09. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்
சந்தா சென்றதும், அவளின் தந்தையும் தன் கண்களில் கசிந்த நீரை துடைத்துக்கொண்டு எதுவுமே பேசாது எழுந்து செல்ல,
இளவரசியும் சுதாகரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர்….
“இப்படியே சந்தா கடைசி வரைக்கும் இருக்க முடியுமா?... இளவரசி?...”
“அவ அப்படித்தான இருக்கணும்னு நினைக்கிறா…”
“நானும் அவ இன்னைக்கு மாறுவா… நாளைக்கு மாறுவான்னு நினைச்சிட்டிருக்குறேன்… ஆனா அவ என்னடான்னா….”
சுதாகர் அப்படியே மனம் தளர்ந்து போய் பேசாமல் இருக்க,
“அவ பட்ட காயம் அப்படி மாப்பிள்ளை… அவளைக் குறை சொல்லி தான் என்ன ஆகப்போகுது….” என்றார் சந்தாவின் அன்னை அன்புக்கரசி…
“என்னத்தை… நீங்களும் அவ செய்யுறது சரின்னு சொல்லுறீங்க?...”
“வேற என்ன செய்ய சொல்லுறீங்க மாப்பிள்ளை… இத்தனையையும் தாங்கிகிட்டு அவ உயிரோட இருக்குறதே பெரிய விஷயம்…. அந்த ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கும் அவ அப்பாக்கும் ஆறுதல்….”
“அத்தை….”
“உண்மைதான் மாப்பிள்ளை… கல்யாணம் முடிஞ்சும், இப்படி அந்த வாழ்க்கையை வாழ முடியாம நிக்கிறாளே என் பொண்ணு… இப்படி பாதியிலேயே எல்லாம் முடிஞ்சு போறதுக்கா அவளுக்கு நாம கல்யாணம் பண்ணி வைச்சோம்… மகராசன் நடையா நடந்து என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு போனான்… ஒரு வருஷத்துலயே என் பொண்ணு பொறந்த வீட்டுக்கு வந்துட்டா… அவனும் திரும்பி வரலை… என் பொண்ணு வாழ்க்கையும் இப்படி இந்த நிலைமைக்கு ஆளாகிட்டு… நடந்து முடிஞ்சதை மறந்துட்டு வேற வாழ்க்கையை அமைச்சி கொடுக்கலாம்னு பார்த்தா, அவ இன்னமும் அவன் நினைப்புலயே இருந்து சாகுறா… அவனோ அதைப் பார்த்துகிட்டே மௌனமா இருக்குறான்… அவனாலயும் வேற எ…..ன்….ன செ…...…?...” என்றவருக்கு அதற்கு மேல் வார்த்தை வராது அழுகை வெளிப்பட,
“அம்மா… அழாதம்மா… அவளுக்கு ஆறுதலா இருக்க வேண்டிய நாமளே, இப்படி அழுதா, அவ இன்னமும் கஷ்டம் தான்ம்மா படுவா….”
இளவரசி தன் தாயினை தேற்ற, அவரோ, “முடியலையே இளவரசி…. என்னால முடியலையே…. என் பிள்ளைக்கு அவ பிள்ளையை பார்க்க முடியலையேன்ற ஏக்கம்… எனக்கு என் பிள்ளையை இப்படி பார்க்க முடியலையேன்னு வருத்தம்… நான் என்ன தான் செய்ய?... அய்யோ கடவுளே… உனக்கு கொஞ்சமும் கண்ணே இல்லையா?... எதுக்கு இப்படி என் பிள்ளை வாழ்க்கையை சீர்குலைச்சு வச்சிருக்குற?.... அய்யோ…..”
அவரின் அழுகை அவரையும் மீறி வெளிப்பட, இளவரசியோ சமாதானம் செய்ய முடியாது தாயை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் தன் கண்களில் உண்டான நீரையும் துடைக்கும் எண்ணம் இல்லாது….
இரண்டு நாள் கழித்து, சந்தா தான் வேலை பார்க்கும் ஊருக்கு திரும்பிவிட, அங்கே அவளுக்காக காத்திருந்தனர் ரித்தியும், வேதாவும்…
சந்தாவின் முகமே அவள் இந்த இரண்டு நாட்களில் ஒரு வினாடி கூட சந்தோஷமாக இல்லை என உணர்த்த, சந்தாவின் மனநிலையை மாற்ற விரும்பினாள் ரித்தி….
“ஹே… டார்லிங்க்… வா… வா… உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம்… சீக்கிரம் வா…”
ரித்தி உற்சாகத்துடன் கேட்டுவிட்டு, ஓடிச்சென்று சந்தாவை அவள் அணைத்துக்கொள்ள, அவளிடமிருந்து விலக முயற்சித்தாள் சந்தா…
“ஹே… என்னடி… இரண்டு நாள் முழுசா உன்னைப் பார்க்காம இருந்திருக்கேன்… இப்போ வந்துட்டேன்னு ஆசையா கட்டிப்பிடிச்சா விலகிப்போற?...”
ரித்தி முகத்தை கோபமாக வைத்துக்கொள்வது போல் சந்தாவிடம் கேட்க,
“ஆமா, நீ கட்டிப்பிடிக்குறேன் பேர்வழின்னு எலும்பை உடைச்சா, யார் தான் உங்கிட்ட வருவா?...”
சமயம் பார்த்து வேதா அவளைக் காலை வாற, அவளை பதிலுக்கு முறைத்த ரித்தி,
“வேதா குரங்கே, என்ன இரண்டு நாள் உன் சொந்த ஊருக்கு போயிட்டு வந்த திமிரா?... மகளே அடக்கி வாசி… இல்லை அத்தனையையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி உன்னை காத்து போன பலூன் ஆக்கிடுவேன் ஜாக்கிரதை…” என்றாள் வேதாவிடம் வேகமாய்…
“இதோடா… இந்த சீன் எல்லாம் வேற எங்கயாவது போய் போடு… எங்கிட்ட அதெல்லாம் செல்லாது… போடி…”
“சந்தா சொல்லி வை… உன் தங்கச்சிகிட்ட… இப்படியே பேசிட்டிருந்தான்னு வை… அப்புறம் உன் தங்கச்சி வாயில ஒரு பல் கூட இருக்காது சொல்லிட்டேன்…”
“ஓ… அப்படியா?... பல்லை உடைக்கப்போற பேய் எதுக்குடி சந்தாக்காவை கூப்பிட்டு சொல்லுற?... தைரியம் இருந்தா எங்கிட்ட சொல்லுடி பார்ப்போம்….”
“சொல்லிட்டா என்னடி பண்ணுவ?...”
“நீ முத சொல்லுடி பார்ப்போம்…”
இருவரும் சரிக்கு சரி மல்லுக்கு நிற்க, “ஏண்டி… வந்த்தும் வராம படுத்துறீங்க இரண்டு பேரும்…” என்ற சந்தாவின் உதட்டின் ஓரத்தில் ஒரு சிறு புன்னகை எட்டிப்பார்க்கத்தான் செய்தது…