2017 போட்டி சிறுகதை 107 - காதலிக்கும் பெண்ணின் கைகள் - யோகா பாலாஜி
This is entry #107 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை – கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...
எழுத்தாளர் - யோகா பாலாஜி
மணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது. எத்தனையோ முறை நான் சுளீர் சுளீர் என்று உதை வாங்கியுள்ள போதிலும், இந்தச் சுளீரின் உபாதை மிகக் கூடுதலாவே இருந்தது. ஏனென்றால் மணப்பெண் ஜோதிக்கும் எனக்கும் இருந்த நெருக்கத்தின் சிறப்பும் கூடுதலானது. எங்கள் இருவருக்கும் மற்றுமொரு சிலருக்கு மட்டுமே தெரிந்த சில பல விவரங்களை, நான் மேடையேறிப் பேசும் தன்மை இருந்தால் கவியரசு போல பேசி எல்லோருக்கும் பறைசாற்றிவிடுவேன். அதோடு நிறுத்தாமல், கூடியிருக்கும் அனைவரையும் இங்கிருந்து ஓட ஓட துரத்தி விரட்டியடித்து விடுவேன். இவர்களின் நண்பனாக மட்டுமே என்னால் இருக்க முடியுமென்பதால் அத்தகைய செயல்களுக்கு என் மனம் ஆயத்தப்படாது.
ஜோதியின் விருப்பத்தினாலும் அவளின் கட்டளையினாலும் தான் என்னை இந்தத் திருமணத்தில் அனுமதித்துள்ளார்கள். ஒட்ட வெட்டிய முடியில் மட்டுமே ஜோதியை பார்த்த எனக்கு, நகைகளும் பூக்களும் பொருந்திய பொய் முடியோடு, அவள் யாரோ ஒரு பெண் போலத் தெரிந்தாள். ஜோதியின் டாக்டர் அப்பாவும், அரசாங்க ஊழியர் அம்மாவும் மிகக் கடினமாக சிரித்து நடித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நட்சத்திர விடுதியின் சிறிய விருந்தரையில் நூற்றிற்கும் குறைவாக சூழ்ந்திருக்கும் சுற்றங்கள் ஜோதியின் வாடிய முகத்தில் துளிர்க்கும் கண்ணீரை காணத்தவறவில்லை. அவளின் வலது முன்னங்கையில் போட்டிருந்த இரண்டங்குலக் கட்டு, அவள் பெற்றோரின் முகங்களில் பளிச்சிடும் சோகம் இதையெல்லாம் இணைத்து இத்திருமணத்தின் அவசரத்தையும் விருப்பமின்மையையும் இங்கிருக்கும் அனைவரும் உணர்ந்தாலும் உள்ளிருக்கும் மர்மத்தை அறிய அதி ஆர்வமாக இருப்பதை என்னால் முகர முடிந்தது. அந்த மர்மத்தின் விவரங்கள் அறிய எத்தனை பெரிய தொகையும் தருவார்கள் என்பது அடியேன் எண்ணம்.
நான்கு வாரங்களுக்கு முன்பு, நான் கட்டிலுக்கு அடியில் படுத்திருந்தபோது...
"எனக்குத் தெரிஞ்ச ஓபன் மைண்டெட் பெர்ஸன் நீங்க தான் டாடி. பட் நீங்க இந்த மாதிரி பேசுவீ......" - ஜோதி
(இடைமறித்து) "நா ஓபன் மைண்டெட் தான். பட் ஐ அம் ஆல்சோ ப்ராக்டிக்கல் மைண்டெட். ஆனா நா இந்த மாதிரி இருக்குன்னு நெனச்சி கூட பாக்கல. போன வாரம் வரைக்கும் எங்களுக்கு எதுவுமே தெரியாது" - கோபத்துடன் சிரித்தார் அப்பா.
"டாடி நீங்க ஒரு டாக்டர்...."
(இடைமறித்து) "டாக்டர் தான்...எங்கப்பா உங்கம்மாவை காட்டி கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லும்போதும் நான் டாக்டர் தான். அந்த மாதிரி கலாச்சாரத்த ஃபோலோ (follow) பண்றதால தான் நீ இருக்க இன்னைக்கு...இந்த உலகமே இன்னும் இங்க இருக்கு. உன்ன மாதிரி ஆளுங்க காதல்ங்குற பேர்ல கண்ட கழுதையை கல்யாணம் பண்ண விட்ருந்தாக்கா உலகம் எப்பயோ நாசமா போயிருக்கும்" - சத்தமாக பேசினார் அப்பா.
"டாடி, நமக்கு நடந்தா மாதிரியே மத்தவங்களுக்கு நடக்கறத புரிஞ்சிகிட்டு ஏத்துக்கறது ஒன்னும் பெரிய விஷயமில்ல. நம்ம எக்ஸ்பீரியென்ஸ் பண்ணாததக் கூட புரியலேன்னாலும் ஏத்துக்கறதுக்கு பேரு தான் ஓபன் மைண்டெட்னெஸ். ஏத்துக்கறமோ இல்லையோ, புரியாமலேயே அத எதிர்த்து கொடி புடிக்கறது ரொம்ப தப்பு டாடி. யு ஃபியர் (fear) வாட் யு டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் (understand). உங்களுக்கு நடந்தா மாதிரியே எல்லாம் எனக்கும் நடக்கணும்னு நீங்க எப்பிடி ஏதிர்பாக்கலாம் டாடி" - ஜோதி
"எனக்கு மட்டுமில்ல.. எங்கப்பாவுக்கு, அவங்கப்பாவுக்கும் எல்லாருக்கும் நடந்துது. உங்கம்மாவையும் கேளு. நீ தான் புதுசா ஒரு அசிங்கத்த கொண்டுவந்திருக்க" - அப்பா.
"அப்பா...நா சொல்றத புரிஞ்சிக்க மாட்றிங்கப்பா. நா உங்கள மாதிரி அம்மா மாதிரி இல்லப்பா. அம்மாக்கு தேவையானத கூட வெளிய சொல்ல மாட்டாங்கப்பா. நா அப்பிடி இல்ல. ஏன் புரிஞ்சிக்க மாட்றீங்க. நீங்க மட்டுந்தான் என்னப் புரிஞ்சிப்பீங்கன்னு நெனச்சேன் (கண்களில் கண்ணீர்) என்னால நீங்க சொல்ற இந்த டாக்டர் பய்யன் கூட வாழ முடியாதுப்பா. ஒரு வாரத்துலயே என்ன அடிச்சி வெரட்டிடுவான் அவன். அப்போ என்ன பண்ணுவீங்க" - ஜோதி
"நோ. உன்கிட்ட என்ன கொற இருந்தாலும் இவன் உன்ன விட மாட்டான். நேத்து வந்து போனாங்களே அவனோட அம்மா அப்பா, அவங்கள ரொம்ப நாளா நல்லா தெரியும் எனக்கு. ஒரே பய்யன். எனக்காக, என் பிராக்ட்டிஸ்க்காகவாவது உன்ன ஒழுங்கா வெச்சிருப்பாங்க. எந்த நாய் கூடயோ போறதுக்கு நீ இவன் கூட இருக்கறது எவ்ளோவோ பெட்டெர் (better)" - அப்பா
"டாடி, நாய் நாய்ன்னு சொல்லாதிங்க டாடி...உங்களுக்கும் அம்மாவுக்கும் தெரிஞ்ச......" - ஜோதி
"நிறுத்து...வேணா...எங்களுக்கு யாருன்னு தெரிய வேண்டா..தயவு செய்து சொல்லிடாத. அது முடிஞ்சி போன கத. இனிமே இவன் கூட தான் உனக்கு வாழ்க்கை" - அப்பா.
"அவன் என்ன பாத்தது கூட இல்ல. உங்க பிசினஸ்-க்காக என்ன கல்யாணம் பன்றான். இவன் கூட நா சந்தோஷமா இல்லன்னா பரவாயில்லையா டாடி?"