நேற்றைய தேர்வுகள் - அனு.ஆர்
அழிவதற்கு
வழி இருந்தால்
அங்கே
வாழ்வதற்கும் ஒரு
வழி இருக்கும்.
அழுவதற்கு
குறை இருந்தால்
அன்று
சிரிப்பதற்கும் ஓர்
நிறை இருக்கும்.
ஏங்கும்
காலத்திலும்
மனம்
சுகிக்கவும்
ஒரு சுகமிருக்கும்.
துரோகத்தின்
காலத்திலும்
அருகே
தூக்கிவிடும்
கரமிருக்கும்.
மரண
இருளின்
பள்ளத்தாக்கிலும்
உன்னோடு
ஜீவனின்
துணையிருக்கும்.
எதை உணர்ந்து
உனதாக்குகிறாய்
என்பதில்தான்
நிம்மதி உனக்கிருக்கும்.
நம் நேற்றைய தேர்வுகள்
இன்றைய நாள்.