அவள் செய்கை ஒன்றுமே அவனின் பார்வைக்கு தப்பவில்லை. அவன் பார்வை வழியின் இருமருங்கிலும் , அவள் மேலும் மாறி மாறிப் படிந்தது. பார்க்க சின்னஞ்ச்சிறு பெண்போல இருக்கிறாள். ஒப்பனையில்லாத முகத்தில் அவள் கன்னங்களும் , கண்களும் கவனத்தை ஈர்க்கின்றன எனக் கவனித்துக் கொண்டிருந்தான்.
தடாலென கார் நடு ரோட்டில் க்ரீச்சிட்டு நின்றது, சட சடவென அந்த காரைச் சூழ்ந்தனர் சிலர். அவர்கள் கையில் ஆயுதம். சட்டென்று தன்னுடைய பையினின்று பிஸ்டலை எடுத்து அவசரமாய் கதவைத் திறந்து அவர்களை எதிர்கொண்டான் காரை ஓட்டியவன்.
எதிர்பாரா நிகழ்வில் காரின் பின்சீட்டில் முற்றிலுமாய் தன்னை மறைத்துக் கொண்டு குனிந்து தட தடக்கும் இதயத்தோடு ஒளியும் போது அந்த காட்டான் மைக்ரோ செகண்ட் அவளைத் திரும்பிப் பார்த்து தன்னுடைய சண்டையைத் தொடர்ந்தான். அப்போது அவன் கண்களில் இருந்த பாவனை என்ன எனச் சரண்யாவால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.
அவனைப் பற்றி அவள் எண்ணியதென்ன அவன் துப்பாக்கியை கையாண்ட விதம் என்ன?, வெகு சாதாரணமாய் எதிரிகளை தாக்கினான். மருண்டு அந்த கார் கண்ணாடி மூலமாய் அவள் பார்த்துக் கொண்டிருக்க அவன் கால்பந்தாய் பாவித்து அவர்கள் ஒவ்வொருவரையும் பந்தாடினான்.
ஆறேகாலடி உயரமும் , ஆஜானுபாகுவான தோற்றமும் , நிமிர்வும் நடையும் , சற்று நேரத்தில் அவன் நொறுக்கியவர்களை பொறுக்கிச் செல்ல வந்த போலீஸ் வாகனத்தில் வந்தவர்கள் அவனை சல்யூட் அடித்த போது தான் அவளுக்கு அவன் பதவியின் உயரம் புரிந்தது.
ச்சே, பயந்தாங்கொள்ளியைப் போல பின்சீட்டில் ஒளிந்துக் கொண்டோமே அதனால் தான் அவன் என்னை அப்படிப் பார்த்திருக்கிறான் என்று மிகவும் தலைக் குனிவாக உணர்ந்தாள். அவனோ காருக்குள் அவள் இருப்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்காமலேயே தன்னுடைய டிபார்ட்மெண்ட் ஆட்களிடமிருந்து விடைப் பெற்று அவளை அவளுடைய ஊர் வரைக்கும் கொண்டுச் சேர்த்தான்.
அவனுக்கு நன்றித் தெரிவித்து விட்டு ரோட்டோரமாய் அவளை அழைத்துச் செல்ல வந்திருந்த தம்பி, அப்பாவைப் பார்த்தவள் அமைதியாக தம்பியுடன் திரும்பச் சென்றாள். தன்னோடு அப்பா வரவில்லையே எனத் திரும்பி பார்த்த பொழுது அப்பாவோடு அவன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அப்பாவுக்கு முன்னே பின்னே தெரியாத யாரிடமாவது பேசியே ஆகணும் போல எனச் சலித்தவளாய் முன்னே நடந்தாள்.
கடந்து விட்டிருந்தது ஒரு வருடம், சரண்யா வேலையில் சேர்ந்து அங்கும் நிறைய நண்பர்களை சம்பாதித்தாகி விட்டது.அவள் வாழ்க்கை மாதத்திற்கொருமுறை ஃபிரண்ஸோடு மூவி, அவுட்டிங்க் என்று வெகு சுவாரசியமாய் சென்றுக் கொண்டிருந்தது. எப்போதாவது டமால், டுமீல் சத்தம் கனவில் வரும், அதை அத்தோடு மறந்து விட்டிருந்தாள்.
பெற்றோர்கள் அவளை அவளின் வாழ்வின் அடுத்த கட்டத்திற்க்கு அழைத்துச் செல்ல முயல, முதலில் அந்த பையனோடு பேசிக் கொள்ளம்மா, உனக்கு பிடித்திருந்தால் மேற்கொண்டு பார்க்கலாம், ஒண்ணும் கட்டாயமில்லை என்றவரின் வார்த்தைக்கு மறுப்பேது சொல்ல?
புகைப்படமொன்றும் தரவில்லை, பிரவீர் என்று பெயர் சொன்னதோடு சரி, மற்ற எல்லா விபரங்களையும் அவளேக் கேட்டுக் கொள்ள வேண்டுமாம், எல்லாமும் முதலிலேயே பெரியவர்கள் சொல்லி விட்டால் அவர்களுக்கு நேரில் பேசுவதில் எதுவும் சுவாரசியம் இருக்காதாம். அதிலும் துணைக்கு தான் அவளோடு கூட வராமல் தனியாக போய் சந்திக்க சொல்லவும் அவளுக்கு திடீரென்று அப்பா ரொம்பவே முற்போகாகக ஆகி விட்டது போலத் தோன்றியது.
ஆஃபீஸிலிருந்து வரும் வழியில் அந்த குறிப்பிட்ட ரெஸ்டாரெண்டில் சந்திப்பதாக ஏற்பாடு. வேறு விபரம் தராவிட்டாலும் நல்லவேளை போன் நம்பராவது தந்திருக்கிறார்…என்று அப்பா குறித்து சலிப்பாக எண்ணியவளாய் போனை அழுத்துமுன் பிரவீரின் நம்பரிலிருந்து கால் வந்தது.
“சரண்யா உள்ளே வந்து லெஃப்ட் கார்னர்ல பாரு, லாஸ்ட் டேபிள்ல இருக்கேன் வா” என்றது ஆளுமையான குரல். சினிமாவில் ஹீரோ என்ட்ரிக்காக காத்திருப்பது போல இருந்தது அவள் நிலை.
முதலில் பேர், இப்போ குரல், இனிமேல்தான் ஆளைப் பர்க்க வேண்டும் என்று தயங்கிக் கொண்டு முன்னேற, கண்ணில் நட்பு பாவனை மிளிர அவளை வரவேற்பதற்காய் எழுந்து நின்று, “சரண்யா இதோ இங்கேதான்" என்றான் பிரவீர்.
ஹேய் இது காட்டானாச்சே, ட்மால் டுமீல் காதுக்குள் பிஜிஎம் ஒலித்தது. கச்சிதமான முடிவெட்டு , வெகு நாகரீகமான தோற்றம், ஜீன்ஸ் டி ஷர்ட்டில் முறுக்கு தெரித்த புஜங்களுடன் வெகு வசீகரமாய் இருந்தான். மொத்தத்தில் அன்றைக்கும் இன்றைக்கும் அவனிடம் மாறாத விஷயமாக இருந்த அந்த பெரிய மீசையைத் தவிர வேறெல்லாம் மாறிப் போயிருந்தது, அவனை அடையாளம் கண்டுக் கொள்ள அதுவே உதவியாகவும் இருந்தது.
வா சரண்யா, உட்கார் என்றவன் வெகு இயல்பாக அவளோடு உரையாடிக் கொண்டிருந்தான்.
பேச்சு வாக்கில் தானும் அவன் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பதை எண்ணி சரன்யாவிற்கு உள்ளூர அச்சமாகவே இருந்தது.