மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 12 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“பாட்டி, நான் சும்மா ஊரை சுத்தி பார்த்துட்டு வரேன்,” என பர்வதத்திடம் சொன்னாள் சக்தி.
சாயம் போன ஜீன்ஸும், கறுப்பு நிற டீ ஷர்ட்டும் அணித்து, கையில் சின்ன ஹாண்ட்பேக் மாட்டிக் கொண்டு நின்றிருந்தாள் சக்தி.
அவளுடைய டீ-ஷர்ட்டில் "TODAY IS A GOOD DAY TO HAVE A GOOD DAY" என்று கொட்டை எழுத்துக்கள் இருந்தன.
“என்னம்மா இவ்வளவு சீக்கிரமா எழுந்து கிளம்பிட்ட?” என அவளிடம் வினவினார் பர்வதம்,
“ரொம்ப போர் அடிக்குது பாட்டி. சும்மா போயிட்டு வரேன்.”
“சரி, போயிட்டு வா.”
முதல் நாள் சத்யாவுடன் நடந்து வந்த வழியை ஞாபகத்துக்கு கொண்டு வந்து அதே வழியில் நடந்தாள் சக்தி. சத்யாவின் வீட்டை கண்டுப்பிடிப்பது ஈசியாக இருந்தது. தென்றல்வாணன் கிளம்பி இருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டு காலிங் பெல்லை அழுத்திக் காத்திருந்தாள்.
கதவை திறந்த சத்யா, சக்தியை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.
“சக்தி, உங்களை எதிர்பார்க்கவே இல்லை. வாங்க, உள்ளே வாங்க.”
வீடு அழகாக பராமரிக்கப் பட்டிருப்பதன் அறிகுறியாக பொருட்கள் அதன் அதன் இடத்தில் வைக்கப் பட்டு தூசு எதுவும் இல்லாமல் இருந்தது.
லிவிங் ரூமில் இருந்த டிவியில் திரைப்பட பாடல் ஓடிக் கொண்டிருந்தது. மேஜை மேலே பாதி சாப்பிடப் பட்ட தோசை இருந்தது. காற்றிலும் தோசையின் நறுமணம் இருந்தது.
“சாரி சத்யா, சாப்பிட்டுட்டு இருந்தீங்களா? டிஸ்டர்ப் செய்துட்டேனா?” என்றாள் சக்தி.