தது…
“என்னை மன்னித்துவிடு மகளே…” அவர் மகளிடம் மன்னிப்பு கேட்க,
“ஏற்ற பிராயசித்தத்தினை நான் நிறைவு செய்துவிட்டேன் தந்தையே… ஒரு இலட்சம் தாமரை மலர்களில் ஸ்ரீ விஷ்ணுவின் நாமத்தை நான் இயற்றிவிட்டேன்… காணுங்கள் தந்தையே… வாருங்கள்…” அவளோ பிரஜாபதியை உள்ளே அழைத்தாள்…
உள்ளே வந்தவர், அங்கு நிறைந்திருந்த தாமரை மலர்களைக் கண்டு மனம் பூரித்தார்… அது அவரின் முகத்திலும் எதிரொலிக்க,
“பாருங்கள்… என் சதியின் சாதனையை… கடமையேக் கண்ணாக இருந்து துன்பங்களை அனுபவித்த போதிலும், தியாகங்கள் பல செய்த போதிலும், ஈடுபாட்டுடன் இவள் செய்து முடித்த இக்காரியம் எனக்கு பெருமை சேர்க்கிறது… இவளை என் மகளாய் பெற்றது நான் செய்த பாக்கியமே… பிரஜாபதியின் வாரிசாகும் தகுதி இவளுக்கே முழுமையானது என்பதை நிரூபித்துவிட்டாள்… நன்றி மகளே சதி….”
உள்ளம் மகிழ கூறியவர், மகளைப் பார்த்து புன்னகைத்தபடி, அங்கிருந்த தாமரை மலர்களில் ஒன்றினை கைகளில் எடுத்து ஆன்ந்தம் சொட்ட பார்த்திட,
சற்று நொடிகளிலேயே அவர் முகம் உக்கிரத்தினை வெளிப்படுத்தியது….
அதனைக் கண்டு அனைவரும் புரியாமல் விழிக்க, சதி அவரின் அருகில் வந்து, நிலத்தில் இருந்த தாமரைகளில் ஒன்றினை எடுத்து பார்க்க, அவளும் அதிர்ச்சியில் உறைந்தாள்… அங்கும் இங்கும் ஓடியவள், ஒவ்வொரு மலராக எடுத்துப் பார்த்திட, அவள் முகம் வேதனையை பிரதிபலித்த நேரம்,
அவள் நிலையைக் கண்ட அதிதி, குனிந்து கீழே இருந்த மலர்களில் ஒன்றினை எடுத்து பார்த்திட்டு பேரதிர்ச்சியுடன் பிரசுதியிடம் கொடுக்க, அவரும் அதனை பார்த்துவிட்டு திகைத்து நிற்க, அவரின் கைகளில் இருந்து வாங்கி பார்த்து வாயடைத்துப் போய் நின்றாள் கியாத்தியும்…
அங்கு அந்நேரம் வருகை தந்தனர் மகரிஷி பிருகுவும், காசியப்பரும்…