மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 11 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
என் கரங்கள் சூரியனை மட்டும் இல்லை,
செவ்வாய் கிரகத்தை கூட தொட்டு விடும்!
தேவை ,
உன்னுடைய ஒரே ஒரு புன்னகை.
SD.
மின்விளக்கின் பிரகாசத்தில் தெரிந்த கிறுக்கலாக எழுதி இருந்த கவிதையைப் படித்து யார் இந்த SD என்று மறுபடியும் யோசித்தாள் சக்தி.
“சக்தி?”
பர்வதம் பாட்டியின் குரல் பக்கத்தில் இருந்து கேட்டது.
“என்ன பாட்டி?” என குரல் வந்த திசையில் பார்த்துக் கேட்டாள் சக்தி.
பர்வதம் அவள் அருகே வந்தார்.
“இருட்டினப்புறம் இப்படி தோட்டத்தில தனியா வந்து உட்கார்ந்திருக்கீயே. உனக்கு பயமா இல்லையா? மணி ஒன்பதை தாண்டி ஆச்சு. நான் கதவை பூட்டனும். உள்ளே வந்து படியேன்ம்மா.”
அப்போது தான் சக்தியின் கையிலிருந்த நோட்புக்கை கவனித்தார் பாட்டி.
“இது ராஜாவோட கையெழுத்தாச்சே. என்ன புக் இது?”
சக்தியின் கையிலிருந்த நோட்புக்கை பவ்யமாக வாங்கிப் பார்த்தார் பாட்டி.