அவனுக்குப் பக்கத்தில் ஒருவர் கோட்டும் சூட்டும் போட்டு, கையில் ஒரு பையுடன் நிற்கிறார். ஜெகனைப் பார்த்து "உன்னை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு” என்றார், சம்பாஷணையைத் தொடங்க!
ஜெகன் அவருடன் பேசி அவரைப்பற்றி அறிந்து கொண்டான். அவர் வங்கியில் பெரிய அதிகாரி. அவர் சம்மதிக்காமல் வங்கியில் கடன் வழங்க மாட்டார்கள்.
அவர்கள்இருவரும் நண்பர்களாகி விட்டார்கள்!
“ஒரு பத்து மாடிக் கட்டிடம் கட்ட காணியைப் பார்த்து, வங்கிக் கடனுக்கு அனுமதி கொடுக்க வேணும் ”. “அதுதான் நான் அவசரமாகப்அடுத்த ஊருக்குப் போகவேணும்” என்றார்.
அவரது விருப்பத்துக்கு இணங்க ஜெகனும் அவருடன் டாக்ஸியில் போய் அந்த ஊரில் இறங்குகிறான்.
வேலை இல்லாத அவனுக்கு எங்கும் போக முடியுமே!
அங்கு ஒருவர் அந்த அதிகாரிக்காகக் காத்திருக்கிறார். அவர் அந்த அதிகாரியை ஒரு பக்கம் அழைத்துச் சென்று கத்தை,கத்தையாகப் பணம் கொடுக்கிறார். காசு அதிகாரியின் பெட்டிக்குள் நுழைகிறது. அதிகாரி ஒரு பத்திரத்தில் கையொப்பம் போட்டு பத்திரம் கைமாறுகிறது.
ஜெகனுக்கு புரிந்துவிட்டது. ஆனால், கவனிக்காத மாதிரி இருந்து விட்டான்.
"சரி வா போகலாம்" என்றார் அந்த அதிகாரி. அவர் காணியைப் பார்க்கவில்லை. வந்த வேலை முடிந்து விட்டது. வந்தவன் போய் விட்டான்.
எந்த ஏழை விவசாயியின் காணி, ஒரு பணக்காரனுக்குக் கைமாறுகிறதோ?
ஜெகன் சிந்திக்கிறான்!
இருவரும் பக்கத்தில் இருந்த ரெஸ்டூரண்ட்டுக்குப் போகிறார்கள். தனக்கு பியரை ஆர்டர் கொடுத்தபடி, அவர் "நீ பியர் குடிக்கிறியா?” என்று ஜெகனைக் கேட்கிறார்.
ஜெகன் ஒரு காப்பி ஆர்டர் பண்ணி குடித்து விட்டு, அங்கிருந்து புறப்படுகிறான்.
அவர் தனது பிசினஸ் கார்டை அவனிடம் கொடுத்து, உனக்கு வங்கியில் வேலை வேணுமென்றால் என்னை தொடர்புகொள் என்றார்.
என்ன வேலை என்ற சந்தேகம் ஜெகன் மனதில்!
ரெஸ்டூரண்ட்டுக்கு வெளியே ஒருவன் குடி வெறியில் நிற்கிறான்.
விவசாயி, பணக்காரன்,சிப்பாய்,,தீவிரவாதி, ஊர் சுற்றுபவன், இவர்கள் எல்லோருக்கும் சேர்த்து குடித்து விடுகிறான் அந்தக் குடிகாரன்.
அவர்கள் எல்லோரையும் ஏமாற்றிக் கொள்ளை அடித்து விடுகிறான் அந்த வங்கி அதிகாரி!
சிறிது தூரம் நடந்தான். இருட்டாகி விட்டது.ஏதாவது ஒரு இடத்தில் தங்கலாம் என்று எண்ணி பக்கத்தில் உள்ள ஒரு விடுதிக்குப் போகிறான்.
நன்றாகத் தூங்கி விட்டான்!
நடுச்சாமம், கதவை யாரோ பலமாகத் தட்டுவது கேட்கிறது. கதவைத் திறக்கிறான். ஒருத்தி அவனைத் தள்ளியபடி உள்ளே ஓடி வருகிறாள். அவளைத் தொடர்ந்து, திடீரென நுழைகிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.
ஜெகனையும் அந்த விடுதியில் இருந்தவர்களையும் கைது செய்கிறார்கள்.
அந்த வங்கி அதிகாரியும் அவர்களில் ஒருவர்!
ஒரு விபச்சார விடுதியிலா தங்கினேன்?
ஜெகன் சிந்திக்கிறான்!
போலீஸ் நிலையத்தில் விசாரணை!. வக்கீல் அந்த வங்கி அதிகாரியை விடுவித்து வெளியே கொண்டு செல்கிறார்.
ஜெகனை விசாரித்து, வேலை தேடித் திரியும் அவனிடம் இரக்கப்பட்டு விட்டு விட்டார்கள்.
"ஏன் நீ போலீசில் சேரக் கூடாது?" என்கிறார் அந்த போலீஸ் அதிகாரி. எப்படி போலீசில் சேருவது என்று அவனுக்ச சொல்லித் தருகிறார், வக்கீலிடம் கப்பம் வாங்கிய போலீஸ் அதிகாரி.
அந்த இளம் பெண்ணை நினைத்துப் பரிதாபப் படுகிறான், ஜெகன்! அவள் எப்படியான சூழ்நிலையில் அந்தத் தொழிலுக்கு வந்தாளோ? ஏன் அவளை ஒரு தாய், அக்கா, தங்கை என்று பார்ப்பதில்லை அந்த மனிதர்கள்?
பாவம் அவளுக்கு வக்கீல் இல்லை வாதாட?
வக்கீல் எல்லோரைரும் பிழையாக வழிநடத்தி காசு பறித்து விடுகிறான்!
ஜெகன் மறுபடியும் சிந்திக்கிறான்!
வெளி உலகத்தை அறிந்தது போதும் வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்து புகையிரத நிலையத்துக்குப் போக.ஒரு ஆட்டோவில் ஏறுகிறான்.
சிறது தூரம் செல்லவில்லை, குறுக்கே மிக வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோவை அடித்து தலை கீழாக வீழ்த்தியது.
மருத்துவ மனையில் ஒரு நாள் இருந்துவிட்டு வெளியே வருகிறான் ஜெகன்!
அப்பா தந்த காசெல்லாம் டாக்டருக்கு கொடுத்துவிட்டான். மிஞ்சியது, பிரயாணச் செலவுக்கு மாத்திரம்.
ஆட்டோகாரன் இறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்!.
அவன் குடிசை எங்கிருக்கு என்றறிந்து, அங்கு செல்கிறான்.