“இது தான் சரி...!!! சரிம்மா ப்ரியா, மணி ஆச்சு நாங்க கிளம்புறோம்...”
ராஜமும் வர்ஷாவும் காரில் ஏறிக் கொள்ள, காரை கிளப்பினான் விக்கிராந்த். கேட்டின் அருகில் நின்றபடி அவர்களுக்கு கை அசைத்தாள் ப்ரியா...
அவனின் குடும்பத்தினரைப் போலவே, ஒரு புன்னகையுடன் பதிலுக்கு கை அசைத்தவன், முதன் முறையாக அப்போது தான் சந்தித்திருந்தப் போதும் ஏதோ பல நாட்கள் பழகிய பரிச்சயத்துடன் இலகுவாக ப்ரியாவுடன் பேச முடிந்ததை எண்ணியப்படி காரை செலுத்தினான்...
🌼🌸❀✿🌷
ஆர்த்தியின் வீட்டிற்கு சென்ற அரை மணி நேரத்திலேயே, விக்கிராந்த் சொன்ன ‘ஃப்ரென்ட்லியான பேச்சு’ பற்றி ராஜம், கணபதி, வர்ஷாவிற்கும் கூட புரிந்து போனது! பெரியவர்களான ராஜம், கணபதிக்கு மட்டும் அல்லாமல், வர்ஷாவிற்கும் கூட குமாரையும், வசந்தியையும் மிகவும் பிடித்து போனது. புதிதாக சந்திப்பவர்களுடன் பேசுவது போல் இல்லாமல் வெகு நாள் பழகிய நண்பர்களுடன் பேசுவது போன்ற அவர்களின் கலகலப்பு பேச்சு விக்கிராந்தின் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது!
“ஆர்த்தி எனக்கு இன்னும் சின்ன குழந்தை போல தான்... அவளுக்கு கல்யாண வயசு ஆச்சுன்னு நம்பவே இன்னும் கஷ்டமா இருக்கு...” என்றார் குமார்!
“நிஜம் தான் சார்... பசங்க ரொம்ப சீக்கிரமே வளர்ந்திடுறாங்க... விக்கியும் வர்ஷாவும் இப்போ தான் சண்டை போட்டு விளையாடின மாதிரி இருக்கு... ம்ம்ம்...” என கணபதியும் ஆமோதித்தார்!
வசந்தியும் ஆர்த்தியும், ராஜம் மற்றும் வர்ஷாவிற்கு வீட்டை சுற்றி காட்டினார்கள்... வீட்டின் ஒவ்வொரு அறையை பற்றியும் வசந்தியிடம் ஒரு கதை இருந்தது... அதை கேட்டு ரசித்தபடியே, ஆர்த்தியின் அறையை அடைந்தார்கள்