09. நீரும் நெருப்பும் - மோஹனா
அடுத்த விமானத்திலேயே சோலைபுரம் வந்து சேர்ந்தான் ஹரி.. அத்துணை பேருக்கும் ஆச்சர்யமே... அபிக்கும் அவனுக்கும் சண்டையோ? என்று பயந்தவர்கள், அவன் உடனே திரும்பி விடவும் அனைவரின் முகத்திலும் ஆச்சர்யமும் , சந்தோசமும் தெரிந்தது.. அபி மற்றும் சுபி முகத்தில் மட்டும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி பார்வை.... அபியின் முகத்தில் சந்தேகமும் கலந்திருந்தது.... வந்தவன் தன் தந்தையிடமும் அவனின் மாமாவிடமும் வெகு நேரம் பேசிவிட்டு, உடனே வெளியில் கிளம்பிவிட்டான்...
சரியாக அவன் கிளம்பிய ஒரு மணி நேரத்திற்கு பிறகு, ஒரு நபர் மருதலிங்கபுரத்திலிருந்து வந்திருந்தார்... பாலாவிடமும், கைலாஷத்திடமும் சுபாவை பெண்கேட்டு வந்திருந்தார்........ முதலில் திகைப்படைந்தாலும், விரைவாக யோசிக்க ஆரம்பித்தனர்.. இரண்டு நாள் கழித்து முடிவை சொல்வதாக சொன்னார்கள்... ஹரி வந்ததும் இதைப் பற்றி பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள்...
ஹரியை காண முடியாமல், அவனிடம் பேசமுடியாமல் தவித்தாள் அபி... ஒரு நாள் இரண்டு நாள் ஆனது... அபியின் இந்த தவிப்பு அவளின் முகத்தில் வாட்டமாகத் தெரிந்தது... அனைவரின் கருத்தில் பட்டாலும் ஏதும் செய்ய முடியாத நிலை... அவன் எங்கே, என்ன வேலையாக சென்றிருக்கிறான் என்று எதுவும் அவளிடம் சொல்ல கூடாது என்று பெரியவர்களிடம் அன்பு கட்டளையிட்டிருந்தான்.... எனவே யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை...
“என்னப்பா சோழா... இப்போ எப்படியிருக்கு?....” கேட்டுகொண்டே உள்ளே வந்தார் அவ்வூரின் தலைசிறந்த மருத்துவராக கருதப்படும் பச்சிமுத்து...
“வலி குறைந்திருக்கு பச்சியன்னே.. ஆனால், வீக்கம் குறையவில்லை ....”
பேசிக்கொண்டே மாவுக்கட்டை பிரித்துப்பார்த்தார் ...
“அடே ரொம்பவே தேறிட்டப்பா நீ... சீக்கிரம் எழுந்து நடந்திடுவ....”
‘பின்னே சீக்கிரம் நடக்க தானே இத்தனை முயற்சிகளும்... சீக்கிரம் எழுந்து அந்த கும்பலுக்கு ஆப்பு வைக்க வேண்டும்.... அபி என்னும் புதையலை தன் வசம் ஆக்க வேண்டும்... இதெல்லாம் நடக்க முதலில் நான் நடக்க வேண்டும்... ‘ சதித்திட்டம் தீட்டினான் சோழன்...
தனக்கு வலைப்பின்னப்படுவது தெரியாமல் அபி அவளின் அறையில் அந்த புத்தகத்தை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள்...
‘இது என்ன புத்தகம்?...’ ‘இதை எப்படி படிக்க வேண்டும் ?’ ஆயிரம் கேள்விகளை கேட்டு கொண்டு எதாவது பிடிபடுகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தாள்... ஒன்றும் விளங்காமல் அதை அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு உறங்க எத்தனித்தாள்... ஆனால், உறக்கம் வந்தாள் தானே... சில நாட்களாகவே உறக்கம் அவளுக்கு போக்கு காட்டி கொண்டிருந்தது.... முன்பை கூட விட்டு விடலாம்... ஹரி வந்துசேர்ந்த இந்த இரண்டு நாட்களுமே தூக்கம் அவளுக்கு டிமிக்கி காட்டி கொண்டிருந்தது... அவனை எப்போது காண்போம் என்றிருந்தது அவள் மனம்.... மெல்ல அவர்களது சிறுவயது நினைவுகளுக்குள் பிரவேசித்தது அவளின் மனம்....
இரு குடும்பங்களும் கோடை விடுமுறையில் சுற்றுலா செல்வது வழக்கமே... ஆனால், எங்கே செல்ல திட்டமிட்டாலும் காரில் ஹரியின் அருகில் அபி தான் அமர வேண்டும்... வேறு யாரையும் அமர விடமாட்டான்... இருவரும் விளையாடிக்கொண்டே வருவார்கள்.. வாய் ஓய பேசுவார்கள்... அபி அவளின் பள்ளியில் நடந்ததை சொல்வாள்,அவனும் அவனின் பள்ளியில் நடந்ததை சொல்வான்... பிறகு, யார் யார் நண்பர்கள், யார் யார் எதிரி, ஏன் எதிரி?.. என்று எல்லாவற்றையும் பேசிக்கொள்வார்கள்... அப்பொழுது இவர்கள் இருவரும் தான் அந்த குடும்பங்களின் இளைய தலமுறையினர், பெரியவர்களும் வயது ஒத்த பிள்ளைகள், பேசட்டும் என்று விட்டு விடுவார்கள்...
அவர்கள் காலத்தின் கொடுமையால் பிரிக்க பட்ட பொழுது அனுபவித்த ரணங்கள் எண்ணற்றவை... ஹரி எல்லோரையும் தேடுவான்.. அவர்களிடம் போக வேண்டும் என்று அழுவான்.. அவனை சமாதானம் செய்வது ஹேமாவிற்கு பெரும் பாடாக இருந்தது... கொஞ்சம் கொஞ்சமாக விவரம் தெரியும் பொழுது அந்த ஏக்கம் வடுவாக மாறிப்போனது... ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் இருவருக்கும் இருவரின் நினைவு வரும்.. ஹரி அப்பொழுதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்த பார்பி பொம்மையை அபி என்று நினைத்து அதனிடம் எல்லாவற்றையும் சொல்வான்... அந்த பொம்மையை அபி என்னும் தோழியாக நினைத்து செல்லும் இடம் எல்லாம் உடன் எடுத்து செல்வான்...
அங்கே அவளின் நிலையோ வேறு... அத்தை எங்கோ சென்று விட்டார்கள் ஹரியையும் தூக்கி சென்று விட்டார்கள் என்றதும் அவளுக்கு நினைவில் வந்தது விஷ்ணு தான்.. அவனை எப்படி மாமா சமாளிப்பார்கள்?... என்றதும் அவனை சோலைபுரத்திற்கு அழைத்து வந்து விட்டாள்... அவனுக்கு இரண்டாம் தாயாக மாறிப்போனாள்... அவனை அங்கேயே பள்ளியில் சேர்த்து தினமும் வீட்டு பாடம் சொல்லி கொடுப்பாள்... அவனுக்கு வேண்டியதை செய்து கொடுப்பாள்... அவனும் அண்ணி அண்ணி என்று அவளின் பின்னே சுற்றுவான்... அவன் தவழ்ந்து, எழுந்து நடந்து, விவரம் தெரியும் பருவம் வரை அவனுடன் அபி இருந்தாள்... பிறகு கோவையில் கல்லூரியில் சேர்ந்து படித்தான்... ஆறு மாதம் ஒரு முறை சோலைபுரம் வந்து செல்வான்.. அண்ணி என்றழைத்து அவனின் அன்னையை அவளுள் காண்பான்...
இப்படி பல நினைவுளில் மூழ்கி இருந்தாள்... திடும் என மேசையில் வைத்த புத்தகம் ஒளிபெற்று மின்ன தொடங்கியது. மஞ்சள் கலந்த வெள்ளை நிற ஒளி பெற்றிருந்தது அந்த புத்தகம்.... பயத்தில் உறைந்து போயிருந்தாள் அவள்... அதை தொடர்ந்து ஒரு குரல்,
“விரைவில் வா ஸ்ரீ.... உன் உதவி எனக்கு தேவை... விரைவில் வா என்னிடம்..... “
“யா.....ர்...... நீ...?..........” பயத்தில் திக்கி திணறி வார்த்தைகள் வெளிவந்தன....
“நான்.........”
சட்டென நின்று விட்டது அந்த குரல் ...
ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை... குழப்பம், பயம் இவை இரண்டும் அவளை குத்தகைக்கு எடுத்திருந்தது... அந்த நேரத்தில் அவள் அறையின் உள்ளே வந்தான் ஹரி....
தொடர்ந்து பாயும்...
{kunena_discuss:685}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.