'கொஞ்ச நேரம் பேசிட்டு போலாமே..'
'இல்லமா இன்னொரு நாள் வரேன்... அவள் சொல்ல வாயெடுக்க
'ப்ளீஸ்... ' கெஞ்சின அவள் கண்கள். அமர்ந்துவிட்டாள் லாவண்யா. அவன் வீட்டை விட்டு கிளம்பிய மறுநொடி உள்ளே ஓடினாள் அவனது மனைவி. அடுத்த சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்து ஒரு குழந்தையை அழைத்தபடி வெளியே வந்தாள் அவள்.
லாவண்யா கொஞ்சம் திகைத்து போய் பார்க்க 'இவ என் பெரிய பொண்ணு...'.சற்றே தழைந்த குரலில் சொன்னாள் அஸ்வினின் மனைவி.
மூக்கின் மீது கொஞ்சம் சரிந்திருந்த மூக்கு கண்ணாடியுடன் சற்றே பயம் கலந்த பார்வை பார்த்தாள் குழந்தை.
'இவளுக்கு பேச்சு கொஞ்சம் சரளமா வராது. திக்கிதிக்கிதான் பேச தெரியும்' கலங்கிய குரலில் சொன்னாள் தாய். ' எட்டு வயசுதான் ஆகுது அதுக்குள்ளே கண்ணாடி வேறே போட்டுட்டா, நிறத்திலும் உயரத்திலும் கூட கொஞ்சம் கம்மிதான்..'
'அய்யோ... என்னங்க... குழந்தைங்க இது. இதப்போய் என்னென்னமோ சொல்றீங்க. எல்லா குழைந்தையும் அழகு தாங்க ...' இவள் குரலில் நிறையவே பதற்றம்.
'நான் சொல்லலை எங்க மாமியார் வீட்டிலே எல்லாரும் இவளை அப்படிதான் சொல்றாங்க . எங்க வீட்டுக்காரரும் இவளை பெருசா கண்டுகறது இல்லை. சின்ன பொண்ணு மேலே தான் அவருக்கு பாசம். இப்போ நீங்க வரும்போது கூட இவ உள்ளேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு. நான் எப்போ செஞ்ச தப்புக்கு தண்டனையா இவ வந்து பிறந்திருக்காளோ அப்படின்னு சொல்றாரு .' என்றாள் அந்த தாய்.
'குழந்தைகள் எப்படி தண்டனை ஆகும். வரமல்லவா அவை..' அவனை பற்றி நினைக்கும் போதே உள்ளுக்குள் கசந்து வழிந்தது அவளுக்கு.
இதனாலே இவ சரியா படிக்க கூட மாட்டேங்கறா. நான் இவளை ஏதாவது ஹாஸ்டல்லே சேக்கலாமான்னு பார்க்கறேன். ஆனா அங்கே போனா ஏங்கிப்போயிடுவாளே என் குழந்தை..' கரைந்தது அந்த தாயின் குரல்.
அந்த குழந்தையையே இமைக்காமல் பார்த்திருந்தாள் லாவண்யா.
'இவ நல்லா வரணும். இதுக்கு நான் என்ன செய்யணும் சொல்லுங்க, நீங்க ஸ்கூல் பிரின்சிபல் அப்படின்னு சொன்னீங்க அதான் உங்களை கேட்கிறேன். கொஞ்சம் ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்...' கெஞ்சலாக முடித்தாள் அவள்.. அம்மாவின் புடவையை பிடித்தபடி அவளுடன் ஒட்டிக்கொண்டு நின்றிருந்தது அந்த பிஞ்சு.
குழந்தையை நோக்கி கை நீட்டி அழைத்தாள் லாவண்யா ' இங்கே வாடா..'
தயங்கி தயங்கி அவளிடம் வந்தது அந்த பிஞ்சு 'உன் பேர் என்னடா...'
'ஊ...ர்.. வசி..' கொஞ்சம் தடுமாறிய குரலில் சொன்னது குழந்தை. அப்படியே குழந்தையை தன்னோடு சேர்த்துக்கொண்டாள் லாவண்யா.
அவள் அடி மனதில் ஒரு உறுதி பிறந்தது. இந்த குழந்தை நிச்சியமாக இன்னொரு 'காற்று போன பலூனாக மட்டும் வளர கூடாது..'
'என்ன செய்யலாம் சொல்லுங்க..' தவிப்புடன் அந்த அன்னை கேட்க..
எங்க ஸ்கூல்லே சேர்த்து நான் பார்த்துக்கறேன். விடுங்க நீங்க கவலை படாதீங்க..' உறுதியான குரலில் சொன்னாள் லாவண்யா.
'நிஜமாவா.. இவ நல்லா வருவாளா???' அஸ்வினின் மனைவி மகிழ்ச்சியுடன் கேட்க..
'ரொம்ப நல்லா வருவா..' அழகாய் புன்னகைத்தாள் லாவண்யா.
'ஆ...ன்..டி.. எ..னக்...கு..... ஹா.. ஸ்.. டல் வேணாம்..' குழந்தை மெல்ல மெல்ல சொல்ல
'ஹாஸ்டல் எல்லாம் கிடையாது உனக்கு. வீட்டிலே இருந்து படிக்கலாம்... உனக்கென்னடா... நீ குயீன்..' அழகான புன்னகையுடன் குழந்தையின் கன்னம் தட்டினாள் லாவண்யா!!!!
This is entry #27 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...
எழுத்தாளர் - வத்சலா
{kunena_discuss:1083}