அவளை விரட்டிடவேண்டும் என்ற ஆசையில் எக்கச்சக்கமாக அவளை பற்றி அவதூறாக பேச அதைக்கேட்டபடி இருந்த ஆனந்திற்கு கோபத்தில் கண்கள் சிவந்தது
”இப்பவே அவளை நான் வேலையை விட்டு தூக்கறேன்” என சொல்ல அதைக்கேட்டு செல்லப்பாவின் முகம் மலர்ந்தது.
”சார் என்ன சொல்றதுன்னே தெரியலை பாவம் உங்க அக்கா வாழ்க்கை இப்படி கேள்விக்குறியானதுக்கு முழு காரணமே அந்த ரோஜாதான் சார்” என செல்லப்பா மேலும் மேலும் ஏத்திச் சொல்ல அதுவரை கடும் கோபத்தில் இருந்த ஆனந்திற்கு அதைக்கேட்டதும் திக்கென்றது
”என்ன சொல்றீங்க எனக்குப் புரியலை”
”அட அந்த ரோஜா இருக்காளே அவள் ஒழுக்கம் கெட்டவ, எப்ப பாரு உங்க மாமாகூடவே நிறைய நேரம் இருப்பா இதனாலயே அவர் வீட்டுக்கு கூட சரியா போக மாட்டார்ன்னா பார்த்துக்குங்களேன்”
”சீ என்ன இப்படி கூடவா இருப்பாங்க“
”இருக்காளே அவள் பொல்லாதவ சார், உங்க மாமாவுக்கு குழந்தையில்லைன்னு தெரிஞ்சிக்கிட்டு அவரை எப்படி எப்படியோ மயக்கி தன் கைக்குள்ள வைச்சிருக்கா”
”இதை எப்படி நான் நம்பறது, என் மாமா அப்படிப்பட்டவர் இல்லை, என் அக்கா மேல அவர் உசுரையே வைச்சிருக்காரு, அவர் எப்படி இன்னொரு பொண்ணை நினைக்க முடியும்”
”என்ன சார் இப்படி பேசறீங்க எல்லாருக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும்ல அதே போல உங்க மாமாவோட பலவீனம் என்ன 5 வருஷமாகியும் குழந்தையில்லைங்கற கவலை, அந்த கவலைக்கு மருந்து தரேன்னு ஆறுதலா பேசி பேசியே அவரை வளைச்சி போட்டுட்டா சார்”