20. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ்

ஷைனி , தயா இருவரும் இருவேறு மனநிலையில் இருந்தார்கள். தயா , ஷைனியைச் சந்தித்த நாளிலிருந்து
சந்தோஷமாக இருந்த நாட்களையெல்லாம் நினைத்துக் கொண்டும், ஷைனி, தயாவுடன் இணைந்ததிலிருந்து நடந்த சண்டைகளையும்
அனுபவித்த துக்கங்களையெல்லாம் நினைத்துக் கொண்டும் இருவேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லாக் கதைகளும் "They lived happiy ever after" என்ற முடிவைக் கொண்டிருக்கும் தேவதைக்
கதைகள் போலில்லை இவர்களின் கதை. ஷைனி ரொம்ப அடிபட்டிருந்தாள். இனிச் சேர்ந்து வாழ முடியுமா என்ற கேள்வியிலேயே முடியாது என்ற முடிவும் தொக்கிக் கொண்டுதானிருந்தது.தயா அடித்து அடித்து ஓய்ந்து வாழ்க்கையிலிருந்து ஓடி ஒளியப் பார்த்து முடியாமல் திருந்தி வாழ விரும்பி மீண்டு கொண்டிருந்தான்.
நறுக்கிய வெண்டைக் காய்களின் கொண்டையைச் சேர்த்தெடுத்து முகம் முழுவதும் பொட்டு வைத்துக் கொள்ளும் தங்கைகளிடமிருந்து அன்னியப்பட்டுக் கிடந்த நாட்களை நினைத்தும் , மருதாணித் தொப்பிகளைக் கையில் வைத்து விடும் அம்மாவின் வாசனை முந்தானையின் உறவறுத்துக் கிடக்கும் மன உறுத்தலையும், படித்த புத்தகங்களையெல்லாம் இரவு நேரக் காபிக் கோப்பைகளுடன் நடக்கும் அப்பாவுடனான அரட்டைகளின் வெற்றிடங்கள் அழுத்தும் மனக் கசப்புகளுடனும் விட்டுப் போன நேரக் கணக்குகளுக்காக ஏங்கித் தவிக்கும்
மனக்களைப்புடனும் தயாவை விட்டுத் தூரம் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள் ஷைனி.
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம் என்று பாட்டி சொல்லும் எல்லாக் கதைகளின் ராஜாவாகவே இருந்தான் தயா. ராஜாவை மீறி ஏதும் செய்ய முடியாத மந்திரிக் கூட்டமும் மக்கள் கூட்டமும் புலவர்கள் கூட்டமும் அவனை எப்போதும் ஈர்த்துக் கொண்டேயிருந்திருக்கிறது.வீரமில்லாத ராஜா சுற்றியிருப்பவர்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தி வீரமாகக் காட்டிக் கொள்வதைப் போலத்தான் தயா ஆகிவிட்டிருந்தான்.அதனால்தானோ என்னவோ எல்லோரையும் சாட்டையடி கொடுக்கும் கொடூர ராஜாவாகவே மாறிவிட்டிருந்தான். அவன் அப்படி மாறிப் போனதற்கு ஏதோ ஒருவகையில் அவனைச் சுற்றியிருந்தவர்களும் கூட ஒரு வகையில் காரணமாகத்தான் இருந்திருக்கிறார்கள்.அந்தக் கதைகளிலெல்லாம் வரும் ராணி போல அழகான ராணியாக மட்டுமே , மந்த புத்தியுள்ள ராணிகள் போல மட்டுமே ஷைனி இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தான் தயா.
வீடு சேர்ந்தவுடன் தயா சந்திக்கப் போகும் ஷைனியில்லாத வீடு தயாவை என்ன பாடு படுத்தும் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. திருந்தி ஷைனியைத் தேடப் போகலாம்.......அல்லது அவள் யாருடனோ ஓடிப் போய்விட்டாள் என்று கணக்குப் போட்டு ஊரைக் கூப்பிட்டுச் சொல்லி மீண்டும் பழைய தயாவாக ஆகலாம்.சிலநேரங்களில் நேரம் கடந்து மனம் திருந்துதல் இப்படி விபரீதமான நிகழ்வுகளை ஏற்படுத்தி விடுகிறது.
வீட்டைவிட்டு விலகிப் போகும் ஷைனி சந்திக்கப் போகும் பிரச்னைகளும் நினைத்துப் பார்க்க முடியாதவை. தனியாகப் போராடமுடியாமல் தயாவிடமே திரும்பக் கூடும். அல்லது தயாவை விட்டுப் பெற்றோர்களுடன் வந்து சேரக் கூடும். அல்லது யாருமே வேண்டாம் என்று தனியாக நின்று போராடலாம்.
அன்பு வாசகர்களே, ஏப்ரலில் இந்த அத்தியாயத்தை பகிர்ந்துக் கொண்ட போது அருணா, கதையை இங்கே முடிக்க விரும்பினார்கள். ஆனால் நல்ல கருத்தை சொல்லும் கதை என்பதால் கதையை சட்டென்று முடிக்காமல் மேலும் தொடருமாறு அவர்களிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். எங்களின் பேச்சை ஏற்றுக் கொண்டு ஒய்வு கிடைக்கும் போது கதையை தொடருவதாக அருணா சொல்லி இருக்கிறார்கள். கட்டாயம் விரைவில் கதையை தொடருவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது...
ஆனால் முடிவிற்காக காத்திருக்கும் வாசகர்களுக்காக அருணா முதலில் பகிர்ந்துக் கொண்ட முடிவை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்... அருணா மீண்டும் கதையை தொடரும் போதும் அதை இங்கே பதிவாகி உள்ள 'தொடரும்' பகுதியில் இருந்து கரை ஒதுங்கும் மீன்களின் இரண்டாம் பாகமாக தொடருவோம்...
நன்றி!
{tab முடிவு}
ஒரு கதை சொல்லியாக இதற்கு மேல் இதை நகர்த்த முடியாமல் வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விடலாம் என்று நினைக்கிறேன். இதை யாராவது தொடரலாம் என்றாலும் சந்தோஷமே!
முற்றும்!
{tab தொடரும்}
அவரவர் நிலைகளில் அவரவர் எடுத்த முடிவு சரிதான் என்னும் பிடிவாதத்துடன் அவரவர் திசைகளில் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
அந்த விடியற்காலையில் தயாவைப் பெட்டியுடன் பார்த்த வாட்ச்மேனுக்கு வியப்பாக இருந்தது. ' என்னடா ....இது நேற்று ராத்திரி அவசரமாப் போனவர் இன்னிக்குக் காலைலே திரும்பி வந்து நிக்கிறார். ஷைனி அம்மாவுக்கு இவர் எங்கே போனார்னே தெரிலை.என்னவோ நடக்குது.....' என்று சந்தேகத்துடனேயே பார்த்துக் கொண்டு " என்ன சார் நேற்று ராத்திரிதான் போனீங்க.....அதுக்குள்ளெ திரும்பிட்டீங்க....அம்மா வேற நீங்க இன்னும் வர்லியேன்னு கவலைப் பட்டுக்கிட்டு இருந்தாங்க...."என்றவாறு
தயாவை ஓரக் கண்ணால் நோட்டம் விட்டான்.
"ம்ம்ம் ....அவசர வேலை.....அவசரமாக் கிளம்பிட்டேன்....அதான் சொல்ல மறந்துட்டேன்....அப்புறம் ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன்....."
'ஷைனி அம்மா....'அவர் சொன்னாரு நாந்தான் மறந்துட்டேன்' அப்படீன்னு சொல்றாங்க....இவரு இப்பிடிச் சொல்றாரு....' என்று யோசித்துக் கொண்டே தயாவைப் பார்த்தான்.
அவனிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக விடு விடுவென நடந்தான் வீட்டை நோக்கி. அவனை வரவேற்ற பூட்டைப் பார்த்துத் 'திக் ' என்றது. இன்னும் அபீஸ் போகும் நேரமாகவில்லை.....வாட்ச்மேன் சொல்வதைப் பார்த்தால் அவனுக்கும் ஒன்றும் தெரியாது போல ....ஷைனி எங்கே போயிருக்கிறாள் என்று.எப்போதும் சாவி வைக்கும் இடத்தில் துழாவி சாவியை எடுத்துக் கொண்டான். வீட்டினுள் நுழைந்தவுடன் அங்குமிங்குமாக நடந்தான். ஏதாவது எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாளா என்று தேடினான். எதுவும் இல்லை. அவள் மீது பொங்கி வழிந்த அன்பு இப்போ கோபமாக மாறியது. 'நான் இல்லைன்னா உடனே ஓடிர வேண்டியதுதானா.....ஒருநாள் பொறுத்துக் கொள்ளக் கூடாதா........தான் எடுத்த முடிவுதான் இதற்குக் காரணம் என்று புரிந்தவுடன் கொஞ்சம் அமைதியானான்.
வேறு யாரிடம் போவது....தீபக்தான் நினைவுக்கு வந்தான்.உடனே தீபக் நம்பரைச் சுழற்றினான்.
தீபக் கண்விழித்ததே தயாவின் ஃபோன் அழைப்பில்தான். தயா நம்பரைப் பார்த்ததும் 'போச்சுரா....இன்னிக்கு என்னத்தை இழுத்து வைத்திருக்கிறானோ ' என்று நினைத்தான். 'இன்று ஆஃபீசில் முக்கியமான் வேலை....லீவ் கீவு போடச் சொன்னால் முடியாது.....அதனால் எடுக்காமல் விட்டுவிட வேண்டியதுதான் என்று ஃபோனை சைலென்டில் போட்டுவிட்டு குளிக்கக் கிளம்பினான்.
தீபக்கும் ஃபோனை எடுக்கவில்லை....இனி என்ன செய்வது....'ஷைனி இந்த ஒருதடவை மன்னிச்சுக்கோ....எங்கே போயிருந்தாலும் திரும்பி வந்துரும்மா.....நான் மனசு முழுக்க அன்போடு உனக்காகக் காத்துட்டிருக்கேன் என்று மனசுக்குள் உருகினான்.
முதல் முறையாகத் தன் தப்புக்கெல்லாம் அழுதுக் கண்ணீர் வடித்தான். ஷைனியில்லாத வீடு துரத்தித் துரத்தி அடித்தது.அவளுடைய துப்பட்டாவை எடுத்துக் கட்டிலில் பரப்பிக் கொண்டு அதன் மேல் விழுந்து அழுதான். அவளின் ஒவ்வொரு பொருளாகத் தேடித் தேடித் தடவி ஷைனியின் உயிர் தேடினான் அதில். அவள் எங்கே போயிருப்பாள்....அம்மா வீட்டுக்கா.....ஃபோன் போட்டுக் கேட்கலாமா....இல்லை...இல்லை...கேட்டு ஒருவேளை அங்கே போயிருக்கவில்லையென்றால் அவர்களுக்கு என்ன பதில் சொல்வது....
ஒருவேளை எங்கேயாவது போய் ஏதாவது செய்து உயிர் விடப் போயிருக்கிறாளா...கடவுளே....இந்த ஒரு தடவை என் உயிரை எனக்குத் திருப்பிக் கொடு....என்று அழுதான்.
நான் சொல்லாமல் கொள்ளாமல் அவளை விட்டுப் போயிருக்கும் போதும் அவள் இப்படித்தானே துடித்திருப்பாள் என்று மனம் நினைத்த நொடி தன் மீதே வெறுப்பாக வந்தது.
அவளில்லாமல் ஒரு வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாமல் ' இனி என்ன.....?????? ' என்ற ஒரு பெரிய கேள்வியுடன் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து நின்றான் தயா.
தொடரும்
{/tabs}
{kunena_discuss:678}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.