என்ன இவன் ரொம்ப தெரிந்தமாதிரி பேசிக் கொண்டு இருக்கின்றான், நானும் பதில் கொடுத்துக் கொண்டு இருக்கின்றேனே? என்று சிந்திக்கையிலேயே பேச்சு அவர்கள் முதல் சந்திப்பை பற்றி திரும்பியது. அச்சச்சோ அவன் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றானோ? தானாகவே அவள் தலைத் தாழ்ந்தது.
“அன்னிக்கு உன்னோட ப்ரெசென்ஸ் ஆஃப் மைண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது சரண்யா” என்றவனின் குரலில் நம்பிக்கையில்லாமல் தலையை உயர்த்தினாள்.
அன்னிக்கு நான் சட்டவிரோதமான ஒரு கும்பலை வளைச்சுப் பிடிக்கிறதுக்காக தான் போயிட்டு இருந்தேன் அதுக்கு தான் கொஞ்சம் தோற்றத்தை மாற்றிக் கிட்டேன். அவர்களைப் பற்றி கிடைத்த தகவல் படி கொஞ்சம் தூரமாக பயணம் செய்கிற திட்டம் தான் இருந்தது. இப்படி பாதிவழியிலெயே பிரச்சினை வரும்னு தெரிஞ்சிருந்தா, அன்னிக்கு உன்னை காரில் ஏற்றியிருந்திருக்க மாட்டேன்.
அப்போ சாயங்காலம் ரொம்ப நேரமாகிட்டு நீயும் மிரண்டு போய் நின்னே, உங்க பெரியம்மா கேட்டுக் கொண்டதை என்னால அப்போ மறுக்க முடியலை.
சில மாதங்கள் முன்னே மறைந்து விட்டிருந்த பெரியம்மா நினைவில் அவள் முகம் தாழ்த்த,
“நான் அவங்களை ஏற்கெனவே பார்த்து பேசினேன், உன்னைக் கட்டிக்க விருப்ப படறதா சொன்னதும் ரொம்ப சந்தோஷப் பட்டாங்க” என்றவனை வியப்பாய் பார்த்தாள்.
"என்ன நம்ப முடியலையா அன்றைக்கே உங்க அப்பாக் கிட்ட விபரம் கேட்டுட்டே தானே போனேன் என்றவனை நம்ப முடியாமல் விழித்தாள். என்ன இவனோடு ஒரு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம் பிரயாணம் செய்திருப்போமா? அதற்குள்ளாக எப்படி இவன் என்னை திருமணம் செய்ய முடிவெடுத்தான். என்ற கேள்வி அவளில் தொக்கி நிற்க, அவள் முகபாவனையைக் கண்டுக் கொண்டவனாய் தொடர்ந்தான்.
எனக்கு பொதுவா இந்த கரப்பான் பூச்சிக்கு பயந்து கத்தற பெண்கள், சும்மா சும்மா எதுக்கெடுத்தாலும் வீல் வீல்னு கத்திட்டு மயக்கம் போடுற பெண்களைப் பார்த்து கொஞ்சம் அலர்ஜி. என்னோட வேலை ரிஸ்கானது, என்னோட மனைவி துணிச்சலானவளா இருக்கணும் அப்போதான் என்னால என்னோட வேலையை பார்க்க முடியும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. நீ அன்னிக்கு நடந்துக் கிட்ட முறையில எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு.
ஆபத்து வந்ததும் உதவிச் செய்யாமல் பின்சீட்டில் ஒளிந்துக் கொண்டவளை துணிச்சல்காரி என்றுச் சொல்கிறானே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மேலே பேசினான்.
லிஃப்ட் கிடைச்சதும் அலட்சியமா இருக்காம நீ என்னை கவனிச்ச அது முதலாவது என்னை கவர்ந்த விஷயம். என்னோட தோற்றத்தைப் பார்த்து உனக்கு காரில் ஏறின நேரம் முதலே என் மேல் சந்தேகம், ஆனாலும் காச் மூச்சுன்னு சத்தம் போடாம காரில என்ன அடையாளம் எல்லாம் இருக்குன்னு தேடின……. வீட்டுக்கு மெஸேஜ் செஞ்சுக் கிட்டு இருந்த மாதிரி இருந்தது. கையிலயே மொபைலை அட்டென்ஷனில வச்சிருந்தது பார்த்தா எப்போதும் போலிஸுக்கு போன் போட ரெடியா இருந்தா மாதிரி தோணுச்சு……கூடவே கார் எந்த வழியா போகுதுன்னு அடிக்கடி கவனிச்சுக் கிட்டே அலர்ட்டா இருந்த……………எதையோ மொபைலில ஸெர்ச் பண்ணிட்டு ஒரு மாதிரி விரைப்பா நிமிர்ந்து உட்கார்ந்த…..
அச்சச்சோ என்னவெல்லாம் கவனிச்சிருக்கான் என அவள் எண்ணும் போதே அவன் எதையுமே அவளை கிண்டலாக சொல்லாமல் ஒரு செய்தியை பகிர்வது போலவே கூறிக் கொண்டிருக்க சகஜமாகினாள்.
புன்னகையோடு அவள் முகத்தைப் பார்த்தவன் அதிலும் அந்த எதிர்பாராத தாக்குதல் நடந்த போது நீ நடந்துக் கொண்ட விதம் இருக்கே அதில தான் நான் ஃப்ளாட்டானேன் என்றவனின் கண்கள் ரசனையாய் அவள் மேல் படிந்தது.
நாங்க எதிர்பார்த்த இடத்திற்கு முன்னாலேயே அவங்களுக்கு எப்படியோ தகவல் தெரிஞ்சு என்னை தாக்க வந்திருக்கிறாங்க, காரில் இருப்பது நான் மட்டும் தான்னு அவங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கணும். நான் மட்டுமா இருந்தா பரவாயில்லை உன்னை காரில் வச்சிட்டு எப்படி நான் அவங்களை சமாளிக்க போறென்னு திகைப்பா இருந்தது. அந்த நேரம் மட்டும் நீ சத்தம் போட்டிருந்தாலோ, ஏடாகூடமா ஏதாவது செய்திருந்தாலோ, அல்லது அசட்டுத்தனமா எனக்கு உதவுற மாதிரி வெளியே வந்திருந்தாலோ நிச்சயமா என்னால அந்த சிச்சுவேஷனை சமாளிச்சிருக்க முடியாது.
அவனுடைய பார்வையில் அன்றுத் தெரிந்தது பாராட்டா…எண்ணியவளுக்கு பெருமிதத்தில் முகம் மலர்ந்தது. அதே நேரம் அதுவரை அவனிடம் கண்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தவள் அவன் ஊடுறுவும் பார்வையில் அவளன்று வரை அறிந்திராத கூச்சம் தாக்க தலைக் குனிந்தாள்.
உன்னைப் பத்தி எனக்கு ஓரளவுக்கு எல்லாமே தெரியும். என்னைப் பத்தி நீயாவே தெரிஞ்சுக்கணும்னு நான் ஆசைப் பட்டேன், அதனால தான் உங்க அப்பாக் கிட்ட எதுவும் சொல்ல வேணாம்னு நான் ரிக்வெஸ்ட் பண்ணினேன்.
நான் என்னை இன்ரொடியூஸ் செஞ்சுக்கறேன். என் பேர் பிரவீர், அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ், என்னோட ஜாப் 9 டு 6 ஜாப் இல்ல, எப்ப வேணா வேலைக்கு போக வேண்டி இருக்கும். ஃபெஸ்டிவல்ஸ்க்கு, பர்த் டே, ஆனிவர்ஸரிக்கு எல்லாம் வீட்ல இருப்பேன்னு கட்டாயமா சொல்ல முடியாது. வேலையில அடிக்கடி டிரான்ஸ்பர் வரலாம். ரிஸ்கான வேலை தான் ஆனால் அதே நேரம் எனக்கு என் வேலை மனசுக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு. என்னை உனக்கு பிடிச்சிருக்கா?