“மன்னித்துவிடுங்கள் மகாதேவா… இந்த சிறிய நிகழ்விற்காக நான் இவ்வளவு மகிழ்ச்சி கொண்டது என் மாயை தான்… மன்னித்துவிடுங்கள் என்னை…”
என்றபடி நந்தி அந்த மலரினை பையினுள் வைத்துவிட்டு அதனை தூக்கிக்கொண்டு கிளம்ப முயலுகையில்,
“நந்தி…..” என்றழைத்தான் மகாதேவன்…
“உன்னையும் உன் மனதையும் காயப்படுத்தும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை… உன் மீது அதிக அளவிலான பிரியம் எனக்கு எப்பொழுதும் உண்டு… இந்த உலகத்தில் உள்ள மாயைகளை நான் முற்றிலும் துறந்தவன்… அதை நீ அறியாதவனும் அல்ல… நியதிகளும் சம்பிரதாயங்களும் எனக்கு இல்லை… அதிலிருந்து நான் முக்தியும் பெற்றவன் ஆவேன்… ஆள் அரவம் இல்லாத பர்வதங்களில், இருள் சூழ்ந்த வனத்தில், மரணம் நிறைந்த மயானத்தில், ஆழ்ந்த தியான நிலையில் இருப்பவன் நான்…. கடந்து போகும் நாட்களின் கணக்குகள் என் எண்ணத்தில் நிலைத்திருப்பதில்லை… கிடைக்கும் ஆகாரத்தில் உணவு உட்கொள்பவன் நான்…. அது கிடைக்காமல் போய்விடினும் அதற்காக வருத்தம் கொள்வதில்லை நான்… விவாக பந்தத்திற்காக ஏற்ற வைராக்கியத்தை கைவிடலாகுமா?... இந்த பந்தத்தினால் என்னோடு இணையும் அந்த ஜீவனை துன்புறுத்துதல் நன்றன்று…. அது நியதியும் ஆகாது… இந்த உண்மையை உன் உள்ளத்தில் பதிய வைக்கத்தான் நானும் முயலுகின்றேன்.. ஒரு ஸ்திரீயை குறித்த வாதங்கள் தான் விவாக விவகாரங்கள் ஆயிற்று… அதனையும் கடந்து, அந்த ஸ்திரீயானவள் இங்கு வர நேரிட்டால், இங்குள்ள நிலைமை என்னவாகும் என எண்ணிப்பார் நந்தி… நீ செய்யும் செயல்கள் அனைத்துமே எனது நன்மையை முன்னிட்டே என நான் நன்கு அறிவேன்… அதனை எண்ணுகையில் என் மனம் மகிழ்கிறது… நான் பரவசமடைகிறேன்… ஆயினும் எனது நன்மையை மட்டும் நீ எண்ணுவதால், அது உன் கவலையாகிறது… அது உனக்கு வேண்டாம்.. எனக்கு இப்பொழுது நான் இருக்கும் நிலையே ஆன்ந்தமான நிலை… அதனால் கவலை கொள்ளாதே நந்தி….”
தெளிவாக அழுத்தம் திருத்தமாக அதே நேரம் பொறுமையாக தன்மையுடன் கூறிவிட்டு அவன் மீண்டும் தனது தியானத்தில் ஆழ்ந்துவிட, நந்தி கவலை தோய்ந்த முகத்துடன் நடந்து சென்று, அங்கிருந்த ஒரு நீர்ப்பிரவாகத்தில் மலரினை எடுத்து ஒவ்வொன்றாக போட, அது நீரில் மிதந்து கொண்டிருந்தது….
அப்பொழுது கோபமாக சென்ற பிரஜாபதியைத் தேடி ஓடினாள் சதி…
“அன்னையே… தந்தை என் மீது கோபமாக உள்ளாரா?.. நான் அவரிடம் என்ன நிகழ்ந்ததென்று விளக்க வேண்டும்… என் மீது எந்த தவறும் இல்லை அன்னையே…”
“அதில் எனக்கு எள்ள்ளவும் சந்தேகமில்லை மகளே… நீ யாதொரு தவறும் செய்யவில்லை…”
“நந்தி யார் எவர் என்று எனக்கு உண்மையாகவே தெரியாது அன்னையே…”
“அது எமக்கும் தெரியும் மகளே… உன் மனதை அலைபாயவிடாது அமைதியாக்கு மகளே…”
“என் மனதினை பயம் முழுவதுமாய் ஆக்கிரமித்துள்ளது அன்னையே...”
“உன் தந்தை செய்யும் பூஜையில் நீ நேரத்துடன் கலந்து கொள்ள வேண்டும்… அதுமட்டுமின்றி, சந்தியாக்கால பூஜையில் உன்னை எதிர்பார்த்து காத்திருப்பார் அல்லவா உன் தந்தை?... நீ வேத மந்திரங்கள் கூறாவிடில் அப்பூஜை எப்படி நிறைவடையும்?... அதனால் உடன் சென்று பூஜையில் அமர்வாய் சதி….”
பிரசுதி கூறியதும், தயக்கத்துடன் பிரஜாபதியின் அறைக்குள் சென்றாள் சதி…
தொடரும்...!
{kunena_discuss:1001}