03. ராதா கிருஷ்ணன் காதல் - கண்ணன் சொல்கிறான் - புவனேஸ்வரி
மூங்கிலே உன்னிடம் கண்ணன் சொல்கிறேன்
நீ குழலாய் மாறிப்போன இரகசியத்தை !
நங்கை அவள் விரல்களை எண்ணிக்கொண்டே
யான் உன்னை தொட்டதினால் நீ குழலானாய் !
மயிலே உன்னிடம் கண்ணன் சொல்கிறேன்
மயில்பிலி பறந்து வந்த காட்சியின் பொருளை !
யான் அவளை தேடுவதை உணர்ந்த மயில்பிலி
என் காதல் மனம் சொல்லிடத்தான் உன்னை பிரிந்து பறந்தது !
வானே உன்னிடம் கண்ணன் சொல்கிறேன்
உன் நீலநிறம் என்னிடத்தில் சேர்ந்த ஜாலத்தை !
கன்னியவள் மீது யான் கொண்ட பாசமே
வானளவு இருப்பதினால் வண்ணம் மாறினேன் !
நிலமே உன்னிடம் கண்ணன் சொல்கிறேன்
உன் பொறுமையின் அளவை நான் மிஞ்சியத்தின் விளக்கத்தை !
மங்கையவள் அனுதினமும் மனதில் காதல்கீர்த்தனம் ஆட
அவள் பாதம் தாங்கி பிரிவை தாங்கிய பொறுமைசாலி யான் !
பொய்கையே உன்னிடம் கண்ணன் சொல்கிறேன்
உன் தாமரைகள் இரவில் மலர்ந்த காரணத்தை !
காதல் பிரிவினால் கண்ணன் விழிகளில் சிதறிய
கண்ணீர்த்துளியை ஏந்திடவே மலர்ந்தன தாமரைகள் இரவில் !
{kunena_discuss:779}