"அம்மா!", மலர் கத்துகிறாள்!
“எனக்கு எல்லாம் இப்போது என் கண்முன் தெரிகிறதுதெளிவாகத் தெரிகிறது!”
“என்னால் எல்லாவற்றயும் மணக்க முடிகிறது. சந்தன வாசனை, கற்பூர வாசனை, வாழைப்பழ வாசனை ….!”
“எனக்கு எல்லாம்இப்போது கேட்கிறது. தேங்காய் உடைக்கும் சத்தம், அரோகரா சத்தம், கை வளையல்களின் சத்தம், நாதஸ்வரச் சத்தம், மேளச் சத்தம், பெண்கள் கல, கல, என்று கதைப்பது, ஆண்கள் கத்துவது ……!”
“அந்த நாளை என்னால் நன்றாக உணர முடிகிறது”
அம்மா பேசுவதை நிறுத்திவிட்டு, மீ ண்டும் வெளியே பார்த்தபடி, தனது கோப்பையிலிருந்து காப்பியில் கொஞ்சத்தைச் சுவைக்கிறாள்.
மலர் மறுபடியும் அம்மாவுக்கு அருகே வந்து அமருகிறாள்.
அவளால் அம்மாவைப் பற்றி கவலைப் படாமல் இருக்க முடியவில்லை!
முக்கியமாக, அவளுக்கு ஏற்பட்ட பக்கவாதத்துக்குப் பிறகு, அவளது உடலை விட மூளையில் சிறிது தாக்கம் ஏற்பட்டது போன்ற உணர்வு மலருக்கு.
" ஜோதிடனைப்பற்றி என்ன சொன்னீங்க அம்மா?” மலருக்கு கதை கேட்க ஆசை, அதுவும் உண்மைக் கதை.
அவள் இவ்வளவு நாளும் ஏன் அந்தக் கதையை எனக்குச் சொல்லவில்லை?
"ஆம் அந்த ஜோதிடன்….." அம்மா பெருமூச்சு விட்டாள்.
" நான் ஒரு ரூபாய் அம்மாவிடமிருந்து திருடி, அந்த ஜோதிடனுக்குக் கொடுத்தது ஒருவருக்கும் தெரியாது".
“என் எதிர்காலத்தை அறிய ஜோதிடனுக்கு நான் கொடுத்தது அந்தக் காசுதான்”
மலர் சிரிக்கத் தொடங்கினாள். அம்மா எண்பதில் இருப்பதுபோல்தான் பதினாறில் இருந்திருப்பாளோ?.
அம்மா சிரித்தபடி, "எனக்கு என் எதிர்காலத்தைப் பற்றி அறிய ஆவல், ஆனால் நான் களவெடுத்தது பிழை"
"எனக்கு இப்பவும் அந்த ஜோதிடன் என் கண்ணெதிரில் தெரிகிறான்".
"உனக்கு நேற்று நடந்தது தெரியாது, எப்படி அந்த ஜோதிடனை இன்னும் ஞாபகமிருக்கும்?", மலர் திரும்பவும் சிரிக்கிறாள்”.
“பிறகு என்ன நடந்தது? அந்த ஜோதிடன் என்ன சொன்னான்?”
அம்மாவிடமிருந்து ஒரு சிறிது தயக்கம், ஒரு புன்னகை!
"நான் பிறந்ததில் இருந்ததுபோல் பணக்காரியாக, சாகும்போதும் இருப்பேன் என்று அவன் சொன்னான்"
ஒரு கணம் நிசப்தம்!
மலருக்குத் தெரிந்ததெல்லாம் தாத்தா ஒரு செல்வந்தர். ஆனால், அவர் இறக்கும் போது பரம ஏழை!
அம்மா பிறக்கும் போது அவரிடம் ஒரு சல்லிக் காசும் இல்லை. தாத்தா அம்மாவுக்கு ஒன்றும் விட்டுச் செல்லவில்லை!
"நான் ஏன் இவ்வளவு நம்பிக்கையோடு இருந்தேன் என்று இப்ப தெரிகிறதா?"
“ஆம்!”, மலருக்கு அம்மாவுடன் இனிப் பேசிப் பயனில்லை என்று தெரிகிறது.
"சரி அம்மா! நானும் உனக்கு வீடு வாங்க உதவப் போகிறேன்”
கண்களிலிருந்து விழும் கண்ணீர்த் துளிகளைத் துடைத்தபடி, அந்த விளம்பரப் பத்திரிகையை கையில் எடுக்கிறாள் மலர்.
அம்மாவுக்குப் பிறகு அந்த வீடு அவளுக்குத்தானே! அம்மா யாருக்கு வீடு தேடுகிறாள் என்று மலருக்குப் புரிகிறது!
கடைசி காலத்தில் அம்மாவின் அந்த ஒரு ஆசையைத் தன்னால் தீர்க்க முடியவில்லையே என்று கலங்குகிறாள் மலர்!
{kunena_discuss:785}