2017 போட்டி சிறுகதை 106 - கணவனின் மறுபக்கம் - சாந்தி சேகரன்
This is entry #106 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை – கணவனின் மறுபக்கம்
எழுத்தாளர் - சாந்தி சேகரன்
அழகிய வேலைப்பாடு உடைய சுவர்கடிகாரம் மணி இரவு 10 என்றது .சோபா வில் அமர்ந்தபடியே உறங்கிப்போயிருந்த சந்தியா திடுக்கிட்டு விழித்தாள். ஒரு பதட்டம் அவளின் ஓவ்வொரு செல்லிலும் தொற்றிக்கொண்டது.
பரபரப்புடன் எழுந்து தன் பிரமாண்ட படுக்கையறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள். கணினியில் மூழ்கியிருந்த சரணுக்கு தன் அம்மாவின் செய்கை விசித்திரமாய் பட்டது. சில நாட்களாக அவளின் நடவடிக்கைகள் முற்றிலும் வினோதமாக இருந்தது. காரைப் போர்டிகோவில் நிறுத்தும் சப்தம் கேட்டது.
"என்ன சரண் சாப்டியா?"....எங்க அம்மா? இது என்ன கண்ணாமூச்சி விளையாட்டு? ஒரு மாசமா என் கூட முகம் கொடுத்து பேச மாட்டேங்கிறா. எனக்கு ஒன்னும் புரியல" என்று சட்டையைக் கழட்டியபடியே வந்தவரை எதிர்கொண்டான்.
"ஆமாம்பா. என்னன்னே தெரியல. கொஞ்ச நாளாவே என்னமோ மாதிரி இருக்காங்க. உங்களை யாருனு கேட்கறாங்க. ஏன்டா கண்டவங்களை உள்ளே விட்ருக்கன்றாங்க..எனக்கு ஒன்னும் புரியலப்பா".
"சரி நீ ஒன்னும் குழப்பிக்காத. இது ஏதோ மனம் சம்பந்தப்பட்ட வியாதியா இருக்கலாம். டாக்டர் கிருபாகரன் கிட்ட அழைச்சுட்டு போயிட்டு வா".
உணவு உண்ணக் கூட மனதில்லாமல் படுக்கையில் விழுந்த அரவிந்தனுக்கு சந்தியாவின் நடவடிக்கை மனதை பாரமாய் அழுத்தியது. அறுபதைக்கடந்த இந்த வயதில் மனைவியின் அன்பும் அரவணைப்பும் இல்லாத சோகம் அவரைத் தாக்கியது. கண்களில் நீர் திரண்டது.
"எனக்கு என்னடா இப்ப ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு வந்திருக்க?" சந்தியா கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தாள். டாக்டரிடம் சரண் அம்மாவின் செயல்களை பகிர்ந்துகொண்டிருந்தான். "ஆமா டாக்டர் அம்மா பேப்பர் போடுறவன் லேந்து வேலைகாரங்க,சொந்தக்காரங்கன்னு எல்லாரையும் அடையாளம் கண்டுக்கறாங்க. ஆனா எங்க அப்பாவை மட்டும் யாருனு கேக்கறாங்க".
" சரண் உங்க அம்மாவுக்கு கேபிக்ராஸ் சின்ரோம் இருக்க வாய்ப்பு இருக்கு. எளிமையா சொல்லனும்னா எண்ணமும் செயலும் மாறுபட்டுச்சுன்னா இதுபோல நிகழலாம். இது மாதிரி இரொண்டொரு கேஸேஸ் நடந்திருக்கு. இன்னும் நிறைய டெஸ்ட் எடுக்கவேண்டிருக்கு. இப்ப இந்த மாத்திரைகளை கொடுத்துட்டு வாங்க".
"அம்மா உனக்கு ஒன்னும் இல்லம்மா. இந்த மெடிசின்ஸ் கரெக்டா எடுத்துக்க. எல்லாம் சரியாயிடும்". சரண் வைத்துவிட்டுப் போன வண்ண மாத்திரைகளை சன்னல் வழியாக தூக்கியெறிந்தாள்.
"சாரி சரண் உன்னை சங்கடப்படுத்தறதுக்கு மன்னிச்சுக்கோடா" மானசீகமாய் மன்னிப்பு கேட்டாள்.
"இந்த 28 வருட வாழ்க்கையில நான் பட்ட மகிழ்ச்சியைவிட துக்கம் தான்டா அதிகம். உன் படிப்பு,வேலை எதிர்காலம்னு என் சோகத்தை மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டேன். உங்கப்பாவோட இன்னொரு முகம் உனக்கு தெரிய வாய்ப்பு இல்லை. அவர் ஏற்படுத்திகிட்ட இன்னொரு தொடர்பு, கோவலனாய் ஒரு மாதவியை தேடிபோனது, கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்னு திரும்ப வந்ததுனு.... எவ்வளவோ ரணங்கள். நான் ஒன்னும் கண்ணகி இல்ல. மன்னிச்சு ஏத்துக்கறதுக்கு. ஆனா விவகாரத்துனு போய் உன் வாழ்கையைக் கேள்விக்குறியாக்க விரும்பல.ஆனா இந்த சின்ன தண்டனையாவது தரணும்னு விரும்பினேன் அதான் இந்த நாடகம். இன்னும் கொஞ்ச நாளைக்குதான்".
மனம் லேசானதைப்போல உணர்ந்தாள் சந்தியா!.
This is entry #106 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை – கணவனின் மறுபக்கம்
எழுத்தாளர் - சாந்தி சேகரன்
{kunena_discuss:1083}