மறுநாள் வக்கீல் வந்திருந்தார்... பொதுவாக வீட்டுக்கு யாராவது வந்தால், இவள் தான் சென்று வரவேற்பாள்... ஆனால் இன்று அப்படி அவள் செய்யவில்லை... வேலையே இல்லாதபோதும் கிச்சனில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள்... வசி என்ன முடிவெடுப்பானோ..?? என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தாள்...
"வாங்க சார்..." என்று வக்கீலை வாசவன் வரவேற்றான்...
"Mr. வாசவன்... நான் லீகலா நோட்டீஸோட வந்திருக்கேன்... நீங்களும், உங்க மனைவியும் இதில் கையெழுத்துப் போட்டுட்டீங்கன்னா... இதை கோர்ட்ல சப்மிட் பண்ணிடுவேன்..."
"சார்... நானும் என் மனைவியும் ஒன்னா சேர்ந்து வாழலாம்னு முடிவுப்பண்ணிட்டோம்... சாரி, உங்க நேரத்தை நாங்க வீணாக்கிட்டோம்..." என்று வாசவன் சொன்னபோது ஆச்சர்யப்பட்ட வக்கீல்...
"பரவாயில்ல மிஸ்டர், நீங்க ரெண்டுப்பேரும் சேர்ந்து வாழப்போறதா சொன்னதுல ரொம்ப சந்தோஷம்... பொதுவா கோர்ட்டும் கணவன், மனைவி சேர்ந்து வாழறதை தான் விரும்பும்... நான் பணத்துக்காகல்லாம் கணவன், மனைவியை பிரிக்க நினைக்கமாட்டேன்... சரி ரெண்டுப்பேரும் இனி சந்தோஷமா வாழுங்க.." என்று வாழ்த்திவிட்டு கிளம்பினார்.
வாசவனின் முடிவு தெரிந்தபின்னும், லயா ஆனந்த அதிர்ச்சியோடு அப்படியே நின்றிருந்தாள்... அவளை தேடி அவன் உள்ளே வந்தான்...
"வக்கில்க்கிட்ட சொன்ன முடிவுல உனக்கு சம்மதம்தானே...??" என்று அவன் கேட்டதும், உடனே அவனை அணைத்துக் கொண்டாள்... அணைப்பில் இருந்தப்படியே...
"நீங்க இந்த முடிவை தான் எடுப்பீங்கன்னு எனக்கு தெரியும்... ஆனா அதுக்கு நான் தகுதியானவளா..??" இவள் கேட்டு முடிக்கும் முன்னரே அவளது வாயை அவன் பொத்தியிருந்தான்...
"நீ என்ன தப்பு செஞ்ச...?? விஸ்வேஷை காதலிக்கும்போது, அந்த காதலுக்கு உண்மையா இருக்கனும்னு நினைச்ச... இப்போ இந்த திருமண உறவுக்கு உண்மையா நடந்துக்கனும்னு நினைக்கிற... இதுல எந்த தப்பும் இல்லையே..." என்று அவன் சொன்னதற்கு இவள் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்...
"என்னப் பார்க்குற..?? நீ இந்த முடிவை விஸ்வேஷ் அக்கா சொன்னதுக்காக மட்டும் எடுத்திருக்கமாட்ட... அதுக்கும் முன்னாடியே நீ இதை யோசிச்சிருப்பேன்னு எனக்கு புரியுது...
நீயும் விஸ்வேஷும் காதலிச்சிருக்கலாம்... ஆனா இந்த 3 வருஷம் உன்கூடவே நான் இருந்திருக்கேன்... விஸ்வேஷ்க்கு உன்னை தெரிஞ்சதை விட எனக்குதான் உன்னை அதிகமா தெரியும்... விஸ்வேஷ் உன்னைப்பத்தி புரிஞ்சிக்கும்போது, என்னால உன்னை புரிஞ்சிக்க முடியாதா...??" என்று அவன் கேட்டபோது அவள் புரியாத பார்வை பார்த்தாள்...
"இதுபோல ஒரு ஏமாற்றத்தை தாங்கிக்க, கண்டிப்பா பக்குவம் வேணும்... எனக்கு புரிஞ்சவரைக்கும், விஸ்வேஷ் சொல்லிதான் அவங்க அக்கா இங்க பேச வந்திருப்பாங்க... நமக்காக விஸ்வேஷ் இவ்வளவு பெரிய தியாகம் பண்ணும்போது, நாம விஸ்வேஷ்க்காக இனி ஒரு இனிமையான வாழ்க்கையை ஆரம்பிப்போம்... என்ன சொல்ற...??" என்று அவன் கேட்டதற்கு... அவனை இறுக்கி அணைத்து தன் முடிவை அவள் தெரியப்படுத்தினாள்.
வெளியூரில் தன் நண்பன் ஒருவன் மூலமாக ஏற்பாடு செய்திருந்த வேலைக்குச் செல்ல, தன் உடமைகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான் விஸ்வேஷ்... அவனை காண அவனது அக்கா உள்ளே வந்தார்...
தன் சகோதரன் எடுத்த முடிவு சரியானது தான் என்றாலும், அவன் எந்த மனநிலையில் அந்த முடிவை எடுத்தான் என்று தெரிந்துக் கொள்ளும் ஆவல் அவருக்கு இருந்தது...
"விஸ்வேஷ்... நீ எடுத்த முடிவை என்னால பாராட்டாம இருக்க முடியல... ஆனா அந்தப் பொண்ணு மேல, நீ உயிரையே வச்சிருந்தியே... அப்புறம் எப்படி இந்த முடிவை உன்னால எடுக்க முடிஞ்சுது...??"
"எப்போ குடும்பம், வேலை, அதுக்குப் பிறகு தான் அவள் வேணும்னு, மூன்றாம்பட்சமாக அவளை நினைச்சேனோ... அதோட பலன் தானக்கா இதெல்லாம்... இந்த 3 வருஷத்துல, நாளாக நாளாக ஸ்ருதி என்கிட்ட பேசறது குறைஞ்சு, வசி என்கிட்ட பேசறது அதிகமாயிடுச்சு... ஸ்ருதி பேசற விஷயத்துல, பாதி வசி பத்தி தான் இருக்கும்... வசி பேசறதுல முக்காவாசி ஸ்ருதி பத்தி தான் இருக்கும்... இதுக்குப் பிறகும், அவங்க ரெண்டுப்பேரையும் புரிஞ்சிக்கிட்டு நான் விலகிப் போகலைன்னா, அப்புறம் நான் மனுஷனா இருக்கறதுல அர்த்தமே இல்லக்கா..."
"சரி... நீயே இதைப்பத்தி அவங்கக்கிட்ட பேசி விலகியிருக்கலாமே...?? ஏன் என்னைப் போய் பேச சொன்ன..??"
"நானா விட்டுக்கொடுத்து அவங்க முன்னாடி தியாகியாகவோ... இல்லை அவங்க முன்னாடி என்னை தப்பானவனா காட்டிக்க, அவங்களை கொச்சைப் படுத்தவோ... நான் விரும்பலக்கா.."
"சரி விஸ்வேஷ்... நீதான் விலகிட்டல்ல, அது போதாதா..?? இந்த வெளியூர் வேலைக்குப் போக வேண்டிய அவசியம் என்ன...?? அப்போ அந்த ஸ்ருதியை உன்னால மறக்க முடியாதுன்னு தானே அர்த்தம்...??" என்று, எங்கே தன்னுடைய தம்பி வாழ்க்கையை தனியாக இருந்தே கழித்துவிடுவானோ... என்ற கவலையோடு கேட்ட போது, அவனால் தீர்க்கமாகவே பதில் சொல்ல முடிந்தது...
"அக்கா... என்னால அவளை மறக்கவே முடியாதுன்னு சினிமா டயலாக் எல்லாம் பேச முடியாது .. அதுக்காக அவளை உடனே மறந்திடவும் முடியாது..
இப்போ கொஞ்ச நாளா தான் நான் அவங்கள புரிஞ்சுக்கிட்டேன்... ஆனா அதுக்கு முன்னாடிவரைக்கும், ஸ்ருதிக்கூட வாழப்போற வாழ்க்கையை பத்தி நிறைய கனவோட இருந்திருக்கேன்... ஆனா முயற்சி செஞ்சா முடியாதது இல்லக்கா... கண்டிப்பா அவளை நான் மறந்திடுவேன்...
நாங்க 3 பேரும் இதுவரை வாழ்ந்தது வாழ்க்கை இல்லக்கா... இனி வாழப்போறதுதான் வாழ்க்கை... ஒரு நல்ல கணவன், மனைவியா அவங்களுக்குள்ள ஒரு இனிமையான வாழ்க்கை...
எனக்கும் ஒருத்தி வருவா.. அவ என்னை காதலிப்பா, நானும் அவளை காதலிக்க ஆரம்பிப்பேன்... எங்களுக்கும் ஒரு இனிமையான வாழ்வு அமையும்... ஆனா அதெல்லாம் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இங்கேயே இருந்தா நடக்காதுக்கா... இப்போ இல்லன்னாலும், பின்வரும் காலத்துல, ஏதாவது பிரச்சனை வரும்... அதான் நான் வேற ஊருக்குப் போகறதா முடிவு எடுத்துட்டேன்...
அதான் அம்மாக்கூட நீயும், தம்பியும் இருக்கீங்கல்ல, அப்புறம் என்னக்கா..?? என்னோட இந்த முடிவு தான் எங்க 3 பேருக்கும் நல்லதுக்கா... இனி எனக்கும், ஸ்ருதிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...
எல்லாமே முடிஞ்சிப் போச்சு, என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி….!
This is entry #12 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ் நிலைக் கதை - முடிவுக்கான கதை
எழுத்தாளர் - சித்ரா V
{kunena_discuss:1083}