அய்யோ பாவம் அரசியல்வாதிகள் !! - அப்துல் காதர் ஹசனி
ஓலைக்குடிசையில்
ஒண்டிக்கொண்டு
வடைசுற்று
விற்றுவரும்
அக்கிழவிக்கு
அளவிலா
ஆனந்தம்!
இதுவரை அவளையாரும்
கண்டுகொண்டதில்லை!
ஆனால்
இதுவோ தேர்தல் நேரம்!
களத்தில்
நிற்கும்
வேட்பாளர்களெல்லாம்
கையெடுத்து
கும்பிடுகிறார்கள்!
அவளிடம்
தங்களின் சாதனைகளை
பட்டியல் போட்டு
இதை
படித்து பாரம்மா! என்று
மிகுந்த மரியாதையோடு
நோட்டீஸ்
கொடுத்தார்கள்!
ஆனால்
அவளுக்கோ, எழுத
படிக்கத் தெரியாது!
களவாணித்தனமாய்
சிலர் காசும்
கொடுத்தார்கள்!
வருடம்
முழுவதும் தேர்தல்
நடந்தால் நன்றாக
இருக்கும் என்று
அவள்
நினைத்தாள்.
யாருக்கு
ஓட்டு போடுவது
என்று குழம்பினாள்!
தனது
தோழிகளான
சுப்பாயி.. கருப்பாயி.. மாரியாய்
என எந்த ஆயாக்களையும்
விட்டுவைக்கவில்லை!
எல்லோரிடமும்
கருத்துக் கேட்டாள்!
ஆயாக்கள்
யாவரும்
ஐ நா உறுப்பினர்
போல்
கருத்துமழை
பொழிந்தார்கள்!
அய்யோ பாவம்!
அந்த கிழவியல்ல!!!
வாக்குகேட்ட
அரசியல்வாதிகள்!
வாக்காளர்
அட்டவணையில்
அவள் பெயரே இல்லை!
இது
அக்கிழவிக்கும்
தெரியாது !
அந்த ஆயாக்களுக்கும்
தெரியாது !
அரசியல்வாதிகளுக்கும்
தெரியாது !!!
{kunena_discuss:779}